9/30/2015

கம்பன் கழகம் வழங்கிய பட்டம் !

                                             
  நன்றியுரை ஏற்று நலம் வாழ வாழ்த்திடுவீர் !

மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவும் என்றன்
....... மனநிலையைச் சொல்லத்தான் வார்த்தை இல்லை !
கண்கண்ட தெய்வத்தால் நானும் இன்று
........களிப்புடனே பெற்றுவந்தேன் உயர்ந்த பட்டம்  !
எண்ணம்போல் வாழ்த்துவீரே நாளும் வந்து
........என்வலையில் கருத்திட்டு மகிழ்வீர் என்றன்
நண்பர்களே! உறவுகளே !  பிரான்சு கம்பன்
.......நற்பணியை வணங்குகின்றேன் மறவேன் வாழ்வில் !

ஆசானுக்கு நன்றி !

மங்காத புகழ்சேர்த்த ஆசான் உன்றன்
........மனம்வாழ வாழ்த்துகின்றேன் வையம் தன்னில் !
பொங்குதமிழ் ஆர்வத்தை ஊட்டும் உன்போல்
.......பொன்போன்ற மனத்தவர்கள் வேண்டும் இங்கே !
தங்கட்டும் மங்களமும் தார்கள் யாவும் !
.......தரணியெல்லாம் உன்புகழைப் பாடும் வண்ணம் !
எங்களுக்கோர் நல்லாசான் நீவீர் இந்த
.......இசைக்கின்றேன் இதயத்தில் நன்றி !நன்றி !

நட்பு உறவுகளுக்கு நன்றி !

வல்லகம்பன் கழகத்தின் தலைவர் எங்கள்
.......வலையுலக நாயகனின் எண்ணம் போல
நல்லகவி நான்படைப்பேன் நாளும் இங்கே
.......நான்வணங்கும் தெய்வத்தின் அருளைப் பெற்று!
இல்லையொரு குறையுமென்று கற்றோர் போற்ற
.......இளையவளின் படைப்போங்கச் செய்வீர் தம்மின்
எல்லையிலா நற்கருத்திற் கீடும்  உண்டோ !
......என்வலையைத் தொடர்கின்ற நட்பே !நன்றி !

மின் வலைக்கு நன்றி !

நன்றியுரை நானுரைக்கும் இந்த வேளை
........நான்மறவேன் எழுதுகின்ற எழுத்தைத் தாங்கும்
மின்வலைகும் நன்றியினைச்  சொல்வேன் இங்கே
.......மீண்டுமிந்த வாய்ப்பளிப்பீர் மின்னல் தீவே !
உன்னைநம்பி உலகத்தோர் வாழு கின்றார்
.......உணர்வுகளைப் பகிர்ந்துவிட்டு உறங்கு கின்றார் !
என்றுமிதைக் காக்கின்றாய் எண்ணம் போல
.......ஏழ்பிறப்பும் தொடர்ந்திருப்பீர் உலகப் பந்தில் !

என்னை  ஈன்ற பெற்றோருக்கு நன்றி !

என்னையிங்கு ஈன்றெடுத்த பெற்றோர் ஏற்பீர்
........இதமான நன்றியினை என்றும் காப்பீர் !
பொன்னைவிட பெரிதாக என்னைப் போற்றிப்
.......பொறுப்புடனே விருப்புடனே வளர்த்தீர் அந்த
நன்மைக்குப் பரிசளித்தேன் நானும் இங்கே
........நலம்வாழ வாழ்த்திடுவீர் என்றும் இந்த
இன்பத்தில் உறைந்திருக்க என்றன் நெஞ்சம்
........இறையாக நான்காணும் என்றன் வாழ்வே !

                                         








தொடரும் ............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2015

பொங்கி எழு தமிழா !




பொங்கி எழு தமிழா !
                               
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
    வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல்  வேண்டும் !
தருமநெறி  காக்கின்ற செயலைச் செய்து
     தமிழர்நாம்  தமிழராக வாழ்தல்  வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல்  வேண்டும்
     பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
     எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !

கருமமதைக்   கண்ணாகக்  கொள்ள   வேண்டும்!
     களவின்றிப் பொய்யின்றி வாழ்தல்   வேண்டும் !
உருகாதோர்  மனமுருகச் செய்ய வேண்டும்
     உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
     அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
      வீறுகொண்டே  எவருமிங்கு  வைக்க வேண்டும் !

நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
      நாட்டமுடன்  காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
     மனமொத்துப்   பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
      அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
       தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !

                                                                   
                                                      
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’   மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை. 


இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் 

வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி

வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !

இப்படிக்கு 

உண்மையுள்ள 

அம்பாளடியாள் 

நன்றி .

                                                        



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2015

மரண ஓலம் கேட்கிறதே !!


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன?.. இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன?..
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....


                                              (மரண ஓலம் கேட்கிறதே....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2015

ஒன்றில் நான்கு!



                                                                 
வண்ணக் கவிகள் வழங்கு!

ஒன்றில் நான்கு!


பஃறொடை வெண்பா!

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத்  தமிழணங்கே! ஈடில்லாப் பேரழகே !
துன்பம் துடைத்துத் துணிவூட்டி- என்றென்றும்
வண்ணக் கவிகள் வழங்கு !

நேரிசை வெண்பா   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத் தமிழணங்கே !ஈடிலாப் பேரழகே !
வண்ணக் கவிகள் வழங்கு !

சிந்தியல் நேரிசை வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
வண்ணக் கவிகள் வழங்கு !

குறள் வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
வண்ணக் கவிகள் வழங்கு !

இலக்கணக் குறிப்பு !  
பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை  வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !

                                                                             

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/02/2015

பாவலர் பட்டம் !

                                                                               
                                                           

                                        
                                               
நன்றியென்று நானுரைக்க நாள்முழுதும்  போதாதே !
என்றுமிதை நான்மறவேன் என்குருவே !-கன்னல்
கவிபுனையும் ஆற்றலினைக்  கற்றிடச் செய்து 
புவிபோற்றச் சேர்த்தாய் புகழ் !

எண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்  
             இனிக்கும் நெஞ்சம் !
மண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்
             மகிழ்து  ஏற்றேன் !
கண்ணான என்குருவே காரணம்நீ  இன்றிதனைக்
            கைகள் ஏந்த!
விண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன்  பாதத்தில்
            விரைந்தே  வாழ்த்து !




அன்பு உள்ளங்களே !
வான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார் 
நான்மகிழத் தந்திட்டார் நற்பட்டம்  !-மீன்போல்
எனதுள்ளம் நீந்துதே! இன்றிதனைக் கண்டு 
மனதாரச் சொல்லுங்கள் வாழ்த்து !

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து, 
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் 
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்  

இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

அன்பு உள்ளங்களே! இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம்  பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் !இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..

                                  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.