12/31/2014

புத்தாண்டே வருக வருக !


                   


புத்தாண்டே  புன்னகை பூத்தாட வந்துதிப்பாய் 
சத்தான ஆண்டாய்த்  தழைத்திடுவாய்  !-வித்தைகள் 
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே   நல்கு !

வேரோடு  மடிந்து வீழ்ந்தோம் 
   வேதனை தினமும் பட்டோம் ! 
போராடும் மறவர் எங்கள்
    போர்க்காலம் முடிந்து போக 
சீரோடு செழிப்பும் சேர்த்து  
    சீராட்ட மலர்ந்த ஆண்டே 
தேரோட வழிகள் செய்வாய் 
    தேசத்தின் நலனைக் காத்தே  !

பொல்லாத விதியை மாற்றிப்   

   பொன்னான  மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி  
    ஈழத்தில் விடிவைக் காட்டி  
நல்லோரும்  பதவி ஏற்க 
   நாடெங்கும்  மகிழ்ச்சி பொங்க  
அல்லலை அறுக்க வந்த 
    ஆண்டாக மலர்க நன்றே  !

காலத்தை வகுத்த தேவன் 

  கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும் 
   ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க  
   ஞாயிறாய் வளர்ந்து நின்று 
சீலத்தை மதிக்கும் மக்கள் 
    சீர்பெற்றும்  மகிழச் செய்வாய் !

புத்தாண்டு பிறக்கும் போது 

   பூமிக்கே மகிழ்வு கிட்ட 
சித்தத்தால் மலர்கள் தூவும் 
  சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ 
    எல்லோரும் சமமாய் வாழ 
வித்தைகள் புரியும் ஆண்டே 
   வில்லேந்தும் பகையை ஒட்டு !

வாவென்று நெஞ்சம் பாடி 

   வண்ணமலர் தூவி ஆடும் 
போவென்று துன்பம் தன்னை 
   போக்கியே ஆள  வேண்டும்! 
நாவார எளிய  மக்கள் 
   நாள்தோறும் நினைத்துப் பாடும் 
தேவாரம் எனநீ நின்றால்  
    தேவர்க்கும் மகிழ்வு தானே !



வணக்கம் !


அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .

                                                                          



                                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2014

புதியதோர் உலகம் செய்வோம் !...

                           
                                    

கடந்த 27.12.2014 பாரிஸ் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற 
"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிற்கு அமைய எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் அவர்களின் அழைப்பை ஏற்று நான் எழுதிய விருத்தப் பாமாலை இது .இதனை அன்றைய தினம் அரங்கில் என் சார்பில் பாடி மகிழ்வித்த கவிஞருக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி ,பாரதிதாசனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ...

                                          
                                                                         

நெஞ்சை அழுத்தும் உணர்வுகளை 
     நேரில் சொல்லத் துணிவுமில்லை! 
அஞ்சிப்  பிழைக்கும் அகதிகள்போல் 
     அல்லல் லுற்றோர் எவருமில்லை !
தஞ்சம் எனநாம் வருகையிலே 
     தானாய் எதுவும் புரிவதில்லை ! 
கெஞ்சும் நிலையில் வருந்துயரால் 
     கேள்விக் குறிகள் குவிந்தனவே !

சொந்த மண்ணில் சுதந்திரமாய்ச்  
   சோர்வு இன்றி மனம்போலப்  
பந்த  பாசப்  பயிர்வழத்து  
   பாரில் வாழும்  வழிவகுப்போம்
எந்தப் போரும் முடிவுற்றே 
  ஏற்றம் தந்தால் அதுபோதும் !
வெந்து போகும் மனநிலையை 
  வேரோ டெங்கும்  அழித்திடுவோம் ! 

குண்டு மழையைப் பொழிகின்றார் !
   குற்றம் இழைத்தும் மடிகின்றார் !
கண்டு களித்த பயனென்ன?..
    காற்றும் எமக்குப் பகையாக !
தொண்டு புரியும் மனம்வேண்டும் 
    தோல்வி இனியும் தழுவாமல் 
கொண்டு வருவோம் புதுச்சட்டம் 
   கொல்லும் துயரைத் தடுத்திடுவோம் ! 

எங்கும் எதிலும் மறுமலர்ச்சி 
   ஏணிப் படியாய் விளங்கட்டும் 
மங்கும் உலகின்  வளர்ச்சிக்காய்  
  மனங்கள் சேர்ந்தே உழைக்கட்டும் !
பொங்கும் கடலும் புவியாவும் 
  பொங்கா திருக்க வழிசெய்வோம் !
சங்கும் முழங்க பறைதட்ட 
  சான்றோர் புகழை எடுத்துரைப்போம் !

வீதி தோறும் விழிப்புணர்வை 
  வெல்லும் வண்ணம் விளைத்திடுவோம் ! 
நீதி எங்கும் நிலைத்திடவே 
   நேர்மை யோடும் உழைத்திடுவோம் 
சாதி பேதம் தவிர்ப்பதற்காய் 
    சாவைக் கூடத் தழுவிடுவோம் !
சேதி சொன்ன மறுகணமே 
    சேவை ஆற்றத் துணிந்திடுவோம் !

முற்றும் முழுதாய் நலம்விரும்பி 
   மூளும் எங்கள் பணியிதனால் 
பெற்றுத் தருவோம் சுதந்திரத்தைப்   
   பெருமை பொங்கும் உலகமைத்து !
சுற்றம் மகிழ கடனாற்றிச்  
   சுடரும் உறவை ஏற்றிடுவோம் !
கற்ற தமிழை உலகெங்கும் 
   கமழச் செய்து மகிழ்ந்திடுவோம் !

                                                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

என்னவென்றுரைப்பேன் இதை!



எண்ணம் இனிக்க இதயத்துள் நின்றவளே !
வண்ண மலரே! அருகே..வா!-கண்ணனிவன்
வாடுகையில் வஞ்சியே வாரா திருப்பாயோ? !
பாடும் குயிலே பகர்!

அன்னைத் தமிழை அமுதாய்ப் பொழிந்தவளே !
உன்னை மறந்தோ உறங்கிடுவேன் !-பொன்னையும்
வேண்டேன்!  பொருளையும் வேண்டேன்எந் நாளுமெனை 
ஆண்டிடுக அன்பை அளித்து !

வண்டமிழ் காற்றாக வான்பரப்பில் வந்தாட 
தொண்டுகள் நீ...புரிவாய் தோழமையே !-அண்டங்கள்
அக்கக்காய்ப் போனாலும் அன்பே...நீ போகாதே!
துக்கத்தை  ஏற்பேன் தொடர்ந்து !

கன்னித் தமிழமுதைக் கண்டவர் கைதொழுவர் !
உன்னை அடைந்தேன் உயிராக !-தன்னையே
தான்வதைக்கும் துன்பமேன் ?..தாமரையே சொல்லிங்கு ? !
வான்மதியாய்த்  தேயுதே வாழ்வு!

சுண்ணாம்பில்  இட்டாலும்  தூய தமிழ்வேண்டும் !
கண்ணாக நான்மதிக்கும் கட்டழகே !-விண்ணாளும்
நன்மதியும் விட்டகல நான்கண்டேன் உன்னாலே!
என்னவென்று ரைப்பேன் இதை! 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/17/2014

முருகா முத்தமிழ்க் குமரா !


மண்ணும் வியக்க நின்றவனே  
மதுரத்  தமிழின் நாயகனே !
எண்ணும் பொழுதினில் வந்திங்கே
ஏற்றம் தந்து அருளாயோ !

கண்ணும் உன்றன் கழல்தேடிக்
காத்துக் கிடக்குது காவலனே!
விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய் 

பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும்  குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக் 
கவிதை மழைநீ பொழிய வைப்பாய் 

நண்ணும் துயரை நறுக்கியொரு
நாட்டம் அருள்வாய் நாளுமிங்கே
கண்ணும் கருத்தும் ஆனவனே
கருணைக் கடலே தேனமுதே !

செக்கச் சிவந்த மேனிதனில்
சேர்த்து முடிப்பேன் சந்தனத்தை
சொக்க  வைக்கும் சுந்தரனே
சோலை வனத்தின் நாயகனே!

பக்கம் வந்தால் போதுமிங்கே
பாமழை பொழியும் தன்னாலே
மிக்க நலன் தரும் பார்வையினால்
மீட்டுக யாழென என் மனதை ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/07/2014

நினைவுகள்

                            


நினைவுகள் நெருங்கி வந்து 
        நெஞ்சினை மெல்லத்  தூண்டும் !
தனைமறந் ததனால் உள்ளம் 
       தவிப்பினை விரைந்தே ஏகும்  !
முனைகிறேன் இருந்தும் என்னுள் 
       முடங்கிய நினைவைச் சொல்ல
தினையள வெனினும் இன்பம் 
       திரண்டிட வாழ்த்து வீரே ! 

கலைகளை சுவைக்கும் கண்கள் 
       கவலையில் உறைந்த நேரம் 
சிலைகளை வடித்துப் பெற்ற 
       சிறப்பினை நினைக்கும் போது 
மலையென மகிழ்ச்சி என்னுள் 
       மறுபடி வளரக் கண்டேன் !
அலைகடல் கடந்தும் இன்றே 
      அவைதரும்  உயர்வே உச்சம் !

இனியன எதுவோ வாழ்வில் 
     இவைகளை நினைத்துப் பார்ப்போம் 
தனிமையை அதுதான் போக்கும் 
      தகுதியை  எமக்குள் தேக்கும் !
கனிவுடன் பழகும் நட்பே 
       கரும்பென இனிக்கும் வாழ்வில் !
சனிதரும்  துயர்கள்  வேண்டாம் 
      சகலரும் இணைவோம் வாரீர் !

பகைவரை நினைத்து நாளும் 
     பகையினை வளர்த்தால் துன்பம் 
வகையிலா வருத்தம் தந்து 
     வருந்திட முடக்கும் அன்றோ !
நகைப்பவர் நகைத்தால் என்ன !?
      நமதுயிர் நமக்கே சொந்தம் !
தொகைகளை மறந்து வாழ்வில் 
     தொடருக சிறந்த நட்பை !

நினைவது சிறந்து நின்றால் 
      நினைப்பவை பெறுமே வெற்றி !
அனைவரும் மகிழ்ச்சி காண 
      அகமது சிறக்க வேண்டும் !
மனைகளில் தொடரும் யுத்தம் 
      மலையென வளர்தல் நன்றோ !
வினையிதைத் தடுத்தே நாளும் 
     வியப்புற உயர்வோம் வாரீர் !

உறுதியை மனதில் ஏற்க
     உயர்தர உணர்வு வேண்டும் !
குறுகிய நினைப்பால் உள்ளக் 
     குமுறலே எதிலும் தோன்றும் !
இறுதியும் முதலும் என்றே  
    எடுத்திடும் முடிவும் மாறும் !
பொறுமையை உணர்த்தும் சக்தி 
    பொதுவினில் நினைப்பாம் கேளீர் !

நெஞ்சக் கூட்டில் நினைவுகளாய் 
      நித்தம் பொங்கும் சிலதுயரை 
வஞ்சம் செய்து அடக்கையிலே 
      வாழ்வே மாயம் எனவலிக்கும் !
பஞ்சம் வந்தும் மடிந்திடவே 
      பாவி மக்கள் வரைந்ததிட்டம்
மிஞ்சும் எங்கள் உறவுகளை 
      மீளா திங்கே பறிக்கிறதே ! 

கொல்லும் இந்த நினைவுகளால் 
    கோதை நெஞ்சம் முடிவுறுதே !
வெல்லும் என்ற பலகனவும் 
    வெட்டிச் சாய்த்து மடிகையிலே
புல்லும் கண்ணீர்த் துளிவிடுதே 
    பூவும் பிஞ்சும் உயிர்த்திடத்தான் !
சொல்லும் போதும் வலிக்கிறதே 
    சோகம் பொங்கும் நினைவுகளை !

பெண்ணைப் போற்றும் புலத்தினிலே  
    பேய்கள் தந்த பெருந்துயரம் 
கண்ணை விட்டும் மறைந்திடுமா ?!
   கண்டேன் இன்னும் கலங்குகிறேன் 
அண்ணன் தம்பி தலையிழந்தே  
    அங்கும் இங்கும் கிடக்கையிலே 
எண்ணம் உற்ற வலியதனை 
    எங்கே சென்று எடுத்துரைப்பேன் !

                                   


                             தாயே !
தேசம் முழுதும் மலர்ச்சோலை 
    தேடி மலரும் நிலைவேண்டும்!
பாசக் கரத்தை இணைத்திங்கே 
   பாலும் பழமும் தரவேண்டும் 
கோசம் எதற்கு அதுவேண்டாம் 
   கோடி நலங்கள் பெறவேண்டும் 
நேசம் நிறைந்த தமிழ்த்தாயின்  
   ஏக்கம் தணித்து அருள்செய்வாய் !

தேன் சிந்தும் பாமாலைகளைத் தினமும் தொடுக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் என்னிடம் கொடுத்த "நினைவுகள்" என்ற தலைப்பிற்கேற்ப இவ் விருத்தப் பாமாலையைத் தொடுத்துள்ளேன்.பாரதிதாசன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் . அன்பு நெஞ்சங்களே தங்களின் ஆதரவிற்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி .





  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.