12/16/2015

பேச்சில் இனிமை வேண்டும் !

                                               
                                     

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !

கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை  பகையைத் தேடும்
......பரிதாப  நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !

பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !

மண்ணில்நாம் கொண்டவெழில்   மறைந்து போகும்
......மறையாத நினைவாகப்  பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
......எதிரிக்கும் நம்பேச்சும்  இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. //எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
    ......எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும் !//

    ஆஹா, அருமையான இனிப்பான வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமையான கருத்துள்ள பாடல்! சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும்
    அருமை
    தம +1

    ReplyDelete
  4. வணக்கம்
    அற்புத வார்த்தைகள் .ரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்ல கருத்துள்ள பாடல் சகோதரி. ரசித்தோம்.

    ReplyDelete
  6. பயனுள்ள கருத்துக்கள். நன்றி.

    ReplyDelete

  7. "மண்ணில்நாம் கொண்டவெழில் மறைந்து போகும்
    ......மறையாத நினைவாகப் பேச்சே வாழும்!
    எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
    ......எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும்!" என்பதில்

    உண்மை! உண்மை! உண்மை!
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  8. வணக்கம் சகோ !

    பேச்சில் இனிமை வேண்டும் ம்ம் அத்தனனயும் முத்தான வரிகள் அதிலும்
    ////வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
    .....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !//

    இவை என் நெஞ்சைத் தொட்ட வரிகள் மிகவும் அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
  9. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........