8/02/2015

வெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் !

                                           
                                                   


தூதுபோ பைங்கிளியே  தூயதமிழ் கற்பதனால்
ஏதுதுயர் நம்நாட்டில்  இங்குச்சொல் !-போதும்
பிறமொழியால்  கண்டபயன் ! பீடுடன்  வாழ
அறநெறியே காக்கும்  அரண் !

                                               

அன்னிய நாட்டில் அடைக்கலம் பூண்டபின்
நன்மையே சேருமென்று நாடாதே !இன்னல்
வருமெந்த நாளும்  வளமார் தமிழா !
உருகாமல்  வாழ்வை உணர் !

தஞ்சாவூர்ப்  பொம்மை! தலையாட்டத் தானோசொல்
விஞ்ஞானம் கற்றாய்? விடிவில்லை !- விஞ்சும்
துயர்மட்டும் மேல்நாட்டில்! தூங்கிக் கழித்தால்
உயர்வேது வாழ்வை உணர் !

செம்மொழியால் வந்துற்ற சீர்என்ன எண்ணிப்பார் !
அம்மணமாய் நிற்கத்தான்  ஆணவத்தால் !-தம்மை
மறந்திங்குச் செல்கின்றீர்  மாண்டாலே போதும் !
பறந்தும்போம் வாழ்வின் பயன்!

மேல்நாட்டு மக்களுடன் மேதினியில் வாழ்ந்திடலாம் !
ஆல்போல் உறவுகளும் அங்கெதற்கு?!- தோல்வி 
வருகின்ற போதெல்லாம் வெம்பியழு  வாழ்வில்
தருமநெறி  காக்கும் தலை !

சொன்னாலும் கேளாமல் சொந்தங்கள் பாராமல் 
தன்மானம் குன்றத்தான் தாவுகின்றாய் !-நன்மை 
ஒருபோதும் கிட்டாது! ஓய்வின்றித் துன்பம் 
பெருகத்தான் செய்தாய்  பிழை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. என்ன அருமையான வரிகள்! தமிழ் கொஞ்சுகின்றது! சகோதரி!

    ReplyDelete
  2. எந்த வாழ்வையும் உணர வேண்டும் அம்மா...

    ReplyDelete
  3. அயல் நாட்டில் வாழ்வோரின்
    அவல மன நிலையை அற்புதமாகச்
    சொல்லிப் போகும் கவிதைகள்
    சரளமாக வந்து சேர்ந்த வார்த்தைகள்
    பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  5. உண்மைதான் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  6. பல வேண்டாத நிகழ்வுகள் நடக்கின்ற பொழுதும் செல்பவர்களின் மோகம் குறையவில்லையே? என்ன செய்வது?

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை!

    ReplyDelete
  8. இது சாபம் அல்ல .காலம் செய்த கோலம் !

    ReplyDelete
  9. சரளமாக வந்து விழும் சொற்கள்! பொருள்பொதிந்த வரிகள்! தொடரட்டும் உங்கள் பணி! வாழ்துகள்!

    ReplyDelete
  10. சதியோ சாபமோ சீரழித்தெம் வாழ்வை
    கெதியற்றுப் போகவைத்த விதி !

    அருமை அருமைம்மா தொடர வாழ்த்துக்கள் ...! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  11. வணக்கம் தோழி!

    நாட்டிலே பற்றுவைக்க நல்லவெண் பாவாலே
    ஊட்டினை! கொள்வார் உணர்ந்து!

    அருமையான வெண்பாவால் நாடுவிட்டு நாடுதாவி
    படும் அவலம் அலங்கோலங்களை உணர வைத்தீர்கள்!
    மிகச் சிறப்பு!

    வலைச்சரத்தில் ஐயா உங்கள் பெருமைகளைக் கூறக் கண்டு
    உள்ளம் மகிழ்ந்தேன்!
    உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  12. அருமையான கவிதை! எந்த நாடாயினும் சொந்த நாடாகுமா? உங்களின் வலி புரிகின்றது!

    ReplyDelete
  13. //ஆல்போல் உறவுகளும் அங்கெதற்கு// ஹ்ம்ம்
    வெளிநாட்டில் இருந்தால் சுகம் என்று எண்ணுகிறார்கள்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........