10/09/2015

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே!

                                       

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே
.......சிங்கார உடைஉடுத்தி புதுகை  நோக்கி !
எட்டாத கனியென்று எண்ண வேண்டாம் !
......இனியதமிழ் காணட்டும்  உலகின் எல்லை !
பட்டிதொட்டி எங்கும்பார் பதிவர் பேச்சு !
......படைதிரட்டி நாமுமங்கே போனா போச்சு !
திட்டமிட்ட செயற்புரிந்து  மகிழ்ச்சி கொள்வோம்
......தித்திக்கும் உணர்வுகளைப்  பகிர்ந்து கொள்வோம் !

மங்காத நினைவாகும்!  மலர்கள் ஆடும்
.......மானாட்டம் மயிலாட்டம் காண வாடி!
தங்கத்தான் இடமுண்டு !உணவும் உண்டு !
.......தரமான நிகழ்ச்சிகளும் அங்கே  உண்டாம் !
எங்குமுள்ள உறவுகளை இணைக்கும் இந்த
......இனியவிழாக்  காணவாடி என்றன் தோழி !
பொங்குதமிழ் மாமறவர்  கூடும் இந்தப்
.......பொன்னான தருணம்போல் வேறு உண்டோ !

இத்தனைநாள் காத்திருந்தோம் எதற்கு இங்கே !
.......இனியதமிழ்  உறவுகளைக் காண வாடி !
பத்திரமாய்க்  காத்திடுவர் பதிவர் நம்மின்
.......பக்கபல மாயிருப்பர் உறவைப் போல !
இத்தரையில் எவருமில்லை என்ற எண்ணம்
.......எள்ளளவும் இனிவேண்டாம் இன்பம் பொங்க
அத்தனைபேர் மனங்களிலும் வாழும் எம்மை
......அரவணைப்பர்  அகம்மகிழ்வர் ஓடி வாடி !



என் அருமை வலைத்தள உறவுகளே அனைவருக்கும் வாழ்த்துக்கள் விழாவில் பங்கேற்று அகம் மகிழ வேண்டும் !ஒப்பற்ற இவ்விழா சிறக்க
உழைக்கும் கரங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/01/2015

சீதையை வரவேற்கின்றேன்!

                           

பிராஞ்சு நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத் திறப்பு விழாவில் பங்கேற்று   நான் பாடிய பாடல் !   

  இறைவணக்கம்!

உம்பர்களும் வீற்றிருக்கும் பாட்ட ரங்கில்
 .........ஒருபறவை சிறுபறவை பாட வந்தேன் !
எம்பிரானே நின்கருணை எனக்கு வேண்டும்
..........இன்பத்தேன் என்நாவில் சிந்த வேண்டும் !
கம்பன்தன் புகழ்பாடும் பிராஞ்சு நாட்டில்
.........கைதட்டி எவர்கையும் சிவக்க வேண்டும் !
அம்பாளின் அடியவள்நான் உன்னை வேண்டி
 .......அரும்பாக்கள் பாடிடவே அருள்வாய் இங்கே !

   தமிழ்த்தாய் வணக்கம்!

என்னுயிரே! பொன்மொழியே! என்றும் வாழ்வில்
 .........இன்பத்தேன் சிந்திடத்தான் எங்கும்   கண்டேன் !
நன்மைபல தந்திடவே  என்றன் நாவில்
..........நடம்புரியும் உனைமறவேன்! எழுதும் ஏட்டில்
பொன்னொளியை வழங்கிடுவாய் !மேடை எங்கும்
..........புகழொளியைத் தந்திடுவாய் ! வையம் தன்னில்
முன்பிறந்த முத்தமிழே  மூச்சே! பேச்சே!
 .........முக்கனியே ! உன்னடியை வணங்கு கின்றேன் !

   தலைவருக்கு வணக்கம்!

வண்டமிழால் சொற்போரை நிகழ்த்தி நாளும்
 .........வளமான வாழ்வளித்தாய் வையம் தோறும் !
கண்டுஉள்ளம் களிப்பெய்தக் கனியின் சாற்றைக்
..........கவிதையெனத் தந்துவக்கும் ஆசான் உன்னை
மண்மீது மாதவமாய் நானும் பெற்றேன் !
......... மனம்மகிழ்ந்து மலர்தூவி வணங்கு கின்றேன் !
எண்ணம்போல் வரவேற்றுப் பாட வைப்பாய்
.........இச்சபையில் என்புழும் ஓங்கும் வண்ணம் !    

     அவை வணக்கம்!

முத்தமிழைத் தம்முடலுள் மூச்சாய்த் தாங்கி
 ........முன்னின்று காப்பவர்கள் என்னை நோக்க
சித்தமெல்லாம் குளிரமெல்லச்   சிறைப்பட் டேனே !
 ........சிறுபறவை போலத்தான்  அகப்பட் டேனே !
வித்தைகற்ற பாவலரும் விரும்பிக் கேட்க
.........வீறுகொண்டு பாப்புனைந்து வந்தேன் இங்கே
இத்தரையில் என்புழும்  ஓங்கும் வண்ணம்
........இணையில்லா இச்சபையை வணங்கு கின்றேன் !


  சீதையை வரவேற்கின்றேன்!

ஊரறியும் உலகறியும் உன்றன் நாமம்
........உத்தமியே பத்தினியே சீதை என்றால்
பேரறிவு பெற்றவரும் பெருமை கொள்வர்
........பெண்தெய்வம் நீதானே இந்த மண்ணில் !
ஆரவாரப் படுகின்றார் மக்க ளெல்லாம்
........அம்புவியில் நின்னருளைப் பெற்றால் போதும்
ஈரவிழி பட்டதுன்பன் எல்லாம் ஓடும் !
........இனியவளே நின்னருளால் இன்பம் கூடும் !

மன்னாதி மன்னரோடும்  போட்டி போட்டு
..........மண்மீது சிவதனுசை அன்று டைத்தே
அன்னைக்குத் திருராமன்  மாலை யிட்ட
 .........அழகான காட்சிக்கு ஈடும் உண்டோ !
இன்னல்கள் நிறைந்தாலும் கற்பின் ஆற்றல்
 .........இவ்வுலகை வெல்லுமென வாழ்ந்தாய் அம்மா !
தன்னுயிராய்த் திருமாலைக் கொண்ட  உன்போல்
..........தரணியிலே பதிவிரதை யார்தான் உள்ளார்!

 சித்தத்துள் உன்னாமம் செதுக்கி வைத்தேன்
 ..........சிந்திக்கும் போதெல்லாம் சிரத்தைக் காத்தாய் !
இத்தரையில் எனைவாழ வைத்த சக்தி
 .........இனியவளே நீஎன்றே இன்பம் கொண்டேன் !
நித்தமுனைப் போற்றுகின்றேன் !நிலத்தைக் காக்கும்
........... நிரந்தரியே! பெருந்தேவி தாயே !இங்குச்
சத்தியமாய் ஆணையிட்டுச் சொல்வேன் நானும்
.........சங்கடத்தைத்  தீர்க்கவல்ல சக்தி நீயே !

இரக்கமற்ற இராவணன்தன் செயலால், உன்றன்
.........இராமனையே பிரிந்தகாலம் !வாட்டும் பொல்லா
அரக்கருக்கோர் பாடமென  எண்ணும்  போது
..........அவதார சக்தியுன்னை நெஞ்சம் போற்றும் !
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் சீதை அம்மா
..........சித்தத்துள் உனைத்தாங்கும்   பக்தர் காண
வரவேண்டும்  வல்லகம்பன் கழக மன்றில்
 ........வரவேற்கும் என்பாடல் கேட்க வேண்டும் !

சிங்காரத் தேவதையே! செல்லப் பெண்ணே !
.........சீதையுனை வரவேற்றேன் கண்ணீர் மல்க!
மங்காத பேரொளியே! மானே !தேனே !
.........மன்றத்தில் வந்தமர்வாய் மாட்சி ஒங்க!
பொங்குதமிழ் ஆர்வலர்கள் சங்க மிக்கும்
.........பொன்விழாவில் நின்னெழிலைக்  கண்டால் போதும்
அங்கமெல்லாம் அசைந்தாடும் பூப்போல் மெல்ல
 .......அடியவளின் அழைப்பேற்று  வா ..வா தாயே !

   

                                           



                                                                       

                                                                       தொடரும் ................
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.