10/30/2014

உயிரிலே கலந்தவனே !



ஏங்கும் மனத்தினது  ஏக்கத்தைச்  சொல்லவா ?!
நீங்கும் எனதுயிர் நீயின்றி!- தூங்காதே
கண்ணா  கணப்பொழுதும் கண்ணீரில்  வாடுகின்றேன்!
உண்ணா துருகும் உயிர் !

கண்ணுக்குக் கண்ணான கண்ணன் மனத்தழகைப்
பெண்ணுக்குள் வைத்தேன்  பெருமையுற!- பண்ணுக்குள்
இட்ட இனிய தமிழ்ச்சொற்கள் எந்நாளும் 
கொட்டும் பனியைக் குவித்து !

கண்ணா விரைந்தென்றன்   கண்ணீரைப் பொய்யாக்கு !
உண்ணாமல் ஊன்வாடிப்   புண்ணாகும் !- எண்ணம்
இழைத்திட வாழ்வை   இடர்காவிச் செல்லும்
அழைத்த குரல்கேட்டு அசை!

கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
தீராத வேதனையைத்  தீர்ப்பவனே !-வேராக
நானிருப்பேன்  உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில் 
தேனினிக்க வேண்டும் திரண்டு !

விண்ணோக்கிச் சென்றாலும் விட்டகலேன் என்னவனே !
பெண்ணோக்கும் பேரழகா !பேரின்பக் -கண்ணாளா !
எண்ணங்கள் ஏற்கும் இளமையும் நீயாவாய்!
வண்ணங்கள் குன்றாமல் வா !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2014

தமிழின்றி வாழ்வேது !


 

கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?...வன்னி 
மண்ணின் மணம் குன்றா மலரிவளை 
எண்ணில் அடக்குக   உகந்து !

பொன்னை பொருளை வேண்டேனே
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !

கரகம் ஆடி வந்தாலும் என்தமிழ் 
விரகம் கொண்டு வீழாது!தரகர் 
தம்மைத் தாம் அறிவீர் !துயரைச் 
செம்மைப் படுத்துக  துணிந்து !

அம்மை அவளே அருந்தமிழ் வளர்த்தாள்  !
எம்மைப் புவிமேல் புகழேந்த !செம்மை யாவும்
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே  
காவும் மனத்தின் துணிவு ! 

தும்பைப் பூப்போல் மனத்தழகை எவரும் 
அம்பை விட்டுக் கொய்யாதீர் !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !

சொல்லில் பொருளில் நயம் தேற எந்நாளும்  
அல்லிப்  பூவே வந்தருள்வாய் !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/14/2014

இதையும் கொஞ்சம் சிந்திப்போமா !




ஊரோடு  உற்ற பகையால்  ஊனுடலை வதைத்தால்
வேரோடு  கெட்டொழியும்  வாழ்வு  !சேரும்
வேதனையை விட்டகன்று வாழும் வழியைப் பார்த்தாலே
சாதனைகள் தொடரும் சாவிலும் !

கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்து பகை முடிக்கும்
துர்  புத்தி உய்யவிடாது  வாழ்நாள் முழுதும் !
எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !

முறையற்ற வாழ்வை முழுமனதோடு வாழ்ந்து முடித்தவர்
கறையை அகற்றுவது கடினம் எக் காலத்திலும் !
குறை செராத வண்ணம் குணத்தைக் காத்தவரே
இறையாகக் கணிக்கப் படுவர் இறந்த பின்னும் !

குற்றமற்ற நெஞ்சங்களைக்  கொன்று குவிக்கும் மனத்தவரைச்
சுற்றம் என்றும் ஏற்காது !ஏற்ற பொழுதிலும்
ஊற்றெடுக்கும் உணர்வுகளால் உட் பகைதான் வளரும்
மாற்றமில்லை இதனில் மறந்தும் !

தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட 
மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !
ஏற்றத் தாழ்வு எவர் உள்ளத்தில் உதித்தாலும் அவை 
சீற்றத்தைத் தந்து சீரளிக்குமே அல்லால் வாழ்வளிக்காது !

(படம் கூகுளில் இருந்து பெறப்பட்டது !நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2014

அன்பினால் தழைத் தோங்குக இன்பம் !



கண்ணே மணியே கற்கண்டே -என்றன் 
கவிதை இனிக்க வந்தவளே
உண்ணேன் உறங்கேன் நீயின்றி
உணரும் காலைப் பொழுதின்றி !
பெண்ணே அழகில்   ஓவியமே!
பொறுமை அணிந்த காவியமே!
மண்ணே போற்றும் மரகதமே!
மலரே  எழிலே வாராயோ !

கொஞ்சும் சலங்கை ஒலியாலே
கோதை உன்றன் நினைவாலே
விஞ்சும் கவிதை வடிப்பேனே
விரலால் தாகம் முடிப்பேனே
பஞ்சும் நெருப்பும் போலிங்கே
பற்றிக் கொள்ள வாராயோ !
தஞ்சம் உன்றன் நெஞ்சமென
தரையில் வந்த வெண்ணிலவே !

கண்ணா ! காதல் மணிவண்ணா!
கலக்கம் ஏனோ இந்நாளில்?
எண்ணா திருக்க வருவேனே
என்றும் இன்பம் தருவேனே
விண்ணும் மண்ணும் வியந்திடவே
விழியில் ஒளியாய் நிற்பவனே 
கண்ணும் கருத்தும் நீயல்லவோ
கவலை மறப்பாய் இக்கணமே !

தோகை மயிலுன் ஆட்டத்தைத் 
தொடர்ந்தும் பார்க்க வருவேனே !
சோகம் தீர்த்து அந்நாளில் உனைச் 
சொக்க வைப்பேன் என் கண்ணா 
பாகப் பிரிவினை எமக்குள்ளா?
பயத்தைப் போக்கு துயர் நீங்க 
காகம் வந்து சேதி சொல்லும் 
காதல் தேவதை வரும் முன்பே !





அன்னத்துக்கும் புறாவுக்கும் மட்டுமா தூது 
சொல்லத் தெரியும் !காக்கைகளாலும் 
முடியும் :))  


உண்ணும் போதும் சரி ஓர் உயிர் பிரிந்த போதும் சரி காகங்களின் ஒற்றுமையை விஞ்சும் சக்தி உலகில் எந்த சீவ ராசிகளுக்கும் கிடையாது என்பது தான் நான் அறிந்த உண்மை ! அது சரி எதுக்கு இப்போது அம்பாளடியாள் காகத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ? இன்னுமா புரியவில்லை!:) காகம் ஒற்றுமையின் சின்னமாகும்  ! இன்று சனீஸ்வர விரதத்தின் இறுதி நாள் சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு உணவு அளித்து மகிழ்வதன் மூலம் சாப விமோற்சனம் அடையலாம் என்கிறது சகுன சாஸ்திரங்கள் அதற்காக இன்று மட்டும் அல்ல என்றுமே முடிந்தால் (காகங்களுக்கு மட்டும் அல்ல ஏனைய சீவ ராசிகளுக்கும்  )உணவு அளியுங்கள்.அன்பினால் ஒற்றுமை தழைக்கும் ஒற்றுமை தழைத்தால் உலகமே இன்பமயமாகும் !

                                                              



அன்பு உறவுகள் அனைவருக்கும் சனீஸ்வர பகவானின் நல்லாசியினால் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கிட  இனிய நல் வாழ்த்துக்கள் !

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2014

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் !



பெண்ணின் உடலைப் படம்பிடித்து எப்போதும்
கண்ணுக்(கு)  இழிவாகக் காட்டாதீர் !- மண்ணின்
பெருமையும் குன்றிவிடும் பண்பாட்டை விற்றால்!
அருமை உணர்ந்து அகற்று !

கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
பெண்ணை எவரும் படமாக்க !-விண்ணவரே
போற்றும் பதுமையைப்   போற்றாது எந்நாளும்
தூற்றுவது  எம்மவரின்  ஊழ் !


                                 



தேசத்தின் நன்மைக்குத் தீங்குவிளை விப்பவரை
நாசம்செய் நன்மனமே நாவினால் !-மோசமான
எண்ணங்ளை வேரோடு எரிப்பதே  எம்கடன் !
உண்ணவரும் போதும் உணர்!

பண்பாடு குன்றினால் பாரதமே சீரழியும்!
திண்டாட  வைப்பவரைத் திட்டித்தீர்!- கொண்டாட  
நாமும் வருவோமே நாளுமிந்தப்  பொன்நாளை !
காமுகரின் கண்பறிதுக் காட்டு !

                                                             

                                                          

கண்ணுக்கும் தெரியாத கயமை உணர்வுகளால்
கழுத்தறுக்க வந்தவரைக் கண்டபடி திட்டுங்கள் !
மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள் !

ஊழல் பெருச்சாளிகள் ஊரைச் சுரண்டுகையில்
கூழும் கஞ்சியும் எமக்கெதற்கு !
வாழும் போது வன் கொடுமைகளை எதிர்ப்பவரே
நாளும் இங்கு  போற்றப் படுவர் !

                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2014

81வது பிறந்த நாள் இன்று !



அன்பைப் பொழியும் மனத்தாலே 
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும் 
இனிய நல் வாழ்த்து உரைபீரே !

தந்தை என்றோர் தெய்வத்தைத் 
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம் 
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...

பொங்கும் தமிழின் ஆர்வலரை 
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை 
எங்கள் உயிரை உணர்வலையை 
என்றும் இறைவன் காக்கட்டும் !

விண்ணும் மதியும் வாழ்த்திடவே 
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும் 
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே 
கருணை வெள்ளம் காக்கட்டும் !

எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி 
எல்லா நலனும் தங்கட்டும்  
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை 
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் 
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல் 
பூப்போல் இங்கு சிரித்திடவே ....





                                    இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
                                                                     
                 

                                                   இவை அனைத்தும் என் 
                      வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2014

சரஸ்வதி தாயே போற்றி போற்றி ..


அன்னை சரஸ்வதி தாயே போற்றி 
அறிவின் நுதலே  அழகே போற்றி 
பொன்னில் வடித்த சிலையே போற்றி 
பொறுமை காக்கும் கலையே போற்றி 

இன்னமுத மொழியே போற்றி 
இருளைப் போக்கும் ஒளியே போற்றி 
விண்ணவரும் தொழும் தேவி போற்றி 
வெண்டாமரை தாங்கும் மலரே போற்றி

பண்ணில் நிறைந்த பதமே போற்றி
பயிலும் நாவின் அசைவே போற்றி 
கண்ணின் மணியே கருத்தே போற்றி 
கருணைக் கடலே அமுதே போற்றி 

கற்றவரும் தொழும் தேவி போற்றி 
கல்லாதவர்கும் அருள் நீ போற்றி 
உற்ற துணை நீ உணர்வே போற்றி 
உயிராம் மெய்ஞாதின் வழி நீ போற்றி 

வற்றாத கல்விக் கடலே போற்றி 
வறுமையைப் போக்கும் வாழ்வே போற்றி 
சிற்றின்பம் தவிர்க்கும் சிறப்பே போற்றி 
பேரின்பம் அருளும்  பெருமையே போற்றி 

நற் தவம் ஏற்கும் நலனே போற்றி 
நவராத்திரியின் நாயகி  போற்றி 
அற்புத நிலையே அம்மையே போற்றி 
அரும் பெரும் பாக்களின் அழகே போற்றி 

புத்தகத்துள்ளுறை மாதே போற்றி 
பூவின் மணமே புலனே போற்றி 
சித்தம் மகிழும் நினைவே போற்றி 
சிந்தும் இன்னிசை மழையே போற்றி 

வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி 
கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி 
கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......

                                                         





அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அம்பாளடியாளின் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் ..........
                                                       






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.