பொங்கி எழு தமிழா !
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல் வேண்டும் !
தருமநெறி காக்கின்ற செயலைச் செய்து
தமிழர்நாம் தமிழராக வாழ்தல் வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல் வேண்டும்
பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !
கருமமதைக் கண்ணாகக் கொள்ள வேண்டும்!
களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் !
உருகாதோர் மனமுருகச் செய்ய வேண்டும்
உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
வீறுகொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும் !
நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
நாட்டமுடன் காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
மனமொத்துப் பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.
இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும்
வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி
வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !
இப்படிக்கு
உண்மையுள்ள
அம்பாளடியாள்
நன்றி .


