5/29/2015

மான்விழியே வா அருகே !

                          



அன்னத்தைக் கண்டதும் ஆசைதான் பொங்காதோ ?..
இன்னலே கூடிடும் என்றாலும் !-உன்னை 
அடைவதே  இன்றென்றன்  ஆசையடி! இன்தேன் 
அடையத் தருவாய் அணைத்து !

காதல்தான் வந்திங்கே கண்முன்னே நின்றாட 
மோதல்தான் ஏனடி மோகனமே !-ஆதலால் 
ஆடவன் எண்ணம்போல் அன்பைநீ கொட்டிப்பார் !
தேடலில் கிட்டுமே தேன் !

வண்டுக்குப் பூவோடு வந்ததிந்தச் சொந்தம்தான் 
கண்டுள்ளம் பொங்கட்டும் காவிரிபோல் !-பெண்ணே 
விழியாலே உண்டு விரைந்தோடிச் சென்றால் 
அழியாதே நான்கொண்ட அன்பு !

திண்டாட வைத்ததனால் தீமூட்டிச் செல்லாதே !
பண்பாடு மிக்கநற் பைங்கிளியே !-மண்ணில் 
உனக்கெனவே நான்பிறந்தேன் ஊர்போற்றும் வாழ்வே !
மனக்குழப்பம் விட்டிங்கே வா !

உன்னோடு நானிருக்க உள்ளத்தில் தேன்சுரக்கும் !
என்னை அறியாயோ என்னுயிரே !-முன்பே 
அணைபோட்டு வைத்தும் அடங்காது காதல் !
கணையாழிக் கண்களைக் காண் !

அச்சத்தை விட்டுநல் ஆனந்தம் கொள்வோமே !
இச்சை பெருக இணைவோமே !-பச்சை 
மலையழகும் கூத்தாடும் மானழகும் காண 
சிலையழகே இன்னும் சிரி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/25/2015

தமிழ்! எங்கள் உயிரின் இருப்பு !

                                               

பொன்போன்ற செந்தமிழைப் போற்றுவதே என்கடன்
வன்முறையால் இவ்வெண்ணம் வற்றாதே!- அன்றில்
பறவையான்  பாடாது போனாலும் என்னுள்
உறவாடும் நீயே உயிர்!

சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும்
எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!- நல்ல
கனியுண்ட நாவும்தான் காத்திருக்கும் பாரில்
இனிய தமிழுக்கே(து) ஈடு !

எண்ணம் அலைபாயும் இன்பத்தேன் நீயென்று
வண்ணம் நிறைந்திட  வா..தமிழே !-வெண்பா
வகையறிந்து நான்பாட வேண்டுமிங்கே நாளும்
பகைவிரட்(டு) என்னுள் படர்ந்து !

சொல்லாட்சி மேலோங்கச்  சொந்தங்கள் கூடிவரும்
நல்லாட்சி நீதருவாய்  நாளுமிங்கே !-அல்லல்
இனியேது ?..வாழ்வருளும் ! இன்பத்தேன் பாயும் !
தனித்தமிழால் ஓங்கும் தரம்!

வண்டமிழால்  நாம்வாழும் வாழ்வினிக்கும் செந்தேனை
உண்டதோர் ஆனந்தம் ஊடுருவும் !-அண்டம்
கடந்தெங்குச்  சென்றாலும் கற்றவர்க்(கு) இன்பம்
தொடர்ந்திங்கு நல்கும் சுகம் !

எண்ணற்ற நற்பலனை எந்நாளும் பெற்றிடலாம்
வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
முதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! என்னுள்
புதுமொழி பூப்பாள் பொலிந்து !

                                               
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.