9/19/2012

அன்று போல் என்றுமே ....


என்னைப் பெத்த ராசா உனக்கு
நான் எழுதும் கவிதைப் பூக்கள் இதோ!....
இன்னும் நூறு ஜென்மம் இங்கே
உனக்கே மகளாய் பிறக்க வேண்டும் .

கண்ணுக்குள்ளே எம்மை  வைத்துக்
காத்த உன்னைக் கலங்க வைக்க
என்ன பாவம் செய்தேனோ
எனக்கும் ஒன்றும் புரியவில்லை!!!.....

பொன்னைப்போலே என்னை மதித்தாய்
பூச்சூடித்தானே நீயும் மகிழ்ந்தாய்
என் அன்னை இல்லாக் குறையைக் களைந்த
ஐயா நீயும் ஏன் நடை பிணம் ஆனாய்!!!........:(

கண்ணில்லாத உலகம் இதில் உன்
கண்மணி நானும் தனித்தேன் என்றோ
அள்ளித் துயரை நெஞ்சில் நிறைத்தாய்
ஐயோ பாவம்  நான் என்ன செய்வேன் !!!....

பெண்ணாய்ப்  பிறந்த பாவம் இதற்க்கு
இரு பொழுதும் கண்ணில் கண்ணீர் எதற்கு
உன்னைப் பிரிந்தால் இந்த உலகை வெறுக்கும்
என்னை விட்டுப் போக நினைக்காதே!!!....:(

ஒற்றையடிப் பாதையிலே உன்
பின்னால் தொடரும் இன்பம் போதும்
நீ கற்றுத் தந்த நன்னெறிகள் எனக்கு
காலம் முழுவதும் கை கொடுக்கும்!...

பிச்சை எடுத்துப் பிளைத்தாலும்
பெண் பெருமையாக வாழ்ந்திடலாம்
இச்சைக் கடிமையான மனிதர்கள்
உடன் இருந்தால் அதுவும் கறைதானே!...

விட்டுத் தள்ளு துயர்களை என்றும்
வீண் வருத்தம் உடலுக்காகாது
எம்மைப் பெற்று  வளர்த்த  தந்தை நீ அழுதால்
இந்தப் பேதை மனம் அதைத் தாங்காது !!!....

வெட்டி முறிந்து வேலை செய்து
எம் விருப்பம் போல நீ நடந்தாய்
அந்தக் கெட்டித்தனத்தில் விளைந்த முத்து
என்றும் கீழோர் தயவை நினைக்காது .....

அச்சம் ஏனோ ஐயா உனக்கு!!!............
ஆண்டவன் எம்  பக்கம் இருக்கையிலே
இடர்களைத்  துச்சமாக நினைத்தால் போதும்
கார் இருளைக் கடக்கவும் நல் வழி பிறக்கும்!....

நீ தச்சுத் தச்சு போட்ட சட்டை
தாறு மாறாய்க் கிழிந்தாலும் அவைகளை
என் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்தேன்
உன் பாசம் விட்டுப் போகாமல் !.........

இனியும் என்னைத் தட்டிக் கழித்து மேலே செல்ல
உனக்குக்  கெட்டித்தனமும் உண்டோ சொல் .......
தலையில் குட்டி வளர்த்த செல்லக் கைகள் பற்றி
நானும் கூட வருவேன் உன் பின்னாலே !!!.........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. பாசத்தின் வலுவை மிக அழகாச் சொல்லிப் போகும்
    கவிதை அருமையிலும் அருமை
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நெகிழ வைக்கும் வரிகள்... மிகவும் ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பிரிவின் துயரா பெற்றவர் நினைவா வரியில் வடிந்த கவிதையின் விளைவே!நன்று!

    ReplyDelete
  4. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நெகிழ வச்சிடீங்க சகோ

    ReplyDelete
  6. உணர்வு குவியல்..நெகிழ்ச்சியான வரிகள்! நல்ல கவிதை சகோ!

    ReplyDelete
  7. பாசத்தை வெளிப்படுத்திச் செல்கிறது கவிதை..

    ReplyDelete
  8. தந்தைக்கு சொன்ன வரிகள் நெகிழ வைத்தது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. மனதால் அழுதேவிட்டேன் அம்பாள் !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........