7/31/2015

திருப்புகழைப் பாடு மனமே !

                                   
                                           

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் !
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்!-முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர் !

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும் !
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும் !-தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !

செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து !-கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு !
திருப்புகழால் தீரும் துயர் !

கந்தனையும் கண்ணாரக்  கண்டிடலாம்  வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி !- வந்து
திருப்புகழைப் பாடுங்கள்  தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !

பன்னிருகை வேலவனே  பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை  இட்டதனால்  !-அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத்  தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு !

பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு  !
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு  !-நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும்  வழி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/29/2015

கனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் !

                                   




கனவைத்தான் காண்என்றார் அப்துல் கலாமும் !
மனமே இதுபோதும்   மண்ணில் ! - தனமும்   
உயர்கல்விச் சீரும் உனைச்சேரும்! நாளும் 
அயர்வின்றி நற்பணிகள் ஆற்று! 

மண்ணுலகைப் பொன்னுலகாய்  மாற்ற ஆசை !
          மனிதநேயம் கற்பித்து வாழ  ஆசை !
பெண்ணினத்தின் பெருமைதனைப் புகட்ட ஆசை !
          பெரும்துன்பம் தரும்வெறியை விரட்ட ஆசை !
இன்னலுறும் மக்களுக்காய் உழைக்க  ஆசை !
          இருக்கின்ற பொருள்தந்து காக்க ஆசை !
வன்முறையை  அன்பேந்தி அகற்ற  ஆசை !
          வரும்துன்பம் போக்கும்நூல் வடிக்க ஆசை !

இன்றமிழை  உலகெங்கும்  பரப்ப ஆசை !
        இயன்றவரைப் பிறமொழியைப் பயில ஆசை !
நன்மைதரும் இயற்கையினைக்  காக்க ஆசை
        நாடெங்கும்  மரம்வளர்த்துப் பார்க்க ஆசை !
அன்பினாலே அகிலத்தை ஆள   ஆசை !
        அடிமையெனும் சொல்லகற்றி மீள  ஆசை !
தன்மானத் தமிழரினம் காக்க ஆசை !
        தமிழீழம் பெற்றுலகில் பார்க்க ஆசை !

பெண்ணினத்தின் பாதுகாப்பை உயர்த்த ஆசை !
          பேச்சுரிமைச் சட்டத்தைப் பேண  ஆசை !
மண்ணிலுள்ள உயிரினத்தைக் காக்க ஆசை !
           மதவெறியைச்  சுயநலத்தைப் போக்க ஆசை !
 எண்ணம்போல் விலைவாசி  குறைக்க   ஆசை !
           இறப்பளிக்கும் கலப்படத்தை ஒழிக்க ஆசை !
கண்ணிழந்த சமூகத்தைத் திருத்த  ஆசை !
         கடவுளுண்டு என்றுமிங்கே  உணர்த்த ஆசை !

கல்விதானம் செய்துநாட்டைக்  காக்க ஆசை
       கவிஞரெனும் பட்டத்தை ஏற்க ஆசை !
இல்லாதார் படும்துயரைப் போக்க ஆசை
        இயன்றவரை விவசாயம் செய்ய  ஆசை !
நல்லோரை அரசியலில் இருத்த ஆசை !
        நஞ்சாகும்  இலஞ்சத்தை ஒழிக்க ஆசை !
உல்லாசப் பறவைகளைக் காண   ஆசை
       உழைப்பாளி  உயர்வுதனைப் பேண ஆசை !

உதவுகின்ற கரங்களோடு  இணைய  ஆசை
        ஊரெங்கும் ஊனமுற்றோர்க் குதவ ஆசை !
விதவைக்கும் மறுவாழ்க்கை  அளிக்க ஆசை !
        விரும்பாத சடங்குகளை விலக்க ஆசை !
பதவிவெறி பாலியல்நோய் தடுக்க ஆசை !
         பாரெங்கும் யுத்தத்தை ஒழிக்க   ஆசை !
முதலமைச்சர் எனச்சிலநாள் இருக்க ஆசை !
         முடிந்தவரை நினைத்தபலன் அளிக்க ஆசை !
       
மண்மீது புனிதர்களைக் காண ஆசை !
          மறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை !
புண்பட்ட உள்ளங்களைத் தேற்ற ஆசை !
          புன்னகையைத் தந்துணர்வை  மாற்ற ஆசை !
விண்ணாளும் தெய்வத்தைப் போற்ற ஆசை !
          விடியலையே வேண்டிவிளக் கேற்ற ஆசை !
என்னாசை அத்தனையும் இங்கே தீர
        என்னவழி என்றிங்கே இயம்பு தாயே ?..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/22/2015

ஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா !


                                     

ஆழ்கடல் தனிலே அந்த
    அவலையின் குரலைக் கேட்டேன் !
ஊழ்வினைப் பயனாய் எண்ணி 
    உலகமே வெறுக்கக் கண்டேன் !
வாழ்வினை அளிக்க வல்ல
     வசந்தமும் விலகிச் செல்ல
மூழ்கிடும்  திருநா டெம்மின்
     முகவரி என்றார் அம்மா !

பொன்னென விளைந்த தேசம்
    பொலிவினை இழக்க நாளும் 
இன்னலைத் தொடுத்தார் அங்கே 
     இதயமும் மச்சுப் போக !
அன்னவர் செயலைக் கண்டே  
     அடிமைகள் விழித்த தாலே 
வன்முறை பொலிந்தே  இன்றும் 
     வாழ்வினைப்  பொசுக்கு தம்மா !

கற்றவர் நிறைந்த பாரில்  
    காத்திட ஒருவர் இன்றி 
குற்றமே பொலிந்து நம்மின் 
    குரல்வளை நசுக்க லாமோ ?.
வற்றலாய்த்  தொங்கும் மக்கள் 
    வாழ்வினைக் கண்டும் எம்மைப் 
பெற்றவள் விட்ட கண்ணீர் 
     பெருங்கடல் ஆன தம்மா !

செம்மொழித்  தமிழைக் கற்றுச் 
     செழிப்புடன் வாழ்ந்த மக்கள் 
அம்மண மாக வீழ்ந்தார் 
     ஆருயிர் துடிக்க மண்ணில் !
எண்ணிலா உயிரின் ஓலம் 
      இன்றுமே கேக்கு தென்றால் 
புண்ணிலே வேலைப் பாச்சும் 
      புத்திதான் மாறு மோசொல் ?..

பன்மலர்ச் சோலை நீயும் 
      பாரினில் நீதி காக்க 
வன்முறை அழித்துச் சென்றாய் 
      வாழ்வினில் என்ன கண்டாய் !
உன்னையே அழித்து மக்கள் 
      ஊனினை வளர்க்க நாளும் 
இன்னலே விளைந்த திங்கே  
     இயற்கையே காணும் அம்மா !

பட்டது சொன்னால் போதும்   
    பாருடன் உள்ளம் மோதும் ! 
கெட்டவர் குடியை வெல்லக்  
     கேடுகள் விளையும் மெல்ல !
சட்டென மறையத் துன்பம் 
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
கட்டளை இட்டுச் சும்மா  
    காத்திடு இயற்கை அம்மா ! 

                                                                


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.