வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை
எண்ணம்போல் பாடவந்தோம் இன்றிங்கே !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே ! உன்னால்
நிறைகுடம் ஆனதெம் வாழ்வு !
செந்தமிழ் கற்றுநாம் சீருடன் வாழ்ந்திடவே
வந்தனை செய்கின்ற வள்ளலே !-கந்தன்
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !
பொன்விழா காணுபுகழ் பாரதி தாசனே !
உன்னுயிரை ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக்
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும் புகழ்!
நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன் !
சொல்லறம் காத்திடும் தூயவன் !- வல்ல
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !
நாடிக் கொடுத்திடும் நன்மையை எண்ணியே
தேடிநாம் வந்தோம் செளுங்கவிகள் !-பாடிப்
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும்
உரம்நீயே எங்கள் உயிர்க்கு!
கவிஞர் கி. பாரதிதாசனார்
பொன்விழா வாழ்த்து!
பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!
தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று
வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்
சூழ்கவே இன்பம் சுரந்து!
பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!
சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்
இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே
எல்லாப் பெருமையும் எய்து!
களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே
ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச் - செழிக்கின்ற
இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி
நல்லறம் காண்க நயந்து!
அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு
வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி
பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!
பூரண விண்மதியாய்ப் பூத்து!
வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி
நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்
போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!
பூக்கும் தமிழுன் பொழில்!
கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.