12/29/2014

புதியதோர் உலகம் செய்வோம் !...

                           
                                    

கடந்த 27.12.2014 பாரிஸ் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற 
"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிற்கு அமைய எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் அவர்களின் அழைப்பை ஏற்று நான் எழுதிய விருத்தப் பாமாலை இது .இதனை அன்றைய தினம் அரங்கில் என் சார்பில் பாடி மகிழ்வித்த கவிஞருக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி ,பாரதிதாசனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ...

                                          
                                                                         

நெஞ்சை அழுத்தும் உணர்வுகளை 
     நேரில் சொல்லத் துணிவுமில்லை! 
அஞ்சிப்  பிழைக்கும் அகதிகள்போல் 
     அல்லல் லுற்றோர் எவருமில்லை !
தஞ்சம் எனநாம் வருகையிலே 
     தானாய் எதுவும் புரிவதில்லை ! 
கெஞ்சும் நிலையில் வருந்துயரால் 
     கேள்விக் குறிகள் குவிந்தனவே !

சொந்த மண்ணில் சுதந்திரமாய்ச்  
   சோர்வு இன்றி மனம்போலப்  
பந்த  பாசப்  பயிர்வழத்து  
   பாரில் வாழும்  வழிவகுப்போம்
எந்தப் போரும் முடிவுற்றே 
  ஏற்றம் தந்தால் அதுபோதும் !
வெந்து போகும் மனநிலையை 
  வேரோ டெங்கும்  அழித்திடுவோம் ! 

குண்டு மழையைப் பொழிகின்றார் !
   குற்றம் இழைத்தும் மடிகின்றார் !
கண்டு களித்த பயனென்ன?..
    காற்றும் எமக்குப் பகையாக !
தொண்டு புரியும் மனம்வேண்டும் 
    தோல்வி இனியும் தழுவாமல் 
கொண்டு வருவோம் புதுச்சட்டம் 
   கொல்லும் துயரைத் தடுத்திடுவோம் ! 

எங்கும் எதிலும் மறுமலர்ச்சி 
   ஏணிப் படியாய் விளங்கட்டும் 
மங்கும் உலகின்  வளர்ச்சிக்காய்  
  மனங்கள் சேர்ந்தே உழைக்கட்டும் !
பொங்கும் கடலும் புவியாவும் 
  பொங்கா திருக்க வழிசெய்வோம் !
சங்கும் முழங்க பறைதட்ட 
  சான்றோர் புகழை எடுத்துரைப்போம் !

வீதி தோறும் விழிப்புணர்வை 
  வெல்லும் வண்ணம் விளைத்திடுவோம் ! 
நீதி எங்கும் நிலைத்திடவே 
   நேர்மை யோடும் உழைத்திடுவோம் 
சாதி பேதம் தவிர்ப்பதற்காய் 
    சாவைக் கூடத் தழுவிடுவோம் !
சேதி சொன்ன மறுகணமே 
    சேவை ஆற்றத் துணிந்திடுவோம் !

முற்றும் முழுதாய் நலம்விரும்பி 
   மூளும் எங்கள் பணியிதனால் 
பெற்றுத் தருவோம் சுதந்திரத்தைப்   
   பெருமை பொங்கும் உலகமைத்து !
சுற்றம் மகிழ கடனாற்றிச்  
   சுடரும் உறவை ஏற்றிடுவோம் !
கற்ற தமிழை உலகெங்கும் 
   கமழச் செய்து மகிழ்ந்திடுவோம் !

                                                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. அனைத்தும் சிறப்பாய்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      மிக்க நன்றி சகோதரா ! தங்களிற்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      மிக்க நன்றி சகோதரா !தங்களிற்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

      Delete
  3. சிறப்பான கவிதை. மன்ம்கவரும் இனிய சந்தம்.கருத்தாழமும் உடைய அற்புதக் கவிதை

    ReplyDelete

  4. வணக்கம்!

    கற்ற தமிழைக் கடல்கடந்தும் காக்கின்ற
    உற்ற திறங்கண்டு உவக்கின்றோம்! - நற்றவத்து
    அம்பாள் அடியாள் அளிக்கும் கவிதைகள்
    செம்பால் இனிமையெனச் செப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. விருத்தப் பாமாலையை விரும்பி ரசித்தேன் !
    த ம 3

    ReplyDelete
  6. "புதியதோர் உலகம் செய்வோம்" கவிதை அருமை அம்பாளடியாள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் தோழி!

    மங்காத எம்மொழி! வான்புகழ் கண்டமொழி!
    சங்கரன் தந்த தமிழ்மொழியே! -பங்கயமே!
    பார்புகழப் பா!.இசைத்துப் போற்றினீர் அன்பாலே!
    சீர்மேவ வாழ்வீர் செழித்து!

    மிக அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கற்றதமிழ் காக்கும் கவிமாலை தேன்தூவும்
    அற்றைக் கனவும் அழகாகும் - நற்றாயாம்
    அம்பாள் அடியாள் அளித்தகவி மன்றத்தில்
    செம்மையுற காணும் சிறப்பு !

    அழகான விருத்தம் வாழ்த்துக்கள் அம்பாள் அடியாள்
    வாழ்க வளமுடன்
    தம 8

    ReplyDelete
  9. சிறப்பான பாமாலை! அருமை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........