2/27/2014

மண்ணை மதிக்கும் மனத்தளவு பெண்ணை மதிக்க வரும் உயர்வு !


பாயும் புலியும் தாயானால் 
பண்பில் சிறந்து விளங்கிடுமே!
நாயும் அது போல் விலங்கெல்லாம் 
நம்மைப் போன்றே செயற்படுமே! 
சேயும் மகிழ உணவளித்து 
செம்மையாக வளர்த்திடுமே மனம் 
தேயும் நிலவா சொல்லிங்கே 
தென்பாய்ப் பேசும் ஆண்மகனே!

பெண்ணைப் போற்று இந்நாளில் 
பெருமை சேர்க்கும் நன்னாளில் 
கண்ணைப் போல காத்தவள்தான் 
கடவுள் தந்த உன்தாயும்!
விண்ணைத் தாண்டிச் சென்றாலும் 
விருப்பம் எல்லாம் உன் மீதும் 
எண்ணைத் தாண்டும் கடல் போல 
எல்லாம் அறிந்த ஆண்மகனே..

தாழ்த்திப் பேசுதல் மடமையடா! 
தர்மம் அவளின் உடமையடா! 
வீழ்த்திச் செல்ல முடியாதே 
வீரம் கொண்ட பெண்ணினத்தை
வாழ்த்தி வணங்கு எந்நாளும் 
வன்மம் வேண்டாம் மனத்தளவும் 
ஆழ்த்தி விடுவாள் மங்கையவள் 
அழகாய்த் திகழும் கங்கை மகள்!

எழுச்சி மிக்க பாடல்களை 
எழுதித் தள்ளும் கவிஞரெல்லாம் 
புகழ்ச்சிக்காக எழுதவில்லை 
புதுமை படைத்த பெண்ணினத்தின் 
நெகிழ்ச்சி மிக்க செயல்திறன்தான் 
நெஞ்சே இதனை அறிவாயோ!
மகிழ்ச்சிப் படுத்து உறவறிந்து 
மறந்தும் பெண்களைத் தூற்றாதீர்! 

பெண்ணின் பெருமை உலகறிந்து 
போற்றிப் பாடும் இந்நாளில் 
கண்ணின் மணியைக் கற்கண்டை 
கல்லுக் குள்ளே மறைக்காதே 
விண்ணின் அளவைத் தாண்டுமடா 
விரும்பிக் கற்கும் அவளறிவை 
மண்ணின் பெருமை தனைச் சொல்லி 
மகிழ்வாய் நாமும் ஏற்றிடுவோம் !

விலைகள் பேசி விலக்காதே 
விலை மாதென்று நினைக்காதே 
உலையும் எரிய வீட்டினிலே 
உண்மையாக உழைப்பவளை ஏன் 
அலைகள் போல அரிக்கின்றாய் 
அடிமை என்றே  நினைக்கின்றாய் ?
கலையும் அவளால் வளருதடா 
கருணை எதிலும் பொழியுதடா !

உருவம் மென்மை என்றாலும் 
உள்ளம்   கவர்ந்த    பெண்களுக்கு 
பருவம் மாறத் துணிவுமிங்கே 
பனி போல் விலகிச் சென்றிடுமா ?.
கருவம் வேண்டாம் எமக்குள்ளே 
கருவைச் சுமக்கும் தாய் முன்னே 
அருவம் உருவம் அவள் தானே  
அருவுருவம் போல் வந்த ஆண்மகனே ?..!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/25/2014

சக்தி ஒளி முக்தி தரும் !


நிலை     இல்லா    உலகினிலே 
நிலையற்ற  பொருளைத் தேடி 
அலைகின்ற    மனத்தின்        ஆசை 
அறியாது அன்பின் ஆழம் .. 
விலை பேசித் தோற்றுப் போகும் 
வீணான  முயற்சி எல்லாம் 
மலை போல உயர்ந்து நிற்கும் 
மாண்பு மிகு பண்பின் முன்னால் !!

சுணை கெட்ட மாட்டைப் போல 
சொன்னாலும் கேட்கா திங்கே  
அணை தாண்டி வருவோர்க்கெல்லாம் 
அவள் தான்டி   காவல் என்றும் !
துணையாக நிற்கும் தாயைத் 
தொழுகின்ற மனங்கள் வாழும் 
கணையாளி இழந்த கைபோல் 
கவலைகள் இனியும் எதற்கு ?.

மருவத்தூர்    அன்னை முகத்தை 
மனதிற்குள் நிறுத்தி வைத்தால் 
பருவத்தால் பெய்யும் மழை போல் 
பாசத்தைப் பொழிந்து நிற்பாள் 
கர்வத்தை விட்டுத் தள்ளிக் 
கண்ணுக்குள் கருணையைத்  தேட
உருவத்தைக் காட்டி மறைவாள் 
உள்ளன்பு  நிறைந்த சக்தி !! 

நோய் தீர்க்கும் மருந்தும் அவளே 
நோகாத மனத்தின் இன்பம் 
காய் அல்ல கனியாய் மாற 
காற்றாக      வருவாள்     எங்கும் 
தாய் போல வருமா இங்கே 
தான் தேடும்    செல்வம்   எல்லாம்?..!!
வாய் விட்டுச் சிரிக்க்கும் முன்னே 
வந்தன்னை முகத்தைப் பாரு !






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/21/2014

தமிழ் மொழியே என் தாய் மொழியே வாழிய நீ ....

























கண்ணே!  மணியே!  விழியொளியே! 
கவிதை தந்த  தேன்மொழியே! 
பெண்ணே   முத்தமிழ்க்    காவியமே! 
பெருமை நிறைந்த தாய்மொழியே! 
விண்ணே    வியக்க     விரைகின்றாய் 
விழுதாய் எம்மைச் சுமக்கின்றாய்!
உண்ணேன் உறங்கேன் உனைமறந்து 
உயிராய் விளங்கும் செம்மொழியே!

எண்ணும் எழுத்தும் கண்ணெனவே 
ஏற்றுக் கொண்டவர் வாழ்கின்றார்! 
மண்ணும்    மொழியும்     பெரிதெனவே 
மதித்தே வாழ்ந்தவர் உயர்கின்றார் 
பண்ணும் பரதமும் போலிங்கே 
பயில இனிக்கும்  தாய்மொழிதான்! 
புண்ணும் ஆறிடும் இந்நாளில் 
புதுமைத் தமிழுக்கு இணையேது!

எங்கும் எதிலும் தாய்மொழியை 
ஏற்றுக் கொண்டே பணி செய்வோம்  
தங்கும் மனத்தில் இன்பங்கள் 
தமிழைக் கற்கும் போதெல்லாம் 
அங்கம் எமது அங்கமென 
ஆக்கம் ஊக்கம் தந்திடுவோம்!
கங்கை காவிரி போல் மனத்தைக்  
காக்கும் தூய்மை உணர்வு தந்து!

மறவர் குலத்தின் அடையாளம் 
மங்காதிங்கே  மலைப்பூட்டும்!
புலவர்கள்  ஆற்றிய தொண்டதனால்   
புதுமை சேரும் எந்நாளும்!
குறள்தரும் துணிவே  போதும் இந்தக் 
குவலயம் வாழ்வு வளம் பெறுமே!
ஒருவர் இருவர் அல்ல இந்த 
உலகே பயன்பெறும் வாழ்வனைத்தும்!

இன்னும்   என்ன    வேண்டுமிங்கே 
இதயம் இனிக்கும் தமிழ் கற்பீர்!
பொன்னும் பொருளும் ஆசைகளும் 
புவியில் அழியும் செல்வங்கள் 
மின்னும் தமிழே உயிராகும் 
மிரளும் மனத்தின் துணிவாகும்
நன்னும்      துயரைக்   களைந்தென்றும் 
நாவில் தமிழைக்    காத்திடுவோம்!¨
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/11/2014

யாமிருக்க பயம் ஏன் என்றவனும் நீயல்லவோ



எண்ணம்   எல்லாம்  நீயானாய் 
எதுகை மோனை போலானாய் 
வண்ணம் என்றும் குறையாத 
வடி வேலா முருகா மால் மருகா 
கிண்ணம் தேன் கிண்ணமடா 
இனிக்கும் முகம் பால் வண்ணமடா 
திண்ணம் உயரிய திண்ணமடா 
உனை அறிந்தால் தமிழும் மின்னுமடா !!

பொன்னை நிகர்த்த மேனியனே 
பொற் தமிழின் உயிரே காவியமே 
உன்னை வணங்கித் துதி பாடும் 
உணர்வில் வந்து கலந்து விடு
என்னை அறிந்த பெருமானே
ஏழ் பிறப்பும் உனக்கே உனக்காக
தென்னை மரம் போல் நானிருந்து
தேனாய் பாலாய் கவி வடிக்க

உருகும் உருகும் உயிர் உருகும்
உருளும் உலகம் அதை வணங்கும்
கருகும் மலரும் சிரிக்குமடா
கருணை நிறைந்த வடிவேலா
பருகும் பா அது வெண்பாவாய்
பருகத் தந்த உனதருளால்
முருகும் அங்கே குறையாமல்
முடிப்பேன் வடிப்பேன் நயம்படவே

வளரும்     பயிராய்    நானிங்கே
வளர்க்கும் தாயாய் நீ அங்கே
தளரும் நிலையது வாராமல்
தருவாய்     ஞான   ஒளியிங்கே
உளரும் மன நிலை தவிர்த்திடவே
உதிக்கும் கவிதை வரி வடிவம்
கிளரும் இன்ப உணர்வுகளைக்
கீற்றில் சிறந்த கீற்றாக

முருகன் அருளே பேரருளாம்
ஞான முத்திக்குகந்த நல்லருளாம்
அழகன் அவனே தமிழ்க் கடவுள்
அறிந்தாள் பாட்டி ஔவையும் தான்
குமரன் பெயரைச் சொல்லாத
நாளும் உண்டோ சொல்லிங்கே ?..
பரமன் பதத்தைப் பற்றிடினும்
பாட்டில் முருகன்தான் எங்கும் !!



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/08/2014

நின்னைச் சரணடைந்தேன் நினையாதிருப்பாயோ



மாதம்       ஒன்றரை     என்றாரே 
மனதில்  துயரைத்   தந்தாரே
பேதம்    இல்லா    உன்னருளால் 
பிணிகள் தீர்ந்தது தன்னாலே 
வேதம்   உரைக்கும்   நன்றியை 
விரும்பிக் கற்கும் மனத்திற்கோர் 
சேதம்   வருமோ   சொல்லிங்கே ?..
செழுமை நிறைந்த  பெம்மானே!..

தீதும் நன்றும் உனையறிந்தே 
திசைகள் எட்டிலும் நிகழ்கிறது 
ஓதும் மந்திரம் அதனாலே 
ஒன்றே நன்றாய் திகழ்கிறது 
காதும் காதும் வைத்தாற் போல் 
கவலைகள் இதனால்  மறைகிறது 
போதும் போதும் இறைவா உன்றன் 
புதுமையை  உரைக்க வழியேது !!!

மொழியதை இழந்த பறவையைப்போல் 
முன்னே வந்தேன் இந்நாளில் 
வழியதைக் காட்டி விட்டாயே 
வழியும் உன்றன் கருணையதால் 
அழியுமோ புகழும் கீர்த்தியுமே 
ஆடல் நாயகன் நீ இருக்க  !!
விழிகளில் ஆனந்தம் தானிங்கே 
விடை கொடு எந்தன் பெருமானே 

சிவ சிவ என்பேன் எந்நாளும் இந்த 
சிந்தையின் மயக்கம் தெளியாது 
நவ யுக நாயகன் உனைப் பாடும் 
நாவும் இதனை மறவாது 
தவ பலம் வேண்டும் எமக்கிங்கே 
தந்தருள்வாய் எங்கள் பெருமானே 
லவ குசன்  போல முன்னேறி 
லட்சியம் வெல்ல ஒரு நாளில் 

மொழி அது அருவியாகட்டும் 
முனைப்புடன் எங்கும் பாயட்டும் 
பழி அது நீங்கி செழிப்புடனே 
பாரினில் பெருமை சேர்க்கட்டும் 
குழி அது பறிப்போர் முன்னிலையில் 
குமுறியே நாட்டியம் ஆடட்டும் 
வழி அதைக் காட்டி வா இறைவா 
வலிமையைத் தந்திடும் எம் தலைவா ...

அம்பாளடியாள் 







தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/02/2014

எங்கு செல்வேன் உனைப் பிரிந்து



புள்ளிக் கோலம் அழியாமல் 
பூவின் அழகு குறையாமல் 
வள்ளிக் கணவன் அருளாலே 
வந்தாள் தந்தாள் பாவிங்கே 
அள்ளிக் கொழித்த  உடற் பிணியால் 
அடங்க மறுத்த வலி தணிந்து 
தள்ளித் தள்ளிப் போவேனோ என் 
தங்கத் தமிழே வாழிய நீ !...

செந்தேன் மழையில் நான் குளிக்க 
சேரும் காலம் பொற் காலம் 
வெந்தேன் உடல் நலக் குறைபாட்டால் 
வேங்கை இனத்தின் நாயகி தான் 
நொந்தேன் இருப்பினும் விடுவானோ 
நோயைத் தீர்க்கும் கந்த குருவைப் 
பணிந்தேன் துணிந்தேன் வந்துதித்தேன் 
பழம்பெரும் தமிழே வாழிய நீ ..

கங்கை வற்றிப் போனாலும் 
காவிரி வற்றிப் போனாலும் இந்த 
மங்கை உள்ளம் வற்றாது 
வலுவாய் நிற்கும் என் தாயே 
சங்கை முழங்கு என் சார்பில் 
சாகேன் வருவேன் பாவிசைப்பேன் 
நங்கை மனம் போல் எந்நாளும் 
நற் தமிழே உயிரே வாழிய நீ 



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.