3/31/2015

சொந்த மண்ணில் வாழ்வதுபோல் ஒரு சுகம் வருமா !

                                                       


பெற்ற பேறும்  அனைத்தும் இங்கே
                        பெருமை சேர்த்தாலும்
கற்ற கல்வி மனத்தில் தோன்ற
                          களிப்பே   என்றாலும்
உற்ற நல்ல துணைகள் இன்றி
                          உணர்வும்  உய்யாதே
வற்றிப் போன குளத்தில்  மீன்கள்
                          வாழ முடியாதே !

குற்ற மற்ற இனத்தைக் கொன்று
                         குவித்த பாவிக்கும்
சுற்ற முண்டு சுகமும் உண்டு
                          சுழலும் பூமியிலே !
கற்ற வித்தை பகைவர் முன்னே 
                         கலைந்து போனதால்
பெற்ற பேறும் பெருமை யாவும்
                          பெயர்ந்து போயினவே !

சட்டி பானை கழுவி நாளும்
                          சலித்துப் போகின்றோம் !
கெட்டி யான உணவும் இன்றிக்
                            கிழவர் ஆகின்றோம் !
கட்டிக் கொண்ட மனையாள் வந்து
                            கணக்குக் காட்டினால்
வட்டிக் கும்தான் பணத்தை வாங்கி
                            வருத்தம் கொள்கின்றோம் !

நாடு மாறி வருந்தும் மக்கள்
                       நடப்பைக் கேளுங்கள் !
சூடு பட்ட எமது வாழ்வின்
                       சுகத்தைப் பாருங்கள்!
ஓடு கின்றோம் உழைப்பை நாடி
                        ஒழுங்கு சீரற்று !
வாடு கின்றோம் வருந்தி நாளும்
                        வழுக்கை யும்உற்று !

ஊறு காயும் பழைய சோறும்
                           உண்ட காலத்தில் 
வேறு எந்தத் துயரும் இன்றி
                          வெளிச்சம் கண்டோமே !
நாறு கின்றோம் அகதி என்ற
                             நரக வாழ்வெய்தி
வேறு என்ன சுகத்தைக் கண்டோம்
                             வெறுப்பும் மேலோங்க !

அங்க மெல்லாம் துடிக்கு திங்கே
                            அகதி என்செய்வோம் !
தங்க வந்த இடத்தில் நாளும்
                             தவிப்பில் மூள்கின்றோம் !
எங்கள் பூமி எமக்குத் தந்த
                              எதுவும் சொர்க்கம்தான் !
அங்கே உள்ள கொடுமை மாண்டால்
                               அழுகை நிற்கும்தான் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2015

போருக்கோர் முற்றுப் புள்ளி போட்டு விடு இக்கணமே !

                                                           
   

நஞ்சை எவர்தான் வார்த்தாரோ
    நாச தருணம் பார்த்தங்கே!
நெஞ்சைப் பிளக்கும் அச்..சாவும்
    நேர்ந்த தெதற்குச் சொல்தாயே  ?
வஞ்ச கருக்கோர் பாடத்தை
     வாழ்வில் உணர்த்த மாட்டாயோ 
கொஞ்சும் மழலைச் செல்வங்கள்
      கொண்ட துயரம் கண்டிங்கே !

போரும் முடிஞ்சு போயாச்சாம்
    பொல்லா தவர்தான் சொல்கின்றார் !
நேரும் கொடுமை கண்டாயோ 
     நேற்று வரை நீ  எம்வாழ்வில்!
கோரும் உரிமை  கிட்டாமல்
     கோலம் கலைந்து நிற்கின்றோம் !
சோரும் மனத்தில் மென்மேலும்
      சோகம் விளைத்தார்  ஏன் ..தாயே ?..

அல்லும் பகலும் அச்சத்தால்
     ஆன்மா உறைந்த போதெல்லாம்
கொல்லும் வரையெம் உற்றாரைக் 
      கொன்று குவித்தார் போதாதா !
வெல்லும் வகையில் வீரத்தை
      வேங்கை உணர்த்தி வந்தாலும்
நல்ல தெதையும் நாடாதார்
        நாசம் புரிந்து விட்டாரே !

பொல்லா தவரின் ஆசைபோல்
    போரில் இணக்கம் கண்டாச்சு !
எல்லாம் முடிந்த பின்னாலும்
     எம்மை வதைப்ப தேன்தாயே ?..
நல்லோர் உலகில் வாழத்தான்
      நல்ல தருணம் கிட்டாதா ?...
அல்லல் மிகுந்த வாழ்நாளை
      அன்பால் விலகச் செய்தாயே !

சுற்றம் இழந்து நாம்வாழச் 
    சூழ்ச்சி இனியும் மேற்கொள்வார்
கற்ற தெதையும் வாழ்நாளில்
     கருத்தில் கொண்டு பயணிப்போம் !
பெற்ற துயரம் இங்கேதான்  
      பெருகா வண்ணம் அருள்செய்வாய் 
உற்ற துணையாய் எமைக்காக்க 
      உள்ளம்  உருக அழைக்கின்றோம் !

                                                              


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2015

தனிமை என்ற கொடுமை அது ஒன்றே போதும் !


                             


பொட்டு  இழந்த பெண்முன்னே
    போகச் சகுனம் பார்ப்போரே
தொட்டுத் தமது  நெஞ்சத்தில்
    தோன்றும் கருத்தைச் சொல்லுங்கள்!
பட்டும் படாமல் நாமிங்கே
     பாடம் நடத்திச் செல்கின்றோம்
கட்டும் பலரின் தாலிக்கும்
     காடே  உறையா வாழ்வுண்டோ ?...

கண்ணை இமைபோல் காத்தாலும் 
    காலன் முடிப்பான் வாழ்நாளை !
பெண்ணிற் கிதனால் துன்பம்தான் 
     பேசத் தெரிந்த பொம்மைகளே !
உண்மை உணர்ந்து பேசுங்கள் 
     உள்ளம் அதனைக் கேட்டிங்கே 
வெண்மை தூய்மை நிறமன்றோ  
     வேறு உளதோ சொல்லுங்கள் ?..

 கட்டில் சுகமும் இல்லாமல்
    காவல் அதுவும் இல்லாமல்
முட்டி வலிக்க எந்நாளும்
     முத்துக் குளிக்கச் செல்கின்றாள்!
தொட்டில் அவளும் இட்டாள்பார்
     தோல்வி இனியும் வாராமல்
கொட்டிக் கொடுக்கத் தான்வேண்டும்
     கொள்கை எதுவும் மாறாமல் !

தாலி இழந்தாற் போலிங்கே 
   தன்மை எதுவும் மாறாது !
காலி வயிறும் கேட்காது 
    காசும் பணமும் பூக்காது !
வேலி பலதைத் தாண்டித்தான் 
    வேறு வழிகள் இல்லாமல் 
கூலி இவளும்  செல்கின்றாள் 
   குஞ்சைத் தனியாய்க் காக்கின்றாள் !

அம்மா இவளின் ஆற்றல்முன்
    ஆறும் கடலும் தோற்றுப்போம் !
இம்மா நிலத்தின் தெய்வத்தை 
     என்றும் குறைவாய்  எண்ணாதீர் !
சும்மா நடந்து சென்றாலே 
      சூடு தணியும் மண்மீது !
எம்மாம் பெரிய வானுக்கும் 
       என்றும் குளிர்ச்சி  அம்மாதான் ! 

பெண்ணின் மனத்தைப் பூவென்றோம் 
    பேதை அவளைத் தான்கொன்றோம் 
மண்ணில் இதைத்தான் இப்போது  
     மாற்ற முனைந்தோம் தப்பேது ?...
கண்ணைத் திறந்து பாருங்கள் 
      கண்ணீர்க் கதையைக் கேளுங்கள் 
எண்ணெய் இழந்த தீபத்தை 
       என்றும் எரியச் செய்யுங்கள் !

தாலிக் கொடியும் பொட்டும்நாம் 
     தந்து மகிழ்ந்தோம் பெண்ணுக்கு
வேலி இதுதான் என்றெண்ணி 
     வேறு  உளதோ காரணங்கள் ?..
போலிச் சடங்கும்  ஒன்றாலே 
      போதும் விழைந்த சாபங்கள் !
காலில் விழுந்தும் கேட்கின்றோம் 
      காக்க விரைந்து வாருங்கள் !  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/12/2015

முடங்கிக் கிடந்தாள் அது அந்தக் காலம் !




காலம் கடந்து பெண்ணிங்கே 
  காற்றில் மிதந்து செல்கின்றாள் !
ஏலம்  விடுவோர் பின்வாங்க  
    என்றும் புதுமை காட்டித்தான் !
கோல விழியாள்  தான்கொண்ட 
    கொள்கை எதுவும் மாறாமல் 
பாலம் அமைத்துச் செல்கின்றாள்  
    பார்ப்போர் உள்ளமும்  கொண்டாட!

பெண்ணை அடிமை என்றோரும் 
     பெருமை கொள்ளும் பொற்காலம்
மண்ணில் தவழக் காண்கின்றோம்
     மாற்றம் இதுவே  போதாதா?.. 
கண்ணை மதிக்கத் தான்வேண்டும் 
     காலம் கடந்த பின்னாலும் 
எண்ணக் கருத்தில் மாற்றத்தை 
     என்றும் விரும்பார்  மாறுகவே !

சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச் 
   சார்பாய் எதுவும் இல்லாமல் !
திட்டம் இதனைத் தான்வென்று 
    தீபோல் எழுந்து நிற்கின்றாள் 
பட்டப் படிப்பால் எப்போதும் 
     பாரை வியக்க வைக்கும்பெண் !
முட்டப் பகைமை கொள்ளாதீர் 
     மூடர் எனவும்  நில்லாதீர் !

ஆட்டம் இழக்கச் செய்திடுவாள்    
     ஆளும் திறமை தான்கொண்டு !
பாட்டன் அவர்தம் முப்பாட்டன் 
      பாரில் எவரும் காணாப்பெண் ! 
கூட்டம் நடத்தி மானத்தைக் 
     கூவி இனிமேல் விற்போர்க்கும்  
சாட்டை அடிதான் தப்பாது !
      சற்றே இதனைச் சிந்திப்பீர் !

நாட்ட முடனே பொய்யின்றி 
   நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
சூட்டப் பெயர்கள் தேடாதீர்
    சூடு சுரணை அற்றோரே !
வாட்டும் துயர்கள் போக்காமல்
    வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும் 
வேட்டும்  ஒருநாள் வைப்பாள்பார்
   வெல்லும் பெண்மை இவ்வுலகை !..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/06/2015

காக்கும் சக்தியே எமைக் காண ஓடிவா ...

                                                                           

பொன்னை அளித்தோம் ஏனிங்கே 
    பொல்லா தவரின் ஆசைக்குத்
தன்னைக் கொடுத்தும் தாழ்கின்றாள்
     தாய்மை நிறைந்த பெண்என்றும்! 
நன்மை எதையும் காணோமே
     நாளும் கொடுமை மேலோங்க
உன்னைத் துதித்தோம் பாரம்மா!
     ஊழை அகற்ற வா......அம்மா !

அல்லும் பகலும் துன்பத்தால்
     ஆன்மா துடிக்க லாமோசொல் ?!
கல்லும் கரையும் இந்நேரம்
      காக்க விரைந்து வா ,,தாயே !
நல்லோர் மனம்போல் வாழத்தான் 
     நன்மை அருளும் தெய்வம்நீ 
வல்ல துணையாய் எந்நாளும் 
      வந்திங் கினிமை அருள்வாயே !

கற்றார் எவரும் தம்போக்கில் 
   காலம் கடத்திச் செல்கின்றார் !
உற்றார் உறவினர் கூடத்தாம்  
   சுற்றம் மறந்து வாழ்கின்றார் !
நற்ற வமே..!நீ தானே...எந்  
     நாளும் பொழுதும் காப்பாயே !
அற்ப சுகத்தை உலகெண்ணி  
     அழிதல் அழகோ சொல்..தாயே !

அஞ்சிப் பிழைக்கும் வாழ்நாள்கள்  
     அன்பில் தவழ என்றென்றும்  
நெஞ்சில் துணிவைத் தந்திங்கே 
     நேர்மை வழியைக் காட்டம்மா ! 
பஞ்சம் மறையும் அப்போதே
     பாசம் மிகுந்த தாயுன்னால் 
கொஞ்சும் சலங்கை கூத்தாடும்  
      கோல விழிகள்  பூத்தாடும் !!!!

பெண்ணின் மனத்தைப் பொன்போல 
    போற்ற எவரும் செய்..தாயே !
கண்ணின் மணியே கற்பகமே 
     காவல் எமக்கு நீ..தானே !
எண்ணும் பொழுதே இன்பத்தை 
     என்றும் அருளும் அன்னைபோல் 
மண்ணில் எவரும் உண்டோ ..சொல்! 
      மாத வமே!..வா   எம்..தாயே ! 
      

      
 (படம் இணையத்தில் இருந்து
பெறப்பட்டது .நன்றி )                    

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.