அன்னைத் தமிழேநல் ஆரமுதே எந்நாளும்
உன்னைத் தொழுதேன் உயிராக !-என்னைத்
துயர்கள்தீண் டாதினியும் தூயவளே காப்பாய்!
அயர்வென்றும் சாராவண் ணம்!
அன்னைத் தமிழே ஆன்மாவே
ஆசை பெருக நின்றேனே
என்னைப் புவிமேல் தாங்காயோ
என்றும் உணர்வு குன்றாமல்!
கன்னல் மொழியைக் கற்றால்தான்
காலம் இனிக்கும் எந்நாளும்!
இன்னல் இனியும் வேண்டாமே
இன்பத் தமிழே வா.. தாயே !
வஞ்சிக் கொடியென் ஏக்கத்தை
வந்து தணிக்க மாட்டாயோ !
கொஞ்சிக் குலாவும் பொற்காலம்
கொண்டு வரவும் மாட்டாயோ!
நெஞ்சில் இடரை நான்தாங்கி
நேற்று வரையும் வெந்தேனே !
பஞ்சில் நெருப்பைப் போல்பற்றி
பாசம் விளைத்து வா..தாயே !
பாடும் பறவை நீயின்றி
பாதை தவறிப் போகாதோ !
நாடும் செழிக்க வா...தாயே
நல்ல பொருளைத் தா..தாயே!
வாடும் மனத்தின் வாட்டத்தை
வந்து தணிப்பாய் எப்போதும்
தேடும் சுகமும் நீயன்றோ !
தேடி எனைநீ வா தாயே !