6/22/2015

இன்னும் தயக்கம் எதற்கு !

                                                       

பெத்தமனம் பித்தென்பார் பிள்ளைமனம் கல்லென்பார் 
எத்தனைதான் சொன்னாலும் ஏறலியே !நித்தம் 
மலைபோல  யுத்தத்தால் மாமனத்தை வாட்டும்
நிலைபோக வேண்டும் நிலத்து !


ஏற்ற இறக்கம் பாராமல்
   என்றும் தயவாய் வாழ்ந்தன்பைத்
தேற்றும் பழக்கம் இல்லாதார்
    தேடிக் கெடுப்பார் நட்பைத்தான் !
வேற்றுக் கிரகம் சென்றாலும்
    வேத னைமிக  வந்தேகும்
மாற்றம் இதனில் உண்டோசொல்
    மானம் பெரிதாம்  என்போரே ?...

பாசம் மனத்தில் உண்டானால்  
  படரும் கொடிபோல் நம்வாழ்வு !
வேசம் மிகுந்த  நட்போடு 
   வேண்டாம் இனியும் கொண்டாட்டம் !
நாசம் இழைப்பர் வேண்டாதார்
    நாளும்  இதையே  காண்கின்றோம்!
வாசம் மிகுந்த பூப்போல
    வாழும் உறவே கேட்டுக்கொள் !

உள்ளம் மகிழ்வில் திண்டாட
    ஊனும் உணர்வைக்  கொண்டாட
வெள்ளம் எனத்தான் பாயாதோ
    வேசம் இழந்த சந்தோசம் !
அள்ளக் குறையா அன்பைத்தான்
    ஆளும் மனிதன் வாழ்கின்றான்!
வள்ளல் இவனை  எப்போதும்
    வாழ்த்த மறந்து போகாதீர் !

கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்
   காயப் படுத்தும் தீயோரைத்
தள்ளி எவரும்   வைத்தால்தான்
   தம்முள் அமைதி உண்டாகும் !
எள்ளி நகைப்போர் நட்பாலே
   என்றும் அமைதி கிட்டாதே !
முள்ளில் விழுந்த சேலைபோல்
    முற்றுப் பெறுமே இவ்வாழ்க்கை !

அன்பைப் பொழிந்து எந்நாளும்
    ஆன்மா மகிழச் செய்திட்டால்
துன்பம் எவர்க்கும் வாராதே
    துப்புத் துலக்கிப் பாருங்கள் !
இன்பம் அதுவே தான்மிஞ்சும்
    என்றும் எதிலும்  தப்பாமல்
நன்மை இதையே நாம்நாட  
   நாடும் செழிக்கும் தன்னாலே !

கன்னல் மொழியின் ஆற்றல்நம்
   கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.
இன்னல் துடைக்கும்  நற்செய்தி
    என்றும் அறியத் தந்துய்வோம் !
அன்னை எமக்குக் கற்பித்த
    அன்பே உலகில் பொன்..என்றே 
தன்னை மறந்து வாழ்வோரும்  
     தம்மால்   திருந்தி வாழட்டும் !

                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. //அன்பே உலகில் பொன்..என்றே
    தன்னை மறந்து வாழ்வோரும்
    தம்மால் திருந்தி வாழட்டும் !// நடக்கட்டும்
    அழகான வரிகள் தோழி!

    ReplyDelete

  2. "கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்
    காயப் படுத்தும் தீயோரைத்
    தள்ளி எவரும் வைத்தால்தான்
    தம்முள் அமைதி உண்டாகும்!" என்ற
    சிறந்த வழிகாட்டலை வரவேற்கிறேன்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அன்பைப்பொழிவோம். அதில் தருபவருக்கும், பெறுபவருக்கும் சுகம், அமைதி கிடைக்கும். மற்றதை விடுப்போம்.

    ReplyDelete
  4. கன்னல் மொழியின் ஆற்றல்நம்
    கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.
    இன்னல் துடைக்கும் நற்செய்தி
    என்றும் அறியத் தந்துய்வோம் !
    அன்னை எமக்குக் கற்பித்த
    அன்பே உலகில் பொன்..என்றே
    தன்னை மறந்து வாழ்வோரும்
    தம்மால் திருந்தி வாழட்டும் !

    அருமையான வரிகள் தோழி இவை ரொம்ப ரசித்தேன். எப்படித் தான்
    இப்படிக் கொட்டுகிறது வார்த்தை மழையாக. வாழ்த்துக்கள் மா!

    ReplyDelete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஒவ்வொரு வரியும் அருமை. தொடக்க வேண்பாவாகட்டும் அறுசீர் விருத்தம் ஆகட்டும் இனிமை இனிமை

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை! மகளே! உனை நினைத்தால் பெருமை!

    ReplyDelete
  8. கன்னல் மொழியின் ஆற்றல்நம்
    கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.
    இன்னல் துடைக்கும் நற்செய்தி
    என்றும் அறியத் தந்துய்வோம் !
    அன்னை எமக்குக் கற்பித்த
    அன்பே உலகில் பொன்..என்றே
    தன்னை மறந்து வாழ்வோரும்
    தம்மால் திருந்தி வாழட்டும் ! // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அன்பைப் பொழிந்து எந்நாளும்
    ஆன்மா மகிழச் செய்திட்டால்
    துன்பம் எவர்க்கும் வாராதே
    துப்புத் துலக்கிப் பாருங்கள் !
    இன்பம் அதுவே தான்மிஞ்சும்
    என்றும் எதிலும் தப்பாமல்
    நன்மை இதையே நாம்நாட
    நாடும் செழிக்கும் தன்னாலே !//

    அருமை...அன்பினால் இந்த உலகத்தையும் வளைத்திடலாமே....இன்பம் மட்டுமே பொங்குமே....அருமையான வரிகள்....எப்படி இப்படிக் கலக்குகின்றீர்கள் சகோதரி...

    ReplyDelete
  10. அன்பாய் அருமையாய் உள்ளது் நீண்ட நாள் கழிந்து இங்கு சந்திப்பது மகிழ்ச்சி

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........