6/01/2012

விதியே இது என்ன விளையாட்டு!!.....

மலர் கொண்டு வந்தேன் 
மண மாலை தொடுக்க
மலர் வாடும் முன்பே உன் 
உடல் வாடிப் போனதேன்!!..

கலையாத கனவு சிலையாகி நின்றதே 
கண்ணே உன் விழிகளில் காணாத என்னை 
உனக்குள்ளே தேடினேன் மனம் இன்று 
உருக்குலைந்து வாடினேன் சொல்......

என் உயிரை நீ என்ன செய்தாய்?......
திருக்கோவில் வாசலில் உனக்காக 
ஒளிதீபம் ஏற்றினேன் அதற்கும் எந்தன் 
விழி நீரை நான் உற்றினேன் ஏன்!!......

மணக்கோலம் கலைந்திங்கு உன்னை 
பிணக் கோலத்தில் காண்பதற்கா....!!
உருவான அன்பிற்கோர் எல்லை இல்லை
இவ் உலகத்தில் நீயின்றி நானும் இல்லை

நிலவுக்கு வானம்தான் சொந்தம் அம்மா 
எந்த நிலை வந்தும் மாறாத பந்தம் அம்மா  
வளர் பிறையாக நீ வந்து எனைச் சேரும்வரை 
வாழ்வேனே உனக்காக என் ஆயுள்வரை!.... 

5/31/2012

நான் அறிவில் கடல் என்றால் போதுமா!..

மனம் என்னும் திரையை 
மறைத்து வைத்த இறைவன் 
அறிவென்னும் திறனையும் 
ஆங்காங்கே தூவி விட்டான்!!....

இதில் தினம் தோறும் இன்பம் 
தேடும் சில வர்க்கம் இங்கே 
எதைக் கண்டும் அஞ்சாது 
ஏமாற்றிப் பிளைக்கயிலே 

இதை விதியென்று நொந்து 
வீதி எங்கும் புரண்டு தினம் 
அழுதூத்தும் பக்தர்களுக்கு 
ஆண்டவன்தான் என்ன செய்வான்!..

மண்ணாசை பொன்னாசை 
பெண்ணாசை கொண்டுழலும் 
மதிகெட்ட மனிதர்களும் வாழும் இவ் உலகினிலே 
மனிதநேயம்தான் என்ன செய்யும்......!!!

மகத்தான தத்துவத்தை ஏனோ 
மணிக்கணக்கில் கற்றவனும் 
மனம் போன போக்கினிலே உள்ளதை 
மறைத்து நீதி சொல்கையிலே


அந்த மனுநீதி தந்த சோழன் 
மனம் எங்கும் நிறைந்தானே 
எம் மனக் கண்ணில் தோன்றியவன் 
உடன் மாயமாய் மறைந்தானே!!...

உண்மைக்கு மட்டும் சாட்சியை 
இப்போது ஊரெங்கு தேடினாலும் 
அதுவும் வன்மையாய் தூங்கியே 
வழித் துணையாய் வர மறுக்கிறதே ஏன்!!...

சத்தியம் என்பதே தெய்வமடா பெரும் 
தலைக்கனம் கொண்ட மானிடனே 
நாம் நிற்பதும் நடப்பதும் அவன் செயலே 
நீ நிலை தடு மாறுவாய் இதன் எதிரினில் நின்றால்

புத்தியால் உயர்வு பெற்றாலும் 
சத்தியத்தை மதிக்காதவர் பண்பு 
உப்பு நீர் போல உயிர்களின் தாகத்தை 
எப்பொழுதுமே தீர்க்க உதவாது.

5/30/2012

திசை எட்டும் கை கூப்ப.....

திசை எட்டும் கை கூப்பத் 
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே 
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத் 
தோகை மயிலாள் நடம் ஆட 
இறைவா உன் கருணையதால் 
நல் இதயங்களும் மகிழாதோ!....

1/11/2012

நீங்காத நினைவுகளோடு நானும்!...

கடல் கடந்து ஒரு பயணம் என் 
வலைத்தளம் என்னும் இந்தக்
கனவுலகை விட்டும் என்றும் 
கவி பாடும் இந்தக் குயிலுக்கும் 


உடன் பிறவாத உறவுகள்போல்
தினம்தோறும் உறவாடி என் 
வளர்ச்சிக்கு வித்திட்ட உங்களையும் 
அன்பு வாசகர்களையும் விட்டு 

சில மாதங்கள் பிரிய மனம் இன்றி 
ஓர் பிரியாவிடை உங்களில் 
ஒருத்தியான நான் இதோ அந்த
பிரியும் வேளை வந்துவிட்டது!.....


எங்கு சென்றாலும் மறவாது 
இதயத்தில் ஒரு புது ஊற்றாக 
ஓடோடி வந்தழைத்து என்னைக் 
கவி பாட வைத்த உங்கள் அன்பு  


நான் இல்லாது போனாலும் 
மீண்டும் திரும்பி இங்கு வந்தாலும் 
இந்நாளில் தொடர்வதுபோல் 
எந்நாளும் தொடர வேண்டியபடி 


சென்று வருகின்றேன் உறவுகளே 
நான் சென்று வருகின்றேன் தமிழ் 
இன்பக் காற்றாக உயிர் மூச்சாக 
என்றும் எங்கும் செழிப்புற வாழ்த்தியபடி!...

1/09/2012

இதுதான் வாழ்க்கை!........

காலப் பெரு வெளியில் 
கலைந்து போன தன் கனவைத் 
தேடி அலைந்த சிறு பறவை 
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும் 
வாழும் போதே அறியாத இந்த 
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை 
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும் 
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும் 
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும் 
கண்ணில் கங்கை பொங்கி வழியும் 
தினம் காணும் உலகம் வெறிச்சோடி 
கானகம்போல காட்சி  தரும் .................


மானம் பெரிதென நினைக்கும் மனம் 
மனதில் அகப்போர் நிகழ்த்தி வரும் 
உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும் 
இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...

1/04/2012

எதுக்கு இந்தக் கொலைவெறி!.....

ஆடு போட்ட புழுக்கைகூட
அரு மருந்தெனக் கொள்ளும்போது 
ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும் 
அவலம் இன்னும் தீரவில்லையே !....


இது ஆடு செய்த பாவமா !...........
அடுத்தவர் இட்ட சாபமா !........
நீதி கேட்டு உயிர்கள் எல்லாம் 
நெஞ்சை நிமிர்த்தி நின்றால் இங்கே 


பாவம் மனிதன் என்ன செய்வான் 
பழகிய தோஷம் விட்டுச் செல்ல 
ஊனைத் திண்டும் உடம்பை வளர்த்தான் 
உடனே புரியுமா பிற உயிர்படும் துன்பம்!...


நாடு தீக்கு இரையானாலும் 
நல்ல மக்கள் உயிர் போனாலும் சில 
கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும் 
குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்


இங்கு நேசக் கரத்தை நீட்டினாலும் 
நேர் வழியைக் காட்டினாலும் அவை 
தூசுக்கு இணை என்றேதானாகும் 
துரோகம் படிந்த இப் புவிதனிலே!....


காதல் செய்வீர் பிற உயிகளையும் 
கள்ளம் இல்லா நல் மனங்களையும் 
ஆதரித்துப் பார் இன்பம் பொங்கும் 
அதுதானே என்றும் வாழ்வில் தங்கும்...
  

1/02/2012

சிந்தனைத் துளிகள்.


(1 ) பிறரைத் தூற்றி மகிழ்வுகாணாது உன்
      பிறவியைப் போற்றும் வகையறிந்து நடப்பாயானால் அதுவே  
      பிறருக்கும் உன் பிறவிக்கும் செய்யும் பெரும்பயனாகும்.

(2 ) உள்ளத்தின் உணர்வு ஒழுக்கம் குன்றியோர்
     ஓதும் அறிவுரை என்றும் கொடும் விஷத்திற்கு  சமனானது.

(3 ) குணங்கெட்ட மனிதன் கோடிரூபாய்  கொடுத்தாலும் அவை
      பிணத்துக்கு இட்டெடுத்த மாலைபோலானது.

(4 ) இறைவன் கொடுத்த வரமேயாயினும் மனிதன் தன்
       தகுதியை மறந்து நடப்பானாயின் வரும் துன்பமானது
       என்றும் மரணத்துக்குச் சமனானது.

(5 ) இடமறியாது பகிரும் துயரானது நிறைநீரில்
       கையிலிருந்த கயிற்றை நழுவவிட்டு 
       கருநாகத்தின் வாலைப் பிடித்த கதையாய்மாறும்.
 
(6 ) நல்லவர் ஆயினும்  ஊரார் பேச்சுக்குச் செவிசாய்த்து 
        தன்னைத்தானே  வருத்தும் குணமுடயவராயின்
        இவர்பால் வரும் நல்லன எல்லாம் கெடும்.

( 7 ) வருகின்ற துன்பம் எல்லாம் வரப்போகும் 
        பேரின்பத்துக்கு அறிகுறியென்று கருதும் நற்குணம் இருந்தால் 
        அதுவே வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.

(8 )  பிழைபொறுத்தருளும் நெஞ்சம் ஒன்றே புவியினில்
        நாம் பெறுதற்கரிய பெரும்பேறு ஆகும்.

(9 ) கொடுக்கும் நற் குணங்களைக் குறுக்கி தன்பால்
       எடுத்து வைக்கும் எப்பொருளும் தரும் சுகமானது
       பொருமிக் கிடக்கும் வயிற்றுக்கு பொரிசொறு  சேர்ப்பதுபோலாகும்.

(10 ) மனிதன் தன்நம்பிக்கையைத்  தரவல்ல மதங்கள்மீதும் 
         அதன் தத்துவங்கள்மீதும் கொள்ளும் சந்தேகமானது 
         உடலைப் பிளந்து உயிரைப் பரிசீலிக்கும் செயலுக்கு இணையானது.
(வணக்கம் அன்பு உறவுகளே இது எனது ஆக்கத்தின் மீள்பதிப்பு ஆகும்...)