12/16/2015

பேச்சில் இனிமை வேண்டும் !

                                               
                                     

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !

கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை  பகையைத் தேடும்
......பரிதாப  நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !

பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !

மண்ணில்நாம் கொண்டவெழில்   மறைந்து போகும்
......மறையாத நினைவாகப்  பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
......எதிரிக்கும் நம்பேச்சும்  இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/15/2015

உதவும் கரங்களே ஒன்று கூடுவீர்!

                                         

எங்கெங்கோ நடிகைக்கும்  கோயில் கட்டி
......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார்
தங்கத்தைக் கூடத்தான்  தாரை வார்த்தார்
......தரணியிலே இன்றுதவ யார்தான் வந்தார் !
அங்கத்தின் அழகுகெடும் ஆட்டம் நிற்கும்
......அன்பொன்றே  தான்வாழும் இந்த மண்ணில்!
இங்கிதனை நாமுணர்ந்தால் போதும் நல்ல
......எதிர்காலம் தேடிவரும் எம்மைக் காக்கும் !

கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் இன்று
.......கரைசேர  வழியென்ன எண்ணிப் பார்ப்போம் !
உண்ணநல்ல  உணவுதந்தே  உடையும் தந்தே
.......உயிர்காப்போம்  ஒப்பற்ற துணையாய் நிற்போம் !
தண்ணீரும் வற்றாமல் பாயும் போது
........தரையிலுல்ளோர் படும்பாடு அறிவோம் நன்கு!
புண்ணியமாய்ப் போகுமிங்கே  ஆற்றும் சேவை
........புறப்படுவீர் எம்மோடு கைகள் கோர்த்து !

உப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்
.......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட
ஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா
.......ஓயாமல் இந்நினைவே ஓடு தப்பா !
இப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம்
.......இளையோரே கைகோர்ப்பீர் மண்ணில் மக்கள்
எப்பொழுதும் இதைமறவார் உயிரைக் காத்தல்
.......எம்கடமை என்றுணர்ந்து விரைந்து வாரீர் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/13/2015

எல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை !

தெய்வத்தின் மீதெந்த  குற்றம் இல்லை! 
......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை 
மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே !
.......மேதினியில் இனியிதற்கே  இல்லை ஈடே !
பெய்யாதோ மழையென்று ஏங்கி நின்றோம் 
.......பெரும்துயரப் பட்டவர்நாம்  என்ன செய்தோம் 
 உய்யவழி சமைத்திடுவோம்! இயற்கை காப்போம்!
 ......ஒற்றுமையாய்த்  தொண்டாற்றித் துன்பம் தீர்ப்போம்!

மண்மீது துயரனைத்தும் நீங்க  வேண்டும் 
......மறுபடியும் மலர்பூத்துக் குலுங்க வேண்டும்!
எண்ணம்போல் மக்களெல்லாம் வாழ வேண்டும்   
......இறையருளால் இவையாவும் நிகழ வேண்டும் !
வண்ணப்பூஞ் சோலையென இன்றெம்  நாடு
......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை !
கண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் !
.......கணக்கிட்டால் எல்லாமும்  இயற்கை யாகும் !

பொய்யாக வாழுகின்றோம் கோட்டை  கட்டிப்
...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி !
உய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட
.......உலகத்தில் இல்லாமல் உயிரும் போகும் !
மெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே
.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு!
செய்கின்ற பணியாவும் இயற்கை ஓங்கச்
......சிறந்திட்டால் துயர்மேவ வழியும் உண்டோ? 

சாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்
.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் !
காலையிலே கண்விழித்தால்  போதும் இன்று
......காணுகின்ற காட்சியென்ன   ஊழல் தானே !
ஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே
.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் !
ஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு
......ஆகும்முன்னர்க்  காத்திடுவீர்  இயற்கை தன்னை !

கடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்
......கைகூட வேண்டுமது இல்லை என்றால்
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்
.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் !
திடமான சிந்தனையால் வெற்றி கண்டு
......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு !
இடரோடு போராடி இனியும் வெல்ல
......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.