1/17/2014

சாதி மத பேதமின்றி சங்கடங்கள் துலைத்து ஒரு


சாதி மத பேதமின்றி
சங்கடங்கள் துலைத்து ஒரு
நீதி நெறியான வாழ்வு
மலர வேண்டும் ...........

ஆதி சிவ சங்கரனே
அன்பிலுருவானவனே
பாவிகளின் மனம்
குளிர வேண்டும் .......

ஓசை ஒலி யானவனே
ஒளிரும் சுடரானவனே
ஆசை தரும் துயர் அனைத்தும்
அழிய வேண்டும் .........

வாச மலர்ப்  பொய்கையிலே
வந்து போகும் தென்றலைப் போல்
நேசம் நிறைந்த நெஞ்சினில்
நீ வேண்டும் .....


பேசுகின்ற வார்த்தைகளில் 
பெருமை சேர்க்க வேண்டும்..
பெண்மையிலும் மென்மையான
உண்மை செழிக்க வேண்டும் ....

பாசம் ஒன்றே வாழ்வனைத்திலும்
பற்றி நிற்க வேண்டும் .....
பதுமையான குணனலத்தால் மனம்
முதுமை காண வேண்டும்  ...........

தேசம் நலன் பெற வேண்டும்
தென்றல் சுகப் பட வேண்டும்
மாசம் மார்கழி மாசம்
மழை போல் உன்னருள் வேண்டும் ...

வா வா இறைவா எம்முன்னே ..
வணங்கும் மனக் கண் முன்னே
தா... தா... உன்றன் அன்பைத் தா ...
தரமாய் வாழ்க்கை செழித்திடவே ..

                                           ( சாதி மத பேதமின்றி )
 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/12/2014

தைப் பொங்கல் மன மகிழ்வைத் தருமோ இங்கே ...


ஏர் பிடித்த கரங்களெல்லாம் தம்
இதயமதால் நன்றி சொல்லக்
காத்திருந்த தைப் பொங்கல்
கனிந்திங்கே வந்ததென்றால்
சொல்லவா வேண்டும் ?

உழவர்கள் மனம் போல
உள்ளும் புறமும் வெள்ளையடித்து
முற்றத்தில் கோலம் போட்டு
வெடி முழக்கத்தோடு
கதிரவன் எழும் முன் எழுந்து

தலை வாழை இலை போட்டு
நிறை குடமும் வைத்தங்கே
புதிய கரும்போடு பூ பழங்களும்
புத்தொளி வீசும் குத்துவிளக்கேற்றி
திக்கெட்டும் ஒளி பரப்பும் தெய்வத்தை வணங்கி

இல்லத் தலைவனும் தலைவியும்
புதுப் பானையை அடுப்பில் ஏற்றி
புது மஞ்சளைக் காப்பாய்க் கட்டி
புத்தரிசி இட்டு இனிய
பொங்கலது பொங்கி வரும் வேளையிலே
சுற்றம் சூழ நின்று

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
உள்ளத்தில் ஆனந்தம் பொங்க

கதிரவனுக்கும் பூமித் தாய்க்கும்
கால் நடைகளுக்கும்
கலப்பைகளுக்கும் கூட
நன்றி சொல்லும் பெருநாளாய்
உழவர்கள் திருநாளாய்
அன்று எங்கள் வாழ்வெல்லாம்
அலங்கரித்த தைப் பொங்கலது
இன்று எங்கள் வாழ்வினிலே
இல்லையடி தை மகளே!

குத்து விளக்குகள் சரிந்த பின்னால்
குல விளக்குகள் துலங்குவது எப்படி?
பொத்தி வைத்த துயரனைத்தையும்
பொங்கலாகப் பொங்கட்டுமா இங்கே?
அத்தி பூத்தது போல்
ஆனந்தம் சில நொடி தான்

பொத்தி வெடித்து உடலைப் 
பிளந்த காட்சி நாம் மறப்பதெப்படி?

கொத்தி விறகாக்கி
வண்டில் கலப்பை எல்லாம்
எரித்த பின்னால்
கத்தி முனையில் நின்று  கொண்டே நாம்
களிப்புடனே பொங்கல் பொங்குவது எப்படி?

அந்தக் கடந்த காலம் திரும்பி வருமா ?
நாம் பட்ட துன்பம் மறைந்திடுமா?
உடைந்த பானைகளும் கேட்கிறதே
உழவர்கள் படும் துயரைத்  தீர்ப்பதாரு?

வருந்துகின்றோம் தை மகளே உன்னை
வணங்கக் கூட கைகளின்றி
உலகில் மக்கள் பசியைப் போக்கும்
உழவர்கள் எமக்கேன் இந்த  நிலமை!

கன்று பசி கிடக்க
காய்ந்த மாடுகள் கண்ணீர் வடிக்க
பட்டி பெருகுவதெங்கே?
பால் பானைகள் தான்
பொங்குவதெங்கே ?

பச்சை அரிசி அதைப் பார்த்தே
பல காலங்கள் ஆகிப் போச்சே!
உத்தரத்தில் செருகி வைத்த கத்திகள்
ஒவ்வொன்றாக எரிஞ்சு  போச்சே!

இனிச் சூடு மித்தித்த கால்கள் இங்கே
சுறணையற்றுக் கிடக்கும் போது
ஏரைப் பிடிப்பதாரு ?
எம் நிலத்தை உழுவதாரு ?

ஏனம்மா இப்படி ?

வற்றாத பொங்கலது
வழிந்தோடுது கண்களிலே இனிச்
செத்தாலும் மறக்க மாட்டோம் நாம்
சேமித்த துக்கம் அப்படி!
எமக்குப் பொற் காலம்
என்று வருமோ?
போ மகளே

மென்று துயர் கொன்று உடல் அதை
வென்று வரும் இவ் வேதனை
என்று தணியுமோ
நீ அன்று வருவாய்
இன்று எமக்கில்லைத்
தைப் பொங்கல்
சென்று வா தை மகளே!
மீண்டும் ஒரு நன் நாளுடன்.

                                                     

                                                                 

குறிப்பு :சென்ற ஆண்டு தைப் பொங்கல் திரு நாளை ஒட்டி 
கவிதை அரங்கு நிகழ்வுக்காக நான் எழுதிய கவிதை இதனைக்  
கண்டு ரசித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 
உரித்தாகட்டும் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/09/2014

வஞ்சர மீனே வஞ்சர மீனே




வஞ்சர மீனே
வஞ்சர மீனே
வழுக்கி ஓடாதே...
வலுவிழந்த எந்தன் கைகளைச்
சுழுக்கி ஓடாதே ......

கொஞ்சிடும் மழலைப்
பூக்களெல்லாம்
குவிந்து விட்டாரே .......
கொட்டிடும் மேளச்
சத்தத்தைக் கேட்கப்
பாக்கள் தந்தாரே .......

மிஞ்சிடும் துணியை
நெஞ்சினில் போட்டு
மூடி வைத்தவளே!
பஞ்சணை மீது
உன் கதை கேட்க
பக்குவம் சொல்லாயோ?

எட்டடி பாயப் பத்தடி பாயும்
தோழி நீ தானே!
என்னைக் கட்டிய கூந்தலில்
பூவைப் போல
பொத்தியே வைத்தாயே!

முந்திரிக் கொட்ட மாமா உன்ன
முழுங்கப் போறேண்டி
பந்தியில் வைத்தொரு
தாலியைக்  கட்டி புதுப்
பாடம் சொல்வேன்டி .

சித்திரை வந்ததும்
சீர் கொடுக்கச்
சேதி சொல்லடி ஓய்.......
அந்தக் கத்தரிப் பூக்கலர்
சேலையைக்  கட்டியுன்
அழகை நான் காண ...

                                     (வஞ்சர மீனே )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2014

வில்லேந்தும் விழியிரண்டில் மொழிப் பயிற்சி தான் எதற்கு



வில்லேந்தும் விழியிரண்டில்
மொழிப் பயிற்சிதான் எதற்கு!
கல்லாரும் கற்றவரும்
கண்டு மயங்கும் பேரழகே!

முல்லைப் பூச் சூடி விட்டேன் என்
முன் அமர்ந்த பாவை உன்னைக்
கண்ணுக்குள் வைத்த நொடி
காதல் நெஞ்சில் பொங்குதடி!

நாணத்தை விட்டுத் தள்ளு
நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு
கானத்தை இசைக்கும் குயில் முன்
களியாட்டம் ஆடும் மயிலே!

ஊரெல்லாம் உன் பேச்சு
உனக்குள் தான் என் மூச்சு
காதோரம் சொல்வேன் கேள்
களிப்பான செய்தியொன்று

மாதவத்தால் வந்தவளே தேன்
மாங்கனி போல் சுவைப்பவளே
ஈருடலில் ஓருயிராய் நாம்
இணைந்திடத்தான் சம்மதமா ?....

ஓவியக் கவிதை (அம்பாளடியாள் )
வணக்கம் உறவுகளே ! 
இந்தக் கவிதையானது சென்ற வாரம் சகோதரரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் http://venkatnagaraj.blogspot.com/2013/12/6.html ஓவியக் கவிதை 
அழைப்பை ஏற்று நான் எழுதிய கவிதை .இதனைக் கண்டு ரசித்துப் 
பாராட்டியவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் என் மனமார்ந்த 
நன்றியினைத் தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .

                                                மிக்க நன்றி உறவுகளே !

                                     



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.