12/13/2015

எல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை !

தெய்வத்தின் மீதெந்த  குற்றம் இல்லை! 
......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை 
மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே !
.......மேதினியில் இனியிதற்கே  இல்லை ஈடே !
பெய்யாதோ மழையென்று ஏங்கி நின்றோம் 
.......பெரும்துயரப் பட்டவர்நாம்  என்ன செய்தோம் 
 உய்யவழி சமைத்திடுவோம்! இயற்கை காப்போம்!
 ......ஒற்றுமையாய்த்  தொண்டாற்றித் துன்பம் தீர்ப்போம்!

மண்மீது துயரனைத்தும் நீங்க  வேண்டும் 
......மறுபடியும் மலர்பூத்துக் குலுங்க வேண்டும்!
எண்ணம்போல் மக்களெல்லாம் வாழ வேண்டும்   
......இறையருளால் இவையாவும் நிகழ வேண்டும் !
வண்ணப்பூஞ் சோலையென இன்றெம்  நாடு
......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை !
கண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் !
.......கணக்கிட்டால் எல்லாமும்  இயற்கை யாகும் !

பொய்யாக வாழுகின்றோம் கோட்டை  கட்டிப்
...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி !
உய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட
.......உலகத்தில் இல்லாமல் உயிரும் போகும் !
மெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே
.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு!
செய்கின்ற பணியாவும் இயற்கை ஓங்கச்
......சிறந்திட்டால் துயர்மேவ வழியும் உண்டோ? 

சாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்
.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் !
காலையிலே கண்விழித்தால்  போதும் இன்று
......காணுகின்ற காட்சியென்ன   ஊழல் தானே !
ஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே
.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் !
ஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு
......ஆகும்முன்னர்க்  காத்திடுவீர்  இயற்கை தன்னை !

கடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்
......கைகூட வேண்டுமது இல்லை என்றால்
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்
.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் !
திடமான சிந்தனையால் வெற்றி கண்டு
......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு !
இடரோடு போராடி இனியும் வெல்ல
......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. இயற்கை என்ன செய்யும்
    செயற்கையாய் நாம் செய்த தவறுகளுக்கு
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. மிகவும் அழகான ஆக்கம்.

    வரிக்குவரி, வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து படித்து, ரஸித்து, இன்புற்று மகிழ்ந்தேன். மேங்கோ ஜூஸ் போல இனிமையோ இனிமை.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. கவிதை மழை நனைந்தேன்

    ReplyDelete
  5. இயற்கைதான் எம் வாழ்வு. ரொம்ப சரியான வார்த்தைகளில் அழகாக சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  6. இயற்கையைப் பழிக்கக் கூடாது! எல்லாத் திட்டங்கள் பற்றியும் இப்படி அழகாய் கவிதை வடிவில் சொல்லிச் சென்ற விதம் அருமை நல்ல சிந்தனைகள் அனைத்தும். மிகவும் ரசித்தோம்..

    வாழ்த்துகள் சகோதரி. பாராட்டுகளும்

    ReplyDelete
  7. அருமையான சிந்தனைகள். பகிர்ந்ததற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. சரியாக சொன்னீர்கள் ,போட்டதுதானே முளைக்கும் :)

    ReplyDelete
  9. வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    ReplyDelete
  10. வணக்கம்!

    எல்லோரும் ஒன்றிணைவோம்! இன்னல் துடைத்திடுவோம்!
    பல்லாண்டு செய்வோம் பணி!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........