5/01/2016

சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேளீர்!



சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டுச்
....சொக்காத மனமும்தான் சொக்கிப் போகும்!
எல்லாமும் எமக்கிங்குத்  தெரியும் என்றே
.....எண்ணிநிதம்   பேசுகின்றோம் உலகில் இன்றே!
இல்வாழ்வு சிறப்பதற்கும் எல்லை இல்லா
 .....இடர்மூழ்கிப் போவதற்கும் எடுத்துக் காட்டாய்
நல்லதையே நாளுமிங்கு உரைக்கும் அன்பர்
.....ஞானத்தைக் கண்டுள்ளம் வியப்பில் மூழ்கும்!

தித்திக்கும் எம்மனத்தில் தேனும் பாயும்
.........தீராத காதலொடு  நிலவும் காயும்!
எத்திக்கும் அவர்பெயரைச் சொல்லிப் பார்க்கும்!
.......இருவிழியும் செவியிரெண்டும் இன்பம் கொள்ளும்!
வித்தைக்கு அதிபதியாள் நாவில் நின்று
......விளையாடும் செயலைத்தான் உணர்த்திச் செல்லும்!
இத்தகைய பேச்சைத்தான் கேட்க வேண்டும்
.......இன்பமுடன் இவ்வுலகில் நாமும் வாழ!

கண்ணாரக் காணாத ஒன்றை வைத்துக்
....கதைபேசித் திரிகின்றார் கயவர் நாளும்!
எண்ணத்தில்  தோன்றுவதை எல்லாம் கோர்த்து
..... இன்றுலகில் பேசுகின்ற பேச்சைக் கேட்டால்
புண்ணாகித் தான்போகும் மனமும் இங்கே
......புழுவொன்று தீமேலே விழுந்தாற்  போல!
பண்பாடு நிறைந்தவரே அந்தப்  பேச்சால்
......பாழாகிப் போனவரை எண்ணிப் பாரீர்!

நல்லதையே நாளுமிங்குக்  கேட்க்க வேண்டும்!
.....நாம்பேசும் பேச்சும்தான் இனிக்க வேண்டும்!
இல்லாத கதைபேசும் நட்போ  டிங்கு
....இருக்கின்ற உறவைதாம் துறக்க வேண்டும்!
பொல்லாங்குச்  சொல்வோர்குத் துன்பம் ஏது
.....பொய்பேசி நாள்முழுதும் இன்பம் காண்பார்!
வில்லங்கம் விளைவிப்பார் அவரே நாளை 
......வீதியிலும்  நிற்கவைப்பார் விழித்துக் கொள்வீர்!

பட்டதுன்பம் அத்தனையும் பறந்து போகும்!
......பாரினிலே வாழவழி தெரிந்து போகும்!
சட்டத்தைப் படித்தாலும் மேடை ஏறிச்
......சத்தியத்தைப் பேசுகின்றார் உலகில் இன்று!
முட்டாளும் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டு
......முன்னேறிச் செல்லுகின்ற காலம் தன்னில்
விட்டத்தை நோக்கியிங்கு அழுதல் நன்றோ!
......விழிசிந்தும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வீர்!                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

  1. How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்! - http://www.mytamilpeople.in/2016/05/how-to-type-tamil-in-photoshop-photoshop.html

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........