5/08/2016

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

                                           


பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்!-ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே!
பொங்கட்டும்   இன்பப் பொழில்!

போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்!- கூர்விழிமுன்
யார்வந்து நின்றாலும் யானை வலிமையென
பாரதிக்கே கிட்டும் பரிசு!

பொல்லாத  சாதிவெறி போனதெங்கே என்றறியார்
எல்லாமும் எம்மறவன் பாட்டின்முன் !-நில்லாதே
ஓடியதாம்!  என்றுமவர்   ஒப்பற்ற பாடலினால்
தேடியிங்குத் தந்திட்டார்  தேன்!


அச்சமின்றி நாம்வாழ அம்புவியில் தெம்புதந்து
இச்சைகளைத் தீர்த்துவைக்கும் இன்பாவே!-துச்சமென
எண்ணிநிதம் தூற்றுவோரை எந்நாளும் வெல்லத்தான்
கண்ணாக நின்றொளிரும்  காண்!

தாலாட்டிச் சீராட்டித்  தாய்பாடும்  பாட்டினுள்ளும்
காலமெல்லாம் கண்டுணர நற்கருத்தால் !-கோலமிட்டார்
கோடிமுறை கேட்டாலும் கொண்டசுவை மாறாது!
நாடினார்க் கெய்தும் நலம்!

பெண்ணடிமை இல்லையென்று பேரெழுச்சி கொண்டிங்குக்
கண்ணான பாரதியே கன்னலென  !- எண்ணற்ற
பாட்டிசைத்து பாரிலெம்மை வாழவைத்தார்  இன்றவரால்
ஏட்டினிலும் எம்முயர்வைக் காண்!

நாட்டிற்கு நன்மைசெய்து நற்புகழின்  உச்சிதொட்டார்
ஏட்டினிலே பாரதிக்கும் ஈடுண்டோ !- பாட்டிசைக்க
பாரதத்தாய்  ஈன்றெடுத்த  பாவலனைக்  காவலனை
வேரெனவே காணும் விழி!

பாடுங்கள் பார்போற்றும் பாரதியின் பாடலைத்தான்
தேடிவரும் இன்பமிங்கே தேனாறாய் !-நாடுங்கள்
நற்கருத்தை நாட்டுக்கும் இன்றதுவே நன்மைதரும்!
பெற்றவரம் தந்துவக்கும்   பேறு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. அருமை! பாரதியை போற்றும் வீர வரிகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  2. ஒரு இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு பாரதியிடம் கற்க வேண்டியது எழுத்தில் அடங்கா.....! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அம்பாளிடியாள்.

    ReplyDelete
  4. வணக்கம்!
    வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அன்பு உள்ளங்களே!

    ReplyDelete
  5. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........