12/31/2014

புத்தாண்டே வருக வருக !


                   


புத்தாண்டே  புன்னகை பூத்தாட வந்துதிப்பாய் 
சத்தான ஆண்டாய்த்  தழைத்திடுவாய்  !-வித்தைகள் 
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே   நல்கு !

வேரோடு  மடிந்து வீழ்ந்தோம் 
   வேதனை தினமும் பட்டோம் ! 
போராடும் மறவர் எங்கள்
    போர்க்காலம் முடிந்து போக 
சீரோடு செழிப்பும் சேர்த்து  
    சீராட்ட மலர்ந்த ஆண்டே 
தேரோட வழிகள் செய்வாய் 
    தேசத்தின் நலனைக் காத்தே  !

பொல்லாத விதியை மாற்றிப்   

   பொன்னான  மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி  
    ஈழத்தில் விடிவைக் காட்டி  
நல்லோரும்  பதவி ஏற்க 
   நாடெங்கும்  மகிழ்ச்சி பொங்க  
அல்லலை அறுக்க வந்த 
    ஆண்டாக மலர்க நன்றே  !

காலத்தை வகுத்த தேவன் 

  கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும் 
   ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க  
   ஞாயிறாய் வளர்ந்து நின்று 
சீலத்தை மதிக்கும் மக்கள் 
    சீர்பெற்றும்  மகிழச் செய்வாய் !

புத்தாண்டு பிறக்கும் போது 

   பூமிக்கே மகிழ்வு கிட்ட 
சித்தத்தால் மலர்கள் தூவும் 
  சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ 
    எல்லோரும் சமமாய் வாழ 
வித்தைகள் புரியும் ஆண்டே 
   வில்லேந்தும் பகையை ஒட்டு !

வாவென்று நெஞ்சம் பாடி 

   வண்ணமலர் தூவி ஆடும் 
போவென்று துன்பம் தன்னை 
   போக்கியே ஆள  வேண்டும்! 
நாவார எளிய  மக்கள் 
   நாள்தோறும் நினைத்துப் பாடும் 
தேவாரம் எனநீ நின்றால்  
    தேவர்க்கும் மகிழ்வு தானே !



வணக்கம் !


அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .

                                                                          



                                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2014

புதியதோர் உலகம் செய்வோம் !...

                           
                                    

கடந்த 27.12.2014 பாரிஸ் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற 
"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிற்கு அமைய எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் அவர்களின் அழைப்பை ஏற்று நான் எழுதிய விருத்தப் பாமாலை இது .இதனை அன்றைய தினம் அரங்கில் என் சார்பில் பாடி மகிழ்வித்த கவிஞருக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி ,பாரதிதாசனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ...

                                          
                                                                         

நெஞ்சை அழுத்தும் உணர்வுகளை 
     நேரில் சொல்லத் துணிவுமில்லை! 
அஞ்சிப்  பிழைக்கும் அகதிகள்போல் 
     அல்லல் லுற்றோர் எவருமில்லை !
தஞ்சம் எனநாம் வருகையிலே 
     தானாய் எதுவும் புரிவதில்லை ! 
கெஞ்சும் நிலையில் வருந்துயரால் 
     கேள்விக் குறிகள் குவிந்தனவே !

சொந்த மண்ணில் சுதந்திரமாய்ச்  
   சோர்வு இன்றி மனம்போலப்  
பந்த  பாசப்  பயிர்வழத்து  
   பாரில் வாழும்  வழிவகுப்போம்
எந்தப் போரும் முடிவுற்றே 
  ஏற்றம் தந்தால் அதுபோதும் !
வெந்து போகும் மனநிலையை 
  வேரோ டெங்கும்  அழித்திடுவோம் ! 

குண்டு மழையைப் பொழிகின்றார் !
   குற்றம் இழைத்தும் மடிகின்றார் !
கண்டு களித்த பயனென்ன?..
    காற்றும் எமக்குப் பகையாக !
தொண்டு புரியும் மனம்வேண்டும் 
    தோல்வி இனியும் தழுவாமல் 
கொண்டு வருவோம் புதுச்சட்டம் 
   கொல்லும் துயரைத் தடுத்திடுவோம் ! 

எங்கும் எதிலும் மறுமலர்ச்சி 
   ஏணிப் படியாய் விளங்கட்டும் 
மங்கும் உலகின்  வளர்ச்சிக்காய்  
  மனங்கள் சேர்ந்தே உழைக்கட்டும் !
பொங்கும் கடலும் புவியாவும் 
  பொங்கா திருக்க வழிசெய்வோம் !
சங்கும் முழங்க பறைதட்ட 
  சான்றோர் புகழை எடுத்துரைப்போம் !

வீதி தோறும் விழிப்புணர்வை 
  வெல்லும் வண்ணம் விளைத்திடுவோம் ! 
நீதி எங்கும் நிலைத்திடவே 
   நேர்மை யோடும் உழைத்திடுவோம் 
சாதி பேதம் தவிர்ப்பதற்காய் 
    சாவைக் கூடத் தழுவிடுவோம் !
சேதி சொன்ன மறுகணமே 
    சேவை ஆற்றத் துணிந்திடுவோம் !

முற்றும் முழுதாய் நலம்விரும்பி 
   மூளும் எங்கள் பணியிதனால் 
பெற்றுத் தருவோம் சுதந்திரத்தைப்   
   பெருமை பொங்கும் உலகமைத்து !
சுற்றம் மகிழ கடனாற்றிச்  
   சுடரும் உறவை ஏற்றிடுவோம் !
கற்ற தமிழை உலகெங்கும் 
   கமழச் செய்து மகிழ்ந்திடுவோம் !

                                                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

என்னவென்றுரைப்பேன் இதை!



எண்ணம் இனிக்க இதயத்துள் நின்றவளே !
வண்ண மலரே! அருகே..வா!-கண்ணனிவன்
வாடுகையில் வஞ்சியே வாரா திருப்பாயோ? !
பாடும் குயிலே பகர்!

அன்னைத் தமிழை அமுதாய்ப் பொழிந்தவளே !
உன்னை மறந்தோ உறங்கிடுவேன் !-பொன்னையும்
வேண்டேன்!  பொருளையும் வேண்டேன்எந் நாளுமெனை 
ஆண்டிடுக அன்பை அளித்து !

வண்டமிழ் காற்றாக வான்பரப்பில் வந்தாட 
தொண்டுகள் நீ...புரிவாய் தோழமையே !-அண்டங்கள்
அக்கக்காய்ப் போனாலும் அன்பே...நீ போகாதே!
துக்கத்தை  ஏற்பேன் தொடர்ந்து !

கன்னித் தமிழமுதைக் கண்டவர் கைதொழுவர் !
உன்னை அடைந்தேன் உயிராக !-தன்னையே
தான்வதைக்கும் துன்பமேன் ?..தாமரையே சொல்லிங்கு ? !
வான்மதியாய்த்  தேயுதே வாழ்வு!

சுண்ணாம்பில்  இட்டாலும்  தூய தமிழ்வேண்டும் !
கண்ணாக நான்மதிக்கும் கட்டழகே !-விண்ணாளும்
நன்மதியும் விட்டகல நான்கண்டேன் உன்னாலே!
என்னவென்று ரைப்பேன் இதை! 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/17/2014

முருகா முத்தமிழ்க் குமரா !


மண்ணும் வியக்க நின்றவனே  
மதுரத்  தமிழின் நாயகனே !
எண்ணும் பொழுதினில் வந்திங்கே
ஏற்றம் தந்து அருளாயோ !

கண்ணும் உன்றன் கழல்தேடிக்
காத்துக் கிடக்குது காவலனே!
விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய் 

பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும்  குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக் 
கவிதை மழைநீ பொழிய வைப்பாய் 

நண்ணும் துயரை நறுக்கியொரு
நாட்டம் அருள்வாய் நாளுமிங்கே
கண்ணும் கருத்தும் ஆனவனே
கருணைக் கடலே தேனமுதே !

செக்கச் சிவந்த மேனிதனில்
சேர்த்து முடிப்பேன் சந்தனத்தை
சொக்க  வைக்கும் சுந்தரனே
சோலை வனத்தின் நாயகனே!

பக்கம் வந்தால் போதுமிங்கே
பாமழை பொழியும் தன்னாலே
மிக்க நலன் தரும் பார்வையினால்
மீட்டுக யாழென என் மனதை ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/07/2014

நினைவுகள்

                            


நினைவுகள் நெருங்கி வந்து 
        நெஞ்சினை மெல்லத்  தூண்டும் !
தனைமறந் ததனால் உள்ளம் 
       தவிப்பினை விரைந்தே ஏகும்  !
முனைகிறேன் இருந்தும் என்னுள் 
       முடங்கிய நினைவைச் சொல்ல
தினையள வெனினும் இன்பம் 
       திரண்டிட வாழ்த்து வீரே ! 

கலைகளை சுவைக்கும் கண்கள் 
       கவலையில் உறைந்த நேரம் 
சிலைகளை வடித்துப் பெற்ற 
       சிறப்பினை நினைக்கும் போது 
மலையென மகிழ்ச்சி என்னுள் 
       மறுபடி வளரக் கண்டேன் !
அலைகடல் கடந்தும் இன்றே 
      அவைதரும்  உயர்வே உச்சம் !

இனியன எதுவோ வாழ்வில் 
     இவைகளை நினைத்துப் பார்ப்போம் 
தனிமையை அதுதான் போக்கும் 
      தகுதியை  எமக்குள் தேக்கும் !
கனிவுடன் பழகும் நட்பே 
       கரும்பென இனிக்கும் வாழ்வில் !
சனிதரும்  துயர்கள்  வேண்டாம் 
      சகலரும் இணைவோம் வாரீர் !

பகைவரை நினைத்து நாளும் 
     பகையினை வளர்த்தால் துன்பம் 
வகையிலா வருத்தம் தந்து 
     வருந்திட முடக்கும் அன்றோ !
நகைப்பவர் நகைத்தால் என்ன !?
      நமதுயிர் நமக்கே சொந்தம் !
தொகைகளை மறந்து வாழ்வில் 
     தொடருக சிறந்த நட்பை !

நினைவது சிறந்து நின்றால் 
      நினைப்பவை பெறுமே வெற்றி !
அனைவரும் மகிழ்ச்சி காண 
      அகமது சிறக்க வேண்டும் !
மனைகளில் தொடரும் யுத்தம் 
      மலையென வளர்தல் நன்றோ !
வினையிதைத் தடுத்தே நாளும் 
     வியப்புற உயர்வோம் வாரீர் !

உறுதியை மனதில் ஏற்க
     உயர்தர உணர்வு வேண்டும் !
குறுகிய நினைப்பால் உள்ளக் 
     குமுறலே எதிலும் தோன்றும் !
இறுதியும் முதலும் என்றே  
    எடுத்திடும் முடிவும் மாறும் !
பொறுமையை உணர்த்தும் சக்தி 
    பொதுவினில் நினைப்பாம் கேளீர் !

நெஞ்சக் கூட்டில் நினைவுகளாய் 
      நித்தம் பொங்கும் சிலதுயரை 
வஞ்சம் செய்து அடக்கையிலே 
      வாழ்வே மாயம் எனவலிக்கும் !
பஞ்சம் வந்தும் மடிந்திடவே 
      பாவி மக்கள் வரைந்ததிட்டம்
மிஞ்சும் எங்கள் உறவுகளை 
      மீளா திங்கே பறிக்கிறதே ! 

கொல்லும் இந்த நினைவுகளால் 
    கோதை நெஞ்சம் முடிவுறுதே !
வெல்லும் என்ற பலகனவும் 
    வெட்டிச் சாய்த்து மடிகையிலே
புல்லும் கண்ணீர்த் துளிவிடுதே 
    பூவும் பிஞ்சும் உயிர்த்திடத்தான் !
சொல்லும் போதும் வலிக்கிறதே 
    சோகம் பொங்கும் நினைவுகளை !

பெண்ணைப் போற்றும் புலத்தினிலே  
    பேய்கள் தந்த பெருந்துயரம் 
கண்ணை விட்டும் மறைந்திடுமா ?!
   கண்டேன் இன்னும் கலங்குகிறேன் 
அண்ணன் தம்பி தலையிழந்தே  
    அங்கும் இங்கும் கிடக்கையிலே 
எண்ணம் உற்ற வலியதனை 
    எங்கே சென்று எடுத்துரைப்பேன் !

                                   


                             தாயே !
தேசம் முழுதும் மலர்ச்சோலை 
    தேடி மலரும் நிலைவேண்டும்!
பாசக் கரத்தை இணைத்திங்கே 
   பாலும் பழமும் தரவேண்டும் 
கோசம் எதற்கு அதுவேண்டாம் 
   கோடி நலங்கள் பெறவேண்டும் 
நேசம் நிறைந்த தமிழ்த்தாயின்  
   ஏக்கம் தணித்து அருள்செய்வாய் !

தேன் சிந்தும் பாமாலைகளைத் தினமும் தொடுக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் என்னிடம் கொடுத்த "நினைவுகள்" என்ற தலைப்பிற்கேற்ப இவ் விருத்தப் பாமாலையைத் தொடுத்துள்ளேன்.பாரதிதாசன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் . அன்பு நெஞ்சங்களே தங்களின் ஆதரவிற்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி .





  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/26/2014

கனவு சிதைந்ததா?... காற்றில் பறந்ததா? ....





கனவு சிதைந்ததா?...
காற்றில் பறந்ததா? ....
கணித மேதையே சொல்லடா -உன்றன்
கணக்குத் தப்பெனக் கொள்ளடா ...

விழியில் ஈரம் காய்ந்து போகுமா? -எங்கள்
விடுதலை தாகம் ஓய்ந்து போகுமா ?...
இடிந்து போனது போதுமடா ..
இருகரம் கூப்பினோம் வாருமடா...

 மரணத்தை நேசிக்கும் மாவீரர்  உள்ளத்தில்
மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
இலட்சியம் வென்றிட  எமக்கும்  தான்
இங்கொரு இடை வெளி தேவையடா ...

பறவைக்கும் சொந்தமாய்க்  கூடுண்டு
அன்பைப் பகிர்ந்திட என்றுமே தாயுண்டு
எமக்கிங்கே உலகினில்  என்னவுண்டு ?...அட
எறிகணை தரும் வலி தான் உண்டு ....

எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்
இலட்சிய வேங்கைகள் சிரித்திட வேண்டும்
ஈழத்தாய் மடியினில் தூங்கிட  வேண்டும்

அகதியின் வலி இது புரிகிறதா ?.....
உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..

எடு எடு தொடு தொடு கணைகளை விடு விடு
என மனம்  இங்கு வலிக்குதடா ...
அந்த வலி தரும் ஓசையில் எதிரியின் ஆசைகள்
நிட்சயம் ஒரு நாள் வீழுமடா ....

பனி மலை உருகிடும் வேகம்
அதை விடப் பெரியது எம் தாகம்
விரைவினில் ஈழத்தை வெல்லும்
அந்த விடுதலை தாகத்தைக் கொல்லும்

                                                                (     கனவு சிதைந்ததா?...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/10/2014

சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?



உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !

வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !

மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!

இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!

பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !

செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப்  பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !


இயற்கை என்பது இறைவன் கொடுத்த 
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட 
சாபம்! 
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/04/2014

முன் நின்று காப்பவனே !



மனமென்னும் மாளிகையில் மரத்துக் கிடக்கும்
மனிதநேயம் இப்போதே விழிக்க வேண்டும் !
இனபேதம் மதபேதம் பார்த்தே நாளும்
இன்னலுறும் நிலையிங்கே மறைய  வேண்டும் !

தினந்தோறும் நற்கருமம் நிகழ வாழ்வில்
தீமைகளை இவ்வுலகம் எதிர்க்க  வேண்டும் !
வனவிலங்கு போல்வாழும் வாழ்வின் கொடுமை
வருங்கால சந்ததிக்கும் புரிய வேண்டும் !

வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
வகுத்த நீதி  அத்தனையும் முடங்க வேண்டும் !
பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
பெருமான உனதருளால் ஒழிய வேண்டும் !

அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
விரும்பாத எச்செயலும்  தீண்டா வண்ணம்
விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும் !

பிடிவாத குணம் மண்ணில் மறைய வேண்டும்
பிறர் வாழ வாழ்த்தும் எண்ணம் நிறைய வேண்டும் !
அடியோடு வெறுப்புணர்வு அகல வேண்டும்
அழகான சிந்தனைகள் பெருக வேண்டும் !

இளகாத மனமெங்கும்  இளக வேண்டும்
இரக்க குணம் அனைவருள்ளும் சிறக்க வேண்டும் !
தளராத நம்பிக்கையைத் தந்தருள வா
தர்மத்தின் திருவுருவே தரணி தனிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/30/2014

உயிரிலே கலந்தவனே !



ஏங்கும் மனத்தினது  ஏக்கத்தைச்  சொல்லவா ?!
நீங்கும் எனதுயிர் நீயின்றி!- தூங்காதே
கண்ணா  கணப்பொழுதும் கண்ணீரில்  வாடுகின்றேன்!
உண்ணா துருகும் உயிர் !

கண்ணுக்குக் கண்ணான கண்ணன் மனத்தழகைப்
பெண்ணுக்குள் வைத்தேன்  பெருமையுற!- பண்ணுக்குள்
இட்ட இனிய தமிழ்ச்சொற்கள் எந்நாளும் 
கொட்டும் பனியைக் குவித்து !

கண்ணா விரைந்தென்றன்   கண்ணீரைப் பொய்யாக்கு !
உண்ணாமல் ஊன்வாடிப்   புண்ணாகும் !- எண்ணம்
இழைத்திட வாழ்வை   இடர்காவிச் செல்லும்
அழைத்த குரல்கேட்டு அசை!

கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
தீராத வேதனையைத்  தீர்ப்பவனே !-வேராக
நானிருப்பேன்  உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில் 
தேனினிக்க வேண்டும் திரண்டு !

விண்ணோக்கிச் சென்றாலும் விட்டகலேன் என்னவனே !
பெண்ணோக்கும் பேரழகா !பேரின்பக் -கண்ணாளா !
எண்ணங்கள் ஏற்கும் இளமையும் நீயாவாய்!
வண்ணங்கள் குன்றாமல் வா !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2014

தமிழின்றி வாழ்வேது !


 

கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?...வன்னி 
மண்ணின் மணம் குன்றா மலரிவளை 
எண்ணில் அடக்குக   உகந்து !

பொன்னை பொருளை வேண்டேனே
பசி என்னைத் தேடி வருகையிலும் !
அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !

கரகம் ஆடி வந்தாலும் என்தமிழ் 
விரகம் கொண்டு வீழாது!தரகர் 
தம்மைத் தாம் அறிவீர் !துயரைச் 
செம்மைப் படுத்துக  துணிந்து !

அம்மை அவளே அருந்தமிழ் வளர்த்தாள்  !
எம்மைப் புவிமேல் புகழேந்த !செம்மை யாவும்
தழைத்தோங்கும்! சீர்கொடுக்கும்!அதுவே  
காவும் மனத்தின் துணிவு ! 

தும்பைப் பூப்போல் மனத்தழகை எவரும் 
அம்பை விட்டுக் கொய்யாதீர் !
வம்பை அதுவே தான் வளர்க்கும்
இனி என்றும் மதுவே தோற்க மணந்து !

சொல்லில் பொருளில் நயம் தேற எந்நாளும்  
அல்லிப்  பூவே வந்தருள்வாய் !
கல்லில் முள்ளில் தவழ்கின்றோம் !கயல் விழியே !
இனியும் அள்ளிக் கொடுப்பாய் அறிவு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/14/2014

இதையும் கொஞ்சம் சிந்திப்போமா !




ஊரோடு  உற்ற பகையால்  ஊனுடலை வதைத்தால்
வேரோடு  கெட்டொழியும்  வாழ்வு  !சேரும்
வேதனையை விட்டகன்று வாழும் வழியைப் பார்த்தாலே
சாதனைகள் தொடரும் சாவிலும் !

கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்து பகை முடிக்கும்
துர்  புத்தி உய்யவிடாது  வாழ்நாள் முழுதும் !
எண்ணத்தைச் சரி செய்து ஏற்றமுற நினைப்பவர்களே
வண்ணம் குன்றாது வாழ்வர் வாழ்வினிக்க !

முறையற்ற வாழ்வை முழுமனதோடு வாழ்ந்து முடித்தவர்
கறையை அகற்றுவது கடினம் எக் காலத்திலும் !
குறை செராத வண்ணம் குணத்தைக் காத்தவரே
இறையாகக் கணிக்கப் படுவர் இறந்த பின்னும் !

குற்றமற்ற நெஞ்சங்களைக்  கொன்று குவிக்கும் மனத்தவரைச்
சுற்றம் என்றும் ஏற்காது !ஏற்ற பொழுதிலும்
ஊற்றெடுக்கும் உணர்வுகளால் உட் பகைதான் வளரும்
மாற்றமில்லை இதனில் மறந்தும் !

தோற்றத்துக்கு நல்லவராய்த் தோன்றி மறையும் வாழ்வைவிட 
மாற்றத்தை ஏற்று மனிதராய் வாழ்வதே வாழ்வாகும் !
ஏற்றத் தாழ்வு எவர் உள்ளத்தில் உதித்தாலும் அவை 
சீற்றத்தைத் தந்து சீரளிக்குமே அல்லால் வாழ்வளிக்காது !

(படம் கூகுளில் இருந்து பெறப்பட்டது !நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/11/2014

அன்பினால் தழைத் தோங்குக இன்பம் !



கண்ணே மணியே கற்கண்டே -என்றன் 
கவிதை இனிக்க வந்தவளே
உண்ணேன் உறங்கேன் நீயின்றி
உணரும் காலைப் பொழுதின்றி !
பெண்ணே அழகில்   ஓவியமே!
பொறுமை அணிந்த காவியமே!
மண்ணே போற்றும் மரகதமே!
மலரே  எழிலே வாராயோ !

கொஞ்சும் சலங்கை ஒலியாலே
கோதை உன்றன் நினைவாலே
விஞ்சும் கவிதை வடிப்பேனே
விரலால் தாகம் முடிப்பேனே
பஞ்சும் நெருப்பும் போலிங்கே
பற்றிக் கொள்ள வாராயோ !
தஞ்சம் உன்றன் நெஞ்சமென
தரையில் வந்த வெண்ணிலவே !

கண்ணா ! காதல் மணிவண்ணா!
கலக்கம் ஏனோ இந்நாளில்?
எண்ணா திருக்க வருவேனே
என்றும் இன்பம் தருவேனே
விண்ணும் மண்ணும் வியந்திடவே
விழியில் ஒளியாய் நிற்பவனே 
கண்ணும் கருத்தும் நீயல்லவோ
கவலை மறப்பாய் இக்கணமே !

தோகை மயிலுன் ஆட்டத்தைத் 
தொடர்ந்தும் பார்க்க வருவேனே !
சோகம் தீர்த்து அந்நாளில் உனைச் 
சொக்க வைப்பேன் என் கண்ணா 
பாகப் பிரிவினை எமக்குள்ளா?
பயத்தைப் போக்கு துயர் நீங்க 
காகம் வந்து சேதி சொல்லும் 
காதல் தேவதை வரும் முன்பே !





அன்னத்துக்கும் புறாவுக்கும் மட்டுமா தூது 
சொல்லத் தெரியும் !காக்கைகளாலும் 
முடியும் :))  


உண்ணும் போதும் சரி ஓர் உயிர் பிரிந்த போதும் சரி காகங்களின் ஒற்றுமையை விஞ்சும் சக்தி உலகில் எந்த சீவ ராசிகளுக்கும் கிடையாது என்பது தான் நான் அறிந்த உண்மை ! அது சரி எதுக்கு இப்போது அம்பாளடியாள் காகத்தைத் தலை மேல் தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் ? இன்னுமா புரியவில்லை!:) காகம் ஒற்றுமையின் சின்னமாகும்  ! இன்று சனீஸ்வர விரதத்தின் இறுதி நாள் சனீஸ்வரனின் வாகனமான காக்கைக்கு உணவு அளித்து மகிழ்வதன் மூலம் சாப விமோற்சனம் அடையலாம் என்கிறது சகுன சாஸ்திரங்கள் அதற்காக இன்று மட்டும் அல்ல என்றுமே முடிந்தால் (காகங்களுக்கு மட்டும் அல்ல ஏனைய சீவ ராசிகளுக்கும்  )உணவு அளியுங்கள்.அன்பினால் ஒற்றுமை தழைக்கும் ஒற்றுமை தழைத்தால் உலகமே இன்பமயமாகும் !

                                                              



அன்பு உறவுகள் அனைவருக்கும் சனீஸ்வர பகவானின் நல்லாசியினால் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கிட  இனிய நல் வாழ்த்துக்கள் !

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2014

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் !



பெண்ணின் உடலைப் படம்பிடித்து எப்போதும்
கண்ணுக்(கு)  இழிவாகக் காட்டாதீர் !- மண்ணின்
பெருமையும் குன்றிவிடும் பண்பாட்டை விற்றால்!
அருமை உணர்ந்து அகற்று !

கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
பெண்ணை எவரும் படமாக்க !-விண்ணவரே
போற்றும் பதுமையைப்   போற்றாது எந்நாளும்
தூற்றுவது  எம்மவரின்  ஊழ் !


                                 



தேசத்தின் நன்மைக்குத் தீங்குவிளை விப்பவரை
நாசம்செய் நன்மனமே நாவினால் !-மோசமான
எண்ணங்ளை வேரோடு எரிப்பதே  எம்கடன் !
உண்ணவரும் போதும் உணர்!

பண்பாடு குன்றினால் பாரதமே சீரழியும்!
திண்டாட  வைப்பவரைத் திட்டித்தீர்!- கொண்டாட  
நாமும் வருவோமே நாளுமிந்தப்  பொன்நாளை !
காமுகரின் கண்பறிதுக் காட்டு !

                                                             

                                                          

கண்ணுக்கும் தெரியாத கயமை உணர்வுகளால்
கழுத்தறுக்க வந்தவரைக் கண்டபடி திட்டுங்கள் !
மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள் !

ஊழல் பெருச்சாளிகள் ஊரைச் சுரண்டுகையில்
கூழும் கஞ்சியும் எமக்கெதற்கு !
வாழும் போது வன் கொடுமைகளை எதிர்ப்பவரே
நாளும் இங்கு  போற்றப் படுவர் !

                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2014

81வது பிறந்த நாள் இன்று !



அன்பைப் பொழியும் மனத்தாலே 
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும் 
இனிய நல் வாழ்த்து உரைபீரே !

தந்தை என்றோர் தெய்வத்தைத் 
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம் 
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...

பொங்கும் தமிழின் ஆர்வலரை 
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை 
எங்கள் உயிரை உணர்வலையை 
என்றும் இறைவன் காக்கட்டும் !

விண்ணும் மதியும் வாழ்த்திடவே 
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும் 
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே 
கருணை வெள்ளம் காக்கட்டும் !

எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி 
எல்லா நலனும் தங்கட்டும்  
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை 
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் 
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல் 
பூப்போல் இங்கு சிரித்திடவே ....





                                    இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
                                                                     
                 

                                                   இவை அனைத்தும் என் 
                      வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2014

சரஸ்வதி தாயே போற்றி போற்றி ..


அன்னை சரஸ்வதி தாயே போற்றி 
அறிவின் நுதலே  அழகே போற்றி 
பொன்னில் வடித்த சிலையே போற்றி 
பொறுமை காக்கும் கலையே போற்றி 

இன்னமுத மொழியே போற்றி 
இருளைப் போக்கும் ஒளியே போற்றி 
விண்ணவரும் தொழும் தேவி போற்றி 
வெண்டாமரை தாங்கும் மலரே போற்றி

பண்ணில் நிறைந்த பதமே போற்றி
பயிலும் நாவின் அசைவே போற்றி 
கண்ணின் மணியே கருத்தே போற்றி 
கருணைக் கடலே அமுதே போற்றி 

கற்றவரும் தொழும் தேவி போற்றி 
கல்லாதவர்கும் அருள் நீ போற்றி 
உற்ற துணை நீ உணர்வே போற்றி 
உயிராம் மெய்ஞாதின் வழி நீ போற்றி 

வற்றாத கல்விக் கடலே போற்றி 
வறுமையைப் போக்கும் வாழ்வே போற்றி 
சிற்றின்பம் தவிர்க்கும் சிறப்பே போற்றி 
பேரின்பம் அருளும்  பெருமையே போற்றி 

நற் தவம் ஏற்கும் நலனே போற்றி 
நவராத்திரியின் நாயகி  போற்றி 
அற்புத நிலையே அம்மையே போற்றி 
அரும் பெரும் பாக்களின் அழகே போற்றி 

புத்தகத்துள்ளுறை மாதே போற்றி 
பூவின் மணமே புலனே போற்றி 
சித்தம் மகிழும் நினைவே போற்றி 
சிந்தும் இன்னிசை மழையே போற்றி 

வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி 
கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி 
கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......

                                                         





அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அம்பாளடியாளின் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் ..........
                                                       






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/25/2014

கம்பன் புகழைப் பாடு மனமே !


கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்  !-செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !

பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே 
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள்  ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற  
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே!இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !



அலைந்து திரிந்தே  அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள்  அன்பினை நாளுமே பெற்றகம்பர் 
வாழ்வினைக் கண்டிட  ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ   பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப 
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !

ஆய கலைகள் அறுபத்து  நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி  
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் 
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !


                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2014

சகல சௌபாக்கியங்களும் அருள்பவளே !


நாடும் மக்களும் நலன் பெறவே சுகம்
தேடும் விழிகளைக் காத்தருள்வாய்
பீடும் பெருக்கிப் புவி மேலே எந்நாளும்
கூடும் மகிழக் குடி புகுவாய் !

வாடும் உலகின் வாட்டம் தீர்பவளே!
காடும் சிறக்கக் கைகொடுப்பாய் விழி
மூடும் போதும் உன்னாமம்
சூடும் மனத்தில் சுடர்ந்திடுவாய் !

பாடும் குயிகளும்  பாடி மகிழ்ந்தட
பாட்டாய் என்றும் நீ வருவாய்
ஓடும் நதிகளும் உன்பேர் சொல்லிட
ஓங்கும் நல்வளம் தந்தருள்வாய் .!

ஆடும் அசையும் உயிர்களெல்லாம்
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே எந்நாளும்
போடும் தாளம் தப்பாமல்- புவிமேல்
புலரும் புன்மையைப் புடைத்தெறிவாய் !

ஈடு இணைகள் அற்றவளே 
இனிக்கும் தேனாய் நிற்பவளே 
மேடு பள்ளம் அறிந்திங்கே 
மேன்மையுறவும் செய்திடுவாய் !

கேடு வந்து விளையாமல் 
கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய் 
வீடும் சிறக்க வந்தவளே! 
வீசுக  தென்றலாய் எம்முள்ளே ..

                                                   
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2014

சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !



வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய்  வளம் !

சினத்தால்  அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க )  மகிழ்ந்து !-இனத்தின் 
பெருமையும் ஏற்ற புகழும்  தழைக்க
வருவதை  ஏற்கும்  விருப்பு

ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல்  நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர்  தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும்  போக்கும்  பயன்!

கடமை உணர்ந்த கவிக்குயிலே!  இன்றே 
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை 
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !

இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!

கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் 
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும்  வளம் !

(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/18/2014

விநாயகர் வெண்பா



பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய் 
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!

எண்ணும் பொழுதினில்  ஏற்றம் மிகுந்திட 
கண்ணாய் வருவாய்  கணபதியே! - விண்ணும் 
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே 
இசைவுடன் காப்பாய் இனித்து!

அறுகம்புல் மாலை அணிந்திட  என்னுள் 
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்  
உன்னால் உயா்வாழ்வும்!   ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!

கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே! 
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய் 
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே! 
ஞானம் புகட்டுவாய் நன்கு! 


                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2014

எதைத் தேடி என்ன கண்டோம் !


பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !

எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !

விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !

பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !

வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !

மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே  !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !

வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !

காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து 
வாழக் கற்றுக் கொள்வோமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.