1/23/2015

அன்னையின் நல்லாசி அனைவர்க்கும் கிட்டட்டும் !

                                           

மண்ணிலே பிறந்து விட்டோம் 
   மரங்களாய் வளர்ந்தும் விட்டோம் !
எண்ணிய தெதுவும் இங்கே 
   எளிதிலே கிடைப்ப தெங்கே !
கண்ணியம் இழந்த வாழ்வைக் 
   கனவிலும் நினையாப் பண்பு 
உண்மையில் உயர்வைத் தந்து 
   உருப்பட வழிகள் செய்யும் !

தன்னிலை மறந்து வாழும் 
    தரித்திர குணத்தை நீக்கி 
நன்னிலை அடைந்தால் மக்கள்  
    நலமுடன்  திகழ்வார் நாளும் !
அன்னையின் அருளைப் பெற்று 
    அழகுடன் திகழத் தானே 
நன்னெறி வளர்த்தார்  இங்கே 
    நழுவிடல்  முறையோ சொல்வீர் !

காத்திட வருவாள் அன்னை 
   கருணையின் உருவம் தாங்கி !
நேத்திகள் பலவும் செய்தோர் 
    நெகிழ்கிறார் அறிவீர் இன்றும் !
கூத்துகள் களைகட் டத்தான் 
    குவிகிறார் தினமும் பக்தர் !
பாத்திதை உணர்தல் நன்றே 
    பலவகைத் துயரும் நீங்க !  

                                                  


                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/22/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து வளர்கவே !

                                 

என்னுயிர்த் தமிழே தாயே !
    இணையிலா அழகே !தேனே !
பொன்னுயிர் பெற்று வாழ்ந்த 
    புலவராய் என்னை ஆக்கு !
பன்மணி பூண்ட பெண்ணே !
   பன்மலர்ச் சோலை நீயே !
மின்மணிப் பாக்கள் என்னுள் 
   விளைந்திட வேண்டு கின்றேன் !

செந்தமிழ்ச் சோலை பூத்துச் 
    செழிப்புடன் ஆடக் கண்டேன் !
நந்தமிழ் மேன்மை காத்து 
    நலமெலாம் புரியக் கண்டேன் !
தந்தன தாளம் போட்டுத் 
    தண்டமிழ் மணக்கக் கண்டேன் !
சந்தன மலர்கள் தூவித் 
   தாழ்ந்துநான் வணங்கு கின்றேன் !

சிறப்புற வந்த மாவைச் 
   சேனாதி ராசர் வாழ்க !
திறமுறப் பணிகள் ஆற்றும் 
   சி .சிரீ தரனார் வாழ்க !
மறமுற உணர்வை நல்கும் 
   மாசிலா வீரர் வாழ்க !
அறமொழி தமிழைக் கற்றே 
   அழகுடன் வாழ்வோர் வாழ்க !

                   
                                                                                                                                                                    வண்ணக் கனவு மெய்யாகி 
    வானில் பறக்கக் கண்டோமே !
எண்ணம் முழுதும் இன்பத்தை 
    ஏந்திக் களித்து நின்றோமே !
உண்ண உணவும் தந்தீரே !
    ஊக்கம் அளித்தும் வந்தீரே !
கண்ணாய் விளங்கும் செஞ்சோலை 
   காலம் முழுதும் வாழியவே !

பள்ளிச் சிறுவர் தாம்பெற்ற 
    பாட மதிப்பெண் கண்டங்கே 
அள்ளிக் கொடுத்து லட்சத்தை 
    ஆக்கம் செழிக்கச் செய்தீரே !
துள்ளிக் குதித்தும் வந்திங்கே 
     தொண்டு சிறக்கப் பாடுகின்றோம்
நள்ளி ரவிலே தோன்றுகின்ற 
    நடசத் திரம்போல் வாழியவே !

எங்கள் தலைவன் அந்நாளில் 
   எம்முள் விதைத்த நற்பணியைச் 
சங்கத் தமிழின் மீதாணை 
   சாற்றித் தொடர்ந்தீர் இந்நாளில் !
வங்கக் கடலும் வாழ்த்தத்தான் 
    வந்தங் குதிக்கும் பொற்காலம் !
மங்கா தொளிர எந்நாளும் 
    அன்பில் திளைத்து வாழியவே !

காலம் முழுதும் செஞ்சோலை 
    காக்க விரைந்து வந்தோரே !
ஆலம் விழுதாய் வேரூன்றி 
     ஆற்றும் பணியால் ஓங்குகவே !
சீலம் நிறைந்த நம்நாட்டைச் 
   சீராய் வளர்த்தல் நம்கடனே !
மாலன் திருத்தாள் எழில்எண்ணி 
   மகிழ்ந்து நன்றி உரைக்கின்றேன் !     

                                                                          
                                                             நன்றி வணக்கம்...
                                                                                                                                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/16/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து மலர்கவே

               
                          

எந்தமிழ் ஈழத்தார் ஏந்தி வளர்க்கின்ற 
செந்தமிழ்ச் சோலை செழிப்புறுக !-சிந்தையிலே 
மண்ணின் மணம்கமழ்க !மார்பில் மறங்கமழ்க !
தொண்டில் சுடர்க தொடர்ந்து !

ஈழம் என்றால் வீரமென 
    இந்த உலகம் உணர்ந்ததுவே !
வேழம் போன்றே அஞ்சாத 
   வேங்கை நம்மின் அடையாளம் !
ஆழம் அகலம் நன்காய்ந்தே 
   அமைப்போம் பாலம் இனி ..நம்முன் 
ஊழும் என்ன எதிர்கின்ற 
   உலகும் என்ன ?..இணைந்திடுவோம் !

சங்கே கொண்டு முழங்கிடுவோம் 
  தலைவன் நெறியை உரைத்திடுவோம் !
எங்கே இருந்த பொழுதினிலும் 
   இன்பத் தமிழை வளர்த்திடுவோம் !
அங்கே நம்மின் சொந்தங்கள் 
   அடைந்த துயரைத் துடைத்திடுவோம் !
இங்கே இயங்கும் செந்தமிழின் 
    சோலை செழிக்க உழைத்திடுவோம் !

தேனின் இனிய செந்தமிழைத்  
  திசைகள் எட்டும் தாங்கட்டும்!
வானின் விளிம்பைத் தொட்டுவரும் 
   வன்மை நெஞ்சுள் ஓங்கட்டும் !
ஊனில் உயிரில் இனப்பற்றே 
    ஊறி நன்றே  தேங்கட்டும் ! 
கானின் மணமாய் நம்வாழ்வு 
    கமழ இணைந்து செயற்படுவோம் !

நம்மால் இயன்ற உதவிகளை 
    நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
செம்பால் நிகர்த்த செந்தமிழின் 
    செம்மை காத்தல் நம்முடமை !
அம்பாய் விரைந்து பணியாற்றும் 
     ஆற்றல் தரித்தால் வரும்பெருமை !
அம்பாள் அடியாள் அனைவரையும் 
     அன்பால் வணங்கி வாழ்த்துகிறேன் !

                                

                                              வாழ்க தமிழ் !வளர்க தம் பணி !
                                                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/10/2015

குருவின் ஆசியுடன் பெருகட்டும் இனியநற் பாக்கள்..



முத்தான சந்தங்கள் முன்னின் றொலிக்கவே
வித்தையைக் கற்று வியப்புறலாம்! - நித்தமும்
பாமாலை சூடுகிறார் பாரதி தாசனார்!
பூமாலை போன்றே புனைந்து! 

எண்ணச் சிறகில் எனைத்தாங்கி
   எங்கோ அழைத்துப்  போகின்றார்! 
வண்ண  வண்ணக்  கனவுடனே  
    வானில் பறக்கச் செய்கின்றார்! 
உண்ண உறங்கப்  பொழுதில்லை!   
    ஊக்கம் மிகவே உழைக்கின்றோம் !
விண்ணைத் தொட்டுக் குதித்தாட 
    விளைத்தார் புலமை என்குருவே! 

அள்ளித் தருவார் அரும்பாக்கள் 
    ஆழம் மிகுந்த கருத்தோடு!  
துள்ளித் துள்ளி மனம்பாடும் 
    தூய தமிழின் சுவைசூடும்! 
பள்ளிச் சிறுவர் எனநாங்கள்  
   பாக்கள் பயின்று வருகின்றோம் !
தள்ளி இருந்த யாப்பமுதைத்
     தந்து மகிழ்ந்தார் என்குருவே! 

கண்கள் காணும் காட்சிகளைக்
   கவிதை யாக்கும் கவியரசர் ! 
புண்கள் போக்கும் வகைதனிலே 
   பூக்கும் பாக்கள் புத்தமுதே! 
விண்ணின் வந்து  விழுந்திடினும் 
    வீரம் பொங்கக்  கவிபுனைவார் !
மண்ணைப் போற்றும்  மறவரென 
    மானம் காக்கும் என்குருவே! 

ஏங்கித் தவிக்கும் மனநிலையை 
   என்றும் அகற்றும் தமிழ்தருவார்! 
வீங்கிப் பெருத்து விழிபிதிங்கி
    வெம்பும் நிலையை மாற்றிடுவார்! 
மூங்கில் இசைபோல் என்னுடைய 
     மூளை குள்ளே புகுந்திடுவார்! 
தேங்கிக் கிடக்கும் உணர்வுகளைத்   
     தேனாய் மாற்றும் என்குருவே! 

பாடும் பணியே பணியெனநான் 
   பாடப் பெருகும் புதுச்சுகமே 
தேடும் எவையும் அழிந்திடலாம் 
    தேயா திருக்கும் மொழிப்பற்றே! 
வாடும் மனத்தின் வருத்தத்தை 
    வடித்தே  நீக்கும் வண்டமிழே! 
கூடும் இழந்த பறவையெனைக்   
     குளிரச் செய்யும் என்குருவே!

எண்ணக் கருத்தைச் செவிமடுத்தே 
   ஏற்றம் பெறுவீர்! மின்னுகின்ற 
வண்ணக் கவிதை வடித்திடவே  
    வருவீர்  இனிய உறவுகளே!
கண்ணைக் கவரும் வலைத்தளத்தில் 
    காலம் முழுதும் பயின்றிடலாம்!
நண்ணும் நலங்கள் தந்திடவே     
    நன்றே உழைக்கும் என்குருவே!

                                                                            
http://bharathidasanfrance.blogspot.ch/ என்றன் குருவின்  வலைத்தளம் கண்டு நாளும் வளம் பெறுவீர் !வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/06/2015

அரசுகளின் கவனத்திற்கு

                                         

அழிவதை நினைவில் தேக்கி 
   அலைந்திடும் உலகின் போக்கை
விழிகளில் உணரு கின்றோம் 
   விடைதனைத் தருவார் யாரோ?
மொழிந்ததை ஆய்ந்து நன்றே 
   முன்வரும் துயரை நீக்கு!   
தொழிலுறும் துாய்மை யாலே  
    தொடர்வினை அகலும் இங்கே !

பயிர்வளம் கருக நாளும்  
   படர்துயா் வந்தே சேரும்!
உயிர்வளம் தழைப்ப தெங்கே?
   உடனிதை  உணர்தல் நன்றே!
மயிரிழை போன்றே வாழ்வு!  
    மனமுதை உணா்தல் வேண்டும்! 
துயில்கிறார்  கவலை யின்றி
    துயரிதைத் தடுக்க வாரீர்!

கயவரை அடக்க எண்ணி 
  கழிச்செயல் புாிதல் ஏனோ? 
உயரிய நெறியை விட்டே
  உயிர்களைப் பறித்தல் ஏனோ? 
தயவுடன் அறியத் தந்தோம் 
   தருமத்தைக் காவல் செய்வீா்!
முயற்சியே இன்றி நாட்டை 
    முடக்குதல் கொடுமை அன்றோ?

குடிமனை எரியக் கண்டு 
    குமுறுது மனமும் இன்று !
மடிபவர் மனிதர் என்று 
   மனங்களும் உணர்தல் நன்று!
விடிவினை எதிர்கொள் ளத்தான் 
   விரைந்தொரு முடிவைத் தேடி 
அடிமையெம் அகத்தின் ஓசை 
    அயர்விலா தொலிக்கு திங்கே !

டைமைகள் இழந்த மக்கள் 
   உாிமையைப் பெறவே வேண்டும்!  
கடமையை உணர்ந்தே நாடு  
   கடன்தனைப் புாிதல் வேண்டும்!
மடமைகள் அறிவை மாய்க்க 
    மனிதனை மனிதன் மேய்ப்பான் 
இடரெலாம் நீங்கும் வண்ணம் 
     இனிதுறும் வழிகள் செய்வீர்! 
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.