5/29/2015

மான்விழியே வா அருகே !

                          



அன்னத்தைக் கண்டதும் ஆசைதான் பொங்காதோ ?..
இன்னலே கூடிடும் என்றாலும் !-உன்னை 
அடைவதே  இன்றென்றன்  ஆசையடி! இன்தேன் 
அடையத் தருவாய் அணைத்து !

காதல்தான் வந்திங்கே கண்முன்னே நின்றாட 
மோதல்தான் ஏனடி மோகனமே !-ஆதலால் 
ஆடவன் எண்ணம்போல் அன்பைநீ கொட்டிப்பார் !
தேடலில் கிட்டுமே தேன் !

வண்டுக்குப் பூவோடு வந்ததிந்தச் சொந்தம்தான் 
கண்டுள்ளம் பொங்கட்டும் காவிரிபோல் !-பெண்ணே 
விழியாலே உண்டு விரைந்தோடிச் சென்றால் 
அழியாதே நான்கொண்ட அன்பு !

திண்டாட வைத்ததனால் தீமூட்டிச் செல்லாதே !
பண்பாடு மிக்கநற் பைங்கிளியே !-மண்ணில் 
உனக்கெனவே நான்பிறந்தேன் ஊர்போற்றும் வாழ்வே !
மனக்குழப்பம் விட்டிங்கே வா !

உன்னோடு நானிருக்க உள்ளத்தில் தேன்சுரக்கும் !
என்னை அறியாயோ என்னுயிரே !-முன்பே 
அணைபோட்டு வைத்தும் அடங்காது காதல் !
கணையாழிக் கண்களைக் காண் !

அச்சத்தை விட்டுநல் ஆனந்தம் கொள்வோமே !
இச்சை பெருக இணைவோமே !-பச்சை 
மலையழகும் கூத்தாடும் மானழகும் காண 
சிலையழகே இன்னும் சிரி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. அருமையான கவிதை!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  2. மான்விழியே வா அருகே !

    அருமையான பாடல் ...... எளிமையாகப் புரியும் வண்ணம்.

    பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!
      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !

      Delete

  3. வரமுற்ற இளமதியே வாழ்த்து கின்றேன்!


    வணக்கம்!

    மான்விழியே வாவென்று வார்த்தபுகழ் வெண்பாக்கள்
    வான்வழியே நீந்த வழிவகுக்கும்! - தேன்நதியே
    என்று மனங்குளிக்கும்! இன்றமிழ்ப் பேரழகில்
    ஒன்றிக் களிக்கும் உயிர்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா !

      இன்றெந்தன் உள்ளத்தில் இன்தமிழ் பாஊற
      வந்தனை செய்தஎம் வள்ளலே !-என்றும்
      அழியாத காவியம் ஆவாய்நீ யேதான்!
      வழிகாட்டி எம்வாழ்வில் வா !

      தங்களால் தான் இன்று இந்தப் பாராட்டினையும் வாழ்த்தினையும் நான் பெறுகின்றேன் என்று எண்ணும் போதே உள்ளம் பூரிப்படைகின்றது !
      அதற்காகவும் மனமார வாழ்த்திய இவ் வாழ்த்திற் காகவும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா !

      Delete
  4. Replies


    1. வணக்கம் !

      என் அருமைச் சகோதரனே! மிக்க நன்றி மனமார
      பாராட்டிய இப் பாராட்டிற்கு!

      Delete
  5. வெண்பா கண்டு மயங்கித்தான் போனேன். பாராட்டுக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி என் அன்புத் தோழியே !வருகைக்கும் பாராட்டிற்கும் !

      Delete
  6. கவிதை அழகு சகோ
    த.ம 5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் !

      Delete
  7. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மானின் விழி மொழி அருமை :)

    ReplyDelete
  9. விழியே கதை எழுது என்பது போல மானின் விழி கதை எழுதுகிறது.....அருமையான கவிதை....மயக்கும் கவிதை....

    //உனக்கெனவே நான்பிறந்தேன் ஊர்போற்றும் வாழ்வே !
    மனக்குழப்பம் விட்டிங்கே வா !

    உன்னோடு நானிருக்க உள்ளத்தில் தேன்சுரக்கும் !
    என்னை அறியாயோ என்னுயிரே !-முன்பே
    அணைபோட்டு வைத்தும் அடங்காது காதல் !
    கணையாழிக் கண்களைக் காண் !// ஆஹா!!!

    ReplyDelete
  10. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........