1/31/2011

எங்களை விட்டு விடுங்கள்......

                                                 எமக்கும் மேல் ஓர் அறிவை
                                                 இனாமாகப்   பெற்றவர்கள்!
                                                 தனக்கென  ஒருபெயரைத்
                                                 தானாக   வைப்பவர்கள்!

                                                 ஆடைகள்   அணிந்திருக்கும்
                                                 அர்த்தமற்ற மனிதர்கள்!
                                                 நாளும் இங்கே சண்டை போட்டு
                                                 நாட்டைக் குலைப்பவர்கள்!

                                                 வாய்நிறையப் பொய் பேசி
                                                 வழக்கில் என்றும் வெல்பவர்கள்!
                                                 காசு,பொருள் தேடிக்
                                                 காலத்தைக் கழிப்பவர்கள்!

                                                 அடுத்தவர் சந்தோசத்தை
                                                 அடிக்கடி கெடுப்பவர்கள்!
                                                 அற்பசுகம் தேடியே
                                                 அலையாய்  அலைபவர்கள்!

                                                  தப்பென்று தெரிந்தும்
                                                  தவறுகள் செய்பவர்கள்!
                                                  கற்புடைய  மனிதர்களை
                                                  களங்கப்பட வைப்பவர்கள்!

                                                  நல்லவர்போல் நடந்து
                                                  நட்பைக்  கெடுப்பவர்கள்!
                                                  குள்ளநரி வேலை செய்து
                                                  குடும்பத்தைப் பிரிப்பவர்கள்!

                                                  அல்லலுற வைத்து இங்கே
                                                  ஆனந்தம்  கொள்பவர்கள்!
                                                  வள்ளல்போல் நடித்து
                                                  வாய்க்கரிசி போடுபவர்கள்!

                                                  பொல்லாத  கோவத்தையும்
                                                  புன்னகையால் மறைப்பவர்கள்!
                                                  சந்தர்ப்பம்  பார்த்திருந்து
                                                  சகலதையும் முடிப்பவர்கள்!

                                                   தனக்கென ஒரு நீதி
                                                   தாராளமாக உரைப்பவர்கள்!
                                                   அடுத்தவர் கதை பேசியே
                                                   ஆயுளை முடிப்பவர்கள்!

                                                   பொய்யிலே உறைந்து
                                                   பொறாமையால் மனம் புழுங்கி
                                                   இல்லாத கதை பேசி
                                                   இழிச்செயல் புரிபவர்கள்!

                                                   அறிவை வளர்க்கப் பள்ளி சென்றும்
                                                   உலகை அழிக்க  குண்டு வைப்பவர்கள்!
                                                   இவர்களுக்கு இணை நாம் என்று
                                                   இனி  எப்போதும் கூறாதே!

                                                    தன்னைத் தானே அழிக்கும்
                                                    உன் இனத்தின் கதையைக்
                                                    கேட்க்கப் பிடிக்கவில்லை!
                                                    உங்களைப்  பார்க்கப் பிடிக்கவில்லை!
                                                    இதற்குமேல் எதையும்
                                                    பேசப் பிடிக்கவில்லை!                                                                                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/30/2011

இதுதான் விதி!.........


                                                 சிங்கத்தின் பிடியில் 
                                                 சிக்கிய மான்களைக் 
                                                 கொம்பேறி  மூக்கன்கள்
                                                 கொஞ்சி விளையாடக்
                                                 கொடிய நாகங்கள் படம்பிடிக்க

                                                 சில மந்திகள் வந்து இதைக்கண்டு
                                                 பாசம் என்று தந்தி பரப்ப
                                                 சுதந்திரப் பறவைகள் பறக்கின்றன 
                                                அவைமட்டும்  அங்கே சுதந்திரமாக

                                                 மான்கள் உயிர் துடி துடிக்கிறது 
                                                 மயில்கள் இதைக்கண்டு தவிக்கிறது
                                                 குயில்கள் பாட மறுக்கிறது 
                                                 கோட்டைக்குள் நரிகள் நுழைகிறது 

                                                அந்தரத்தில் தொங்குது வௌவால்கள் 
                                                அதைப் பிடிக்கத்  தாவுது கரடிகள் 
                                                சிந்தனை   செய்யுது சிங்கங்கள் 
                                                சில சிறுத்தைகள் வரவினைக் குறித்து 

                                                 இரப்பையை விரிக்குது முதளைகள் 
                                                 இரத்தம்  குடிக்கத் தவிக்குது கரடிகள்
                                                 ஊளையிடுகுது நரிகள் 
                                                 உணவைப் பரிமாறக் கேட்குது இவைகள் 

                                                 மான்கள் துடையைக் கண்டு 
                                                 மண்டியிடுகுது  ஓநாய்கள் 
                                                 கொடிய  மிருகங்கள் மத்தியிலே
                                                 மான்களைக் கொன்று குவித்தன சிங்கங்கள் 

                                                              தலையொரு பாகம் 
                                                              தொடையொரு பாகம்
                                                              இடையொரு பாகம்
                                                              மொத்த உடலையும்
                                                              ஒவ்வொரு பாகமாய்ப்  பிரித்து

                                                  கொடிய விலங்குகள் உண்ட 
                                                  இரகசிய விருந்துக் கூத்தை
                                                  பாவம் பட்டுப் பூசிகள் எங்கிருந்தோ படம்          பிடித்து                                                                                                           
                                                  பகிரங்கப் படுத்தின நாட்டுக்குள்ளே!

                                                  காட்டுக்குள்ளே நடந்த கொடிய நிகழ்வு 
                                                  இங்கிருந்த ஆடுகளையும் ,மாடுகளையும்
                                                  நாய்களையும்,பூனைகளையும் அளவைத்தன.ஆனால் 
                                                  வேடர்கள்மட்டும் மகிழ்ச்சியுடன் 
                                                  விரைந்து  சென்றனர் அன்றே காட்டுக்கு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/25/2011

இருள் மேகம் கலையட்டும்........

தரம் பார்த்து உயர்கல்வி நடை போடுமோ!
இல்லை முகம் பார்த்து ஆசிரியை                                              மனமொரு எடைபோடுமோ!
நிலையான கல்வி இங்கு விலை போகுமோ!
நீரூற்றும் கரம் எமக்கு வரமாகுமோ!
இமை மூடா  விழியிரண்டும் குளமாகுமோ!
இடு கல்வி மனம் நின்றும் 
தோல்வி  நிலையாகுமோ!
எமையாளும் சரஸ்வதிக்கு இது தர்மமோ?
எதிர்காலம் எமக்கும்  நல் ஒளிகாட்டுமோ?
இருள்மேகம் கலைந்தால் 
நல் ஓளி தோன்றுமே! 
இது ஏனோ இவ்வுலகுக்கு ஒரு  சாபமே?   
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/24/2011

சித்தத்தைத் தெளியவைத்து........


சித்தத்தைத் தெளியவைத்து                                                                                    சீர்கொடுக்கும் மாரியம்மா
சீரான வாழ்விழந்து
சினம் கொண்டோம் பாருமம்மா

உந்தன் பக்தர்க்கு யாருமின்றி
பரிதவிக்கும் காலமம்மா
பாராமல் நீயிருந்தால்
பகைவர் பலம் மெருகேறுமம்மா

காளியம்மா நீ  வருவாய் 
கண்ணெடுத்துப் பார்த்திடுவாய் 
கலியுகத்தை மாற்றிடுவாய் தன்னாலே 
வரும் கஸ்ரங்களைப்  போக்கிடுவாய் முன்னாலே 

அன்புநிலை காத்திடுவாய் 
அகந்தைதனை அழித்திடுவாய் 
அருந்துணையாய் வந்திடுவாய் அம்மா நீ 
இந்த அடிமை வாழ்வை அகற்றிடுவாய் அம்மா நீ 

சத்தியத்தைக்  காத்துநிற்கும் 
சந்ததியை வாழவைத்துப் 
பொய்க்குடியை மாய்த்திடுவாய்  அம்மா நீ
அந்த பெரும் பணியையாற்றிடுவாய்  அம்மா நீ  
அந்த பெரும் பணியையாற்றிடுவாய்  அம்மா நீ  










  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/19/2011

சிந்தனைத் துளிகள்.

(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம்குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியைமறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமனானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய்மாறும்.

 (6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்கு பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள்மீதும் 
         அதன் தத்துவங்கள்மீதும் கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/14/2011

சூரிய பகவானே! .......


இரத்தம் பொங்கி வழிகிறதே!.
இருதயம் அங்கெ துடிக்கிறதே
உலகுக்கு ஒரு சாட்சி
உனக்குமா .இல்லை மனசாட்சி!

கடல் அன்னை அணைப்பாலே 
கடுங் கோவம் தணிப்பவனே
உலகத்தின் சங்கதியை 
ஓயாமல்  பார்ப்பவனே 
தமிழன்னை என்னிடத்தில் 
தவறென்ன நீ கண்டாய்?

பொங்கிப் படைத்த இனம் 
மங்களத்தை   இழந்த பின்னும் 
மங்காத ஒளிகொடுக்கும் 
எம்  தங்கமே உனக்கு
எங்கள் மீது கோவம் என்ன!

ஏற்றத் தாழ்விங்கே 
எப்போதும் பாராமல்
எறிக்கின்ற உன் ஒளியில் 
இடரின்றி வாழும் இனம்
இறைவன் என்று கொண்டாடும் 
இன்னிலையிலும் ஏனோ

சரித்திரத்தில் இருந்து
எம் இனத்தை முற்றிலும்
அழித்திட நினைக்கும் 
இந்தத் தரித்திர பலனை 
நீயும் துடைக்க மறந்தாய்!

படைத்தவன் கணக்கில் 
பஞ்ச பூதங்கள் அழிவதில்லை 
உயிர் வளர்த்திடும் இவைகளும் 
எமக்கெதிர் ஆனதென்ன!

ஊர்வனபோல்  மனம் 
உழன்றிடும் போதிலும் 
நெஞ்சின்மேல் 
தேர் வலம் வருவது முறைதானோ!
திருவடி தொழுதிடும் 
அடியவர் மனங்களை 
தீக்கிரை ஆக்குதல் சரிதானோ!

பாக்குடன் வெற்றிலை 
பல வகைப் பழங்களும் 
பாலொடு  நெய்யும் நல்ல  
பச்சை அரிசிப் பொங்கலும்
படைத்திட இன்னமும் 
மனம் துடிக்கிறதே!.....இருந்தும்

சேற்றினிலும்    மழையினிலும் 
சிக்கித் தவிக்கும் இன்நிலையில் 
ஒருவேளை சோற்றுக்கும் 
உறங்க ஒர்  இடத்திற்கும்
நாதியற்று எம்மினம்
நடுத் தெருவில் நிற்க்கிறதே!
.
மாடி கட்டி வாழ்ந்த இனம்
இன்று மண்டியிட்டு நிற்கையிலே
வேள்வியது உனக்களிக்க
வேறுவழி தெரியலையே!

ஆறாகிப் பெருகியோடும்
அத்தனை துன்பமும் இங்கே
நீறாகிப் போக எமக்கு இனி 
நீதான் அருளல் வேண்டும்!


நவக்கிரக நாயகனே எமக்கு
நல்ல பலன் தந்தருள்வாய்
அடுத்து வரும் பொங்கலேனும் 
எம் அகம்  குளிரச் செய்திடுவாய்.        
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/07/2011

நெஞ்சைச் சுடும் நெருப்பு




ஒருவேளை உணவுக்காய் உயிர்
ஏங்கும்   ஏக்கம் பார்!
உண்ணாமல் உறங்காமல் 
உடல் போகும் போக்கைப் பார்!
தெருவோரம் காய்கின்ற மனித 
கருவாட்டு இனத்தைப் பார்!
நினைத்தாலே நெஞ்செரியும் 
நிஜமான காட்சி பார்!

அழுதாலும் தொழுதாலும் இனி
 யாருண்டு எண்ணிப்பார்!
அன்றாடம் நீ சிந்தும் அநியாயச் 
செலவை இன்றேனும் சிந்தித்துப் பார்!
பூப்புனித நீராட்டாம்  
போடுகின்ற கூத்தைப்பார்!
இது புலம்பெயர்ந்த மண்ணினிலே 
புதுமையான சினிமா பார்!

ஏட்டிக்குப்  போட்டியாக
கெலிகொப்ரர்பறக்குது பார்!இந்திர லோகமே இங்கேதான் தெரியுது பார்!
வெள்ளைத்தோல் விளக்கேந்தி
வரிசையாகச் செல்வதைப் பார்!
வீதியெல்லாம்  வெண்கம்பளம் விரித்தும்  
மலர்துவும் பெண்களைப் பார்!
சொன்னபடி தைத்த ஆடைகள்
சொர்க்கத்தைக் காட்டுது பார்!

கண்ணை மயக்கும் அலங்காரம்
காண்பவர் உடலிலெல்லாம் தெரியுது பார்!
மண்டப வாயிலில் வைத்த  குத்துவிளக்குகள்  
மணவறைவரைக்கும் தொடருது பார்!
கற்பனைக்கே எட்டாத கலைநயம் மண்டபத்தில்
கலக்குகின்ற கலக்கலைப் பார்!

இத்தனைக்கும் மத்தியிலே
என்றேனும் ஒரு நாள் 
இல்லாத ஏழைகளின் எரிகின்ற வயிற்றைப் பார்!
காதலிலே தோல்வியென்று
கண்டபடி உழறும் மனிதர்கள் முன்
கட்டியணைக்க யாருமின்றி
கதறி அழும் மழலைகள் பார்!

செக்கலில் செல்வதற்கு
சிவன் துணை கேட்பவர் முன்
எவன் துணையும் இல்லாமல்
இடுகாட்டில்உறங்கும் மழலைகள் பார்!
கொடுப்பவனுக்கும் இவர்களுக்குக் கொடுக்கும்
ஒரு மனம் இன்னும் வரவில்லையே பார்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.