12/16/2015

பேச்சில் இனிமை வேண்டும் !

                                               
                                     

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !

கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை  பகையைத் தேடும்
......பரிதாப  நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !

பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !

மண்ணில்நாம் கொண்டவெழில்   மறைந்து போகும்
......மறையாத நினைவாகப்  பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
......எதிரிக்கும் நம்பேச்சும்  இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/15/2015

உதவும் கரங்களே ஒன்று கூடுவீர்!

                                         

எங்கெங்கோ நடிகைக்கும்  கோயில் கட்டி
......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார்
தங்கத்தைக் கூடத்தான்  தாரை வார்த்தார்
......தரணியிலே இன்றுதவ யார்தான் வந்தார் !
அங்கத்தின் அழகுகெடும் ஆட்டம் நிற்கும்
......அன்பொன்றே  தான்வாழும் இந்த மண்ணில்!
இங்கிதனை நாமுணர்ந்தால் போதும் நல்ல
......எதிர்காலம் தேடிவரும் எம்மைக் காக்கும் !

கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் இன்று
.......கரைசேர  வழியென்ன எண்ணிப் பார்ப்போம் !
உண்ணநல்ல  உணவுதந்தே  உடையும் தந்தே
.......உயிர்காப்போம்  ஒப்பற்ற துணையாய் நிற்போம் !
தண்ணீரும் வற்றாமல் பாயும் போது
........தரையிலுல்ளோர் படும்பாடு அறிவோம் நன்கு!
புண்ணியமாய்ப் போகுமிங்கே  ஆற்றும் சேவை
........புறப்படுவீர் எம்மோடு கைகள் கோர்த்து !

உப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்
.......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட
ஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா
.......ஓயாமல் இந்நினைவே ஓடு தப்பா !
இப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம்
.......இளையோரே கைகோர்ப்பீர் மண்ணில் மக்கள்
எப்பொழுதும் இதைமறவார் உயிரைக் காத்தல்
.......எம்கடமை என்றுணர்ந்து விரைந்து வாரீர் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/13/2015

எல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை !

தெய்வத்தின் மீதெந்த  குற்றம் இல்லை! 
......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை 
மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே !
.......மேதினியில் இனியிதற்கே  இல்லை ஈடே !
பெய்யாதோ மழையென்று ஏங்கி நின்றோம் 
.......பெரும்துயரப் பட்டவர்நாம்  என்ன செய்தோம் 
 உய்யவழி சமைத்திடுவோம்! இயற்கை காப்போம்!
 ......ஒற்றுமையாய்த்  தொண்டாற்றித் துன்பம் தீர்ப்போம்!

மண்மீது துயரனைத்தும் நீங்க  வேண்டும் 
......மறுபடியும் மலர்பூத்துக் குலுங்க வேண்டும்!
எண்ணம்போல் மக்களெல்லாம் வாழ வேண்டும்   
......இறையருளால் இவையாவும் நிகழ வேண்டும் !
வண்ணப்பூஞ் சோலையென இன்றெம்  நாடு
......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை !
கண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் !
.......கணக்கிட்டால் எல்லாமும்  இயற்கை யாகும் !

பொய்யாக வாழுகின்றோம் கோட்டை  கட்டிப்
...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி !
உய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட
.......உலகத்தில் இல்லாமல் உயிரும் போகும் !
மெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே
.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு!
செய்கின்ற பணியாவும் இயற்கை ஓங்கச்
......சிறந்திட்டால் துயர்மேவ வழியும் உண்டோ? 

சாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்
.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் !
காலையிலே கண்விழித்தால்  போதும் இன்று
......காணுகின்ற காட்சியென்ன   ஊழல் தானே !
ஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே
.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் !
ஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு
......ஆகும்முன்னர்க்  காத்திடுவீர்  இயற்கை தன்னை !

கடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்
......கைகூட வேண்டுமது இல்லை என்றால்
உடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்
.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் !
திடமான சிந்தனையால் வெற்றி கண்டு
......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு !
இடரோடு போராடி இனியும் வெல்ல
......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/09/2015

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே!

                                       

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே
.......சிங்கார உடைஉடுத்தி புதுகை  நோக்கி !
எட்டாத கனியென்று எண்ண வேண்டாம் !
......இனியதமிழ் காணட்டும்  உலகின் எல்லை !
பட்டிதொட்டி எங்கும்பார் பதிவர் பேச்சு !
......படைதிரட்டி நாமுமங்கே போனா போச்சு !
திட்டமிட்ட செயற்புரிந்து  மகிழ்ச்சி கொள்வோம்
......தித்திக்கும் உணர்வுகளைப்  பகிர்ந்து கொள்வோம் !

மங்காத நினைவாகும்!  மலர்கள் ஆடும்
.......மானாட்டம் மயிலாட்டம் காண வாடி!
தங்கத்தான் இடமுண்டு !உணவும் உண்டு !
.......தரமான நிகழ்ச்சிகளும் அங்கே  உண்டாம் !
எங்குமுள்ள உறவுகளை இணைக்கும் இந்த
......இனியவிழாக்  காணவாடி என்றன் தோழி !
பொங்குதமிழ் மாமறவர்  கூடும் இந்தப்
.......பொன்னான தருணம்போல் வேறு உண்டோ !

இத்தனைநாள் காத்திருந்தோம் எதற்கு இங்கே !
.......இனியதமிழ்  உறவுகளைக் காண வாடி !
பத்திரமாய்க்  காத்திடுவர் பதிவர் நம்மின்
.......பக்கபல மாயிருப்பர் உறவைப் போல !
இத்தரையில் எவருமில்லை என்ற எண்ணம்
.......எள்ளளவும் இனிவேண்டாம் இன்பம் பொங்க
அத்தனைபேர் மனங்களிலும் வாழும் எம்மை
......அரவணைப்பர்  அகம்மகிழ்வர் ஓடி வாடி !



என் அருமை வலைத்தள உறவுகளே அனைவருக்கும் வாழ்த்துக்கள் விழாவில் பங்கேற்று அகம் மகிழ வேண்டும் !ஒப்பற்ற இவ்விழா சிறக்க
உழைக்கும் கரங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/01/2015

சீதையை வரவேற்கின்றேன்!

                           

பிராஞ்சு நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத் திறப்பு விழாவில் பங்கேற்று   நான் பாடிய பாடல் !   

  இறைவணக்கம்!

உம்பர்களும் வீற்றிருக்கும் பாட்ட ரங்கில்
 .........ஒருபறவை சிறுபறவை பாட வந்தேன் !
எம்பிரானே நின்கருணை எனக்கு வேண்டும்
..........இன்பத்தேன் என்நாவில் சிந்த வேண்டும் !
கம்பன்தன் புகழ்பாடும் பிராஞ்சு நாட்டில்
.........கைதட்டி எவர்கையும் சிவக்க வேண்டும் !
அம்பாளின் அடியவள்நான் உன்னை வேண்டி
 .......அரும்பாக்கள் பாடிடவே அருள்வாய் இங்கே !

   தமிழ்த்தாய் வணக்கம்!

என்னுயிரே! பொன்மொழியே! என்றும் வாழ்வில்
 .........இன்பத்தேன் சிந்திடத்தான் எங்கும்   கண்டேன் !
நன்மைபல தந்திடவே  என்றன் நாவில்
..........நடம்புரியும் உனைமறவேன்! எழுதும் ஏட்டில்
பொன்னொளியை வழங்கிடுவாய் !மேடை எங்கும்
..........புகழொளியைத் தந்திடுவாய் ! வையம் தன்னில்
முன்பிறந்த முத்தமிழே  மூச்சே! பேச்சே!
 .........முக்கனியே ! உன்னடியை வணங்கு கின்றேன் !

   தலைவருக்கு வணக்கம்!

வண்டமிழால் சொற்போரை நிகழ்த்தி நாளும்
 .........வளமான வாழ்வளித்தாய் வையம் தோறும் !
கண்டுஉள்ளம் களிப்பெய்தக் கனியின் சாற்றைக்
..........கவிதையெனத் தந்துவக்கும் ஆசான் உன்னை
மண்மீது மாதவமாய் நானும் பெற்றேன் !
......... மனம்மகிழ்ந்து மலர்தூவி வணங்கு கின்றேன் !
எண்ணம்போல் வரவேற்றுப் பாட வைப்பாய்
.........இச்சபையில் என்புழும் ஓங்கும் வண்ணம் !    

     அவை வணக்கம்!

முத்தமிழைத் தம்முடலுள் மூச்சாய்த் தாங்கி
 ........முன்னின்று காப்பவர்கள் என்னை நோக்க
சித்தமெல்லாம் குளிரமெல்லச்   சிறைப்பட் டேனே !
 ........சிறுபறவை போலத்தான்  அகப்பட் டேனே !
வித்தைகற்ற பாவலரும் விரும்பிக் கேட்க
.........வீறுகொண்டு பாப்புனைந்து வந்தேன் இங்கே
இத்தரையில் என்புழும்  ஓங்கும் வண்ணம்
........இணையில்லா இச்சபையை வணங்கு கின்றேன் !


  சீதையை வரவேற்கின்றேன்!

ஊரறியும் உலகறியும் உன்றன் நாமம்
........உத்தமியே பத்தினியே சீதை என்றால்
பேரறிவு பெற்றவரும் பெருமை கொள்வர்
........பெண்தெய்வம் நீதானே இந்த மண்ணில் !
ஆரவாரப் படுகின்றார் மக்க ளெல்லாம்
........அம்புவியில் நின்னருளைப் பெற்றால் போதும்
ஈரவிழி பட்டதுன்பன் எல்லாம் ஓடும் !
........இனியவளே நின்னருளால் இன்பம் கூடும் !

மன்னாதி மன்னரோடும்  போட்டி போட்டு
..........மண்மீது சிவதனுசை அன்று டைத்தே
அன்னைக்குத் திருராமன்  மாலை யிட்ட
 .........அழகான காட்சிக்கு ஈடும் உண்டோ !
இன்னல்கள் நிறைந்தாலும் கற்பின் ஆற்றல்
 .........இவ்வுலகை வெல்லுமென வாழ்ந்தாய் அம்மா !
தன்னுயிராய்த் திருமாலைக் கொண்ட  உன்போல்
..........தரணியிலே பதிவிரதை யார்தான் உள்ளார்!

 சித்தத்துள் உன்னாமம் செதுக்கி வைத்தேன்
 ..........சிந்திக்கும் போதெல்லாம் சிரத்தைக் காத்தாய் !
இத்தரையில் எனைவாழ வைத்த சக்தி
 .........இனியவளே நீஎன்றே இன்பம் கொண்டேன் !
நித்தமுனைப் போற்றுகின்றேன் !நிலத்தைக் காக்கும்
........... நிரந்தரியே! பெருந்தேவி தாயே !இங்குச்
சத்தியமாய் ஆணையிட்டுச் சொல்வேன் நானும்
.........சங்கடத்தைத்  தீர்க்கவல்ல சக்தி நீயே !

இரக்கமற்ற இராவணன்தன் செயலால், உன்றன்
.........இராமனையே பிரிந்தகாலம் !வாட்டும் பொல்லா
அரக்கருக்கோர் பாடமென  எண்ணும்  போது
..........அவதார சக்தியுன்னை நெஞ்சம் போற்றும் !
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் சீதை அம்மா
..........சித்தத்துள் உனைத்தாங்கும்   பக்தர் காண
வரவேண்டும்  வல்லகம்பன் கழக மன்றில்
 ........வரவேற்கும் என்பாடல் கேட்க வேண்டும் !

சிங்காரத் தேவதையே! செல்லப் பெண்ணே !
.........சீதையுனை வரவேற்றேன் கண்ணீர் மல்க!
மங்காத பேரொளியே! மானே !தேனே !
.........மன்றத்தில் வந்தமர்வாய் மாட்சி ஒங்க!
பொங்குதமிழ் ஆர்வலர்கள் சங்க மிக்கும்
.........பொன்விழாவில் நின்னெழிலைக்  கண்டால் போதும்
அங்கமெல்லாம் அசைந்தாடும் பூப்போல் மெல்ல
 .......அடியவளின் அழைப்பேற்று  வா ..வா தாயே !

   

                                           



                                                                       

                                                                       தொடரும் ................
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/30/2015

கம்பன் கழகம் வழங்கிய பட்டம் !

                                             
  நன்றியுரை ஏற்று நலம் வாழ வாழ்த்திடுவீர் !

மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவும் என்றன்
....... மனநிலையைச் சொல்லத்தான் வார்த்தை இல்லை !
கண்கண்ட தெய்வத்தால் நானும் இன்று
........களிப்புடனே பெற்றுவந்தேன் உயர்ந்த பட்டம்  !
எண்ணம்போல் வாழ்த்துவீரே நாளும் வந்து
........என்வலையில் கருத்திட்டு மகிழ்வீர் என்றன்
நண்பர்களே! உறவுகளே !  பிரான்சு கம்பன்
.......நற்பணியை வணங்குகின்றேன் மறவேன் வாழ்வில் !

ஆசானுக்கு நன்றி !

மங்காத புகழ்சேர்த்த ஆசான் உன்றன்
........மனம்வாழ வாழ்த்துகின்றேன் வையம் தன்னில் !
பொங்குதமிழ் ஆர்வத்தை ஊட்டும் உன்போல்
.......பொன்போன்ற மனத்தவர்கள் வேண்டும் இங்கே !
தங்கட்டும் மங்களமும் தார்கள் யாவும் !
.......தரணியெல்லாம் உன்புகழைப் பாடும் வண்ணம் !
எங்களுக்கோர் நல்லாசான் நீவீர் இந்த
.......இசைக்கின்றேன் இதயத்தில் நன்றி !நன்றி !

நட்பு உறவுகளுக்கு நன்றி !

வல்லகம்பன் கழகத்தின் தலைவர் எங்கள்
.......வலையுலக நாயகனின் எண்ணம் போல
நல்லகவி நான்படைப்பேன் நாளும் இங்கே
.......நான்வணங்கும் தெய்வத்தின் அருளைப் பெற்று!
இல்லையொரு குறையுமென்று கற்றோர் போற்ற
.......இளையவளின் படைப்போங்கச் செய்வீர் தம்மின்
எல்லையிலா நற்கருத்திற் கீடும்  உண்டோ !
......என்வலையைத் தொடர்கின்ற நட்பே !நன்றி !

மின் வலைக்கு நன்றி !

நன்றியுரை நானுரைக்கும் இந்த வேளை
........நான்மறவேன் எழுதுகின்ற எழுத்தைத் தாங்கும்
மின்வலைகும் நன்றியினைச்  சொல்வேன் இங்கே
.......மீண்டுமிந்த வாய்ப்பளிப்பீர் மின்னல் தீவே !
உன்னைநம்பி உலகத்தோர் வாழு கின்றார்
.......உணர்வுகளைப் பகிர்ந்துவிட்டு உறங்கு கின்றார் !
என்றுமிதைக் காக்கின்றாய் எண்ணம் போல
.......ஏழ்பிறப்பும் தொடர்ந்திருப்பீர் உலகப் பந்தில் !

என்னை  ஈன்ற பெற்றோருக்கு நன்றி !

என்னையிங்கு ஈன்றெடுத்த பெற்றோர் ஏற்பீர்
........இதமான நன்றியினை என்றும் காப்பீர் !
பொன்னைவிட பெரிதாக என்னைப் போற்றிப்
.......பொறுப்புடனே விருப்புடனே வளர்த்தீர் அந்த
நன்மைக்குப் பரிசளித்தேன் நானும் இங்கே
........நலம்வாழ வாழ்த்திடுவீர் என்றும் இந்த
இன்பத்தில் உறைந்திருக்க என்றன் நெஞ்சம்
........இறையாக நான்காணும் என்றன் வாழ்வே !

                                         








தொடரும் ............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2015

பொங்கி எழு தமிழா !




பொங்கி எழு தமிழா !
                               
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
    வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல்  வேண்டும் !
தருமநெறி  காக்கின்ற செயலைச் செய்து
     தமிழர்நாம்  தமிழராக வாழ்தல்  வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல்  வேண்டும்
     பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
     எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !

கருமமதைக்   கண்ணாகக்  கொள்ள   வேண்டும்!
     களவின்றிப் பொய்யின்றி வாழ்தல்   வேண்டும் !
உருகாதோர்  மனமுருகச் செய்ய வேண்டும்
     உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
     அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
      வீறுகொண்டே  எவருமிங்கு  வைக்க வேண்டும் !

நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
      நாட்டமுடன்  காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
     மனமொத்துப்   பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
      அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
       தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !

                                                                   
                                                      
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’   மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை. 


இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் 

வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி

வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !

இப்படிக்கு 

உண்மையுள்ள 

அம்பாளடியாள் 

நன்றி .

                                                        



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2015

மரண ஓலம் கேட்கிறதே !!


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன?.. இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன?..
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....


                                              (மரண ஓலம் கேட்கிறதே....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2015

ஒன்றில் நான்கு!



                                                                 
வண்ணக் கவிகள் வழங்கு!

ஒன்றில் நான்கு!


பஃறொடை வெண்பா!

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத்  தமிழணங்கே! ஈடில்லாப் பேரழகே !
துன்பம் துடைத்துத் துணிவூட்டி- என்றென்றும்
வண்ணக் கவிகள் வழங்கு !

நேரிசை வெண்பா   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத் தமிழணங்கே !ஈடிலாப் பேரழகே !
வண்ணக் கவிகள் வழங்கு !

சிந்தியல் நேரிசை வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
வண்ணக் கவிகள் வழங்கு !

குறள் வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
வண்ணக் கவிகள் வழங்கு !

இலக்கணக் குறிப்பு !  
பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை  வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !

                                                                             

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/02/2015

பாவலர் பட்டம் !

                                                                               
                                                           

                                        
                                               
நன்றியென்று நானுரைக்க நாள்முழுதும்  போதாதே !
என்றுமிதை நான்மறவேன் என்குருவே !-கன்னல்
கவிபுனையும் ஆற்றலினைக்  கற்றிடச் செய்து 
புவிபோற்றச் சேர்த்தாய் புகழ் !

எண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்  
             இனிக்கும் நெஞ்சம் !
மண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்
             மகிழ்து  ஏற்றேன் !
கண்ணான என்குருவே காரணம்நீ  இன்றிதனைக்
            கைகள் ஏந்த!
விண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன்  பாதத்தில்
            விரைந்தே  வாழ்த்து !




அன்பு உள்ளங்களே !
வான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார் 
நான்மகிழத் தந்திட்டார் நற்பட்டம்  !-மீன்போல்
எனதுள்ளம் நீந்துதே! இன்றிதனைக் கண்டு 
மனதாரச் சொல்லுங்கள் வாழ்த்து !

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து, 
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் 
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்  

இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

அன்பு உள்ளங்களே! இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம்  பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் !இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..

                                  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/31/2015

காத்தருள வா தாயே !

                                                           
கருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்    
வரும்துயரும்  ஓடாதோ வாழ்வில் !-இருள்போம்!
உலகத்தின் சக்தியே  உன்னால்தான்  இங்கே
கலகமும் அற்றுப்போம் காண்!


முத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்
இத்தரையில் யாருள்ளார்  இங்குச்சொல்? !-சித்தம்
கலங்குதடி தாயேயெம்   கண்ணீரைப் பார்த்தும்
உலகத்தின் துன்பத்தை ஓட்டு !

ஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே
நீங்காத துன்பமெல்லாம்  நீங்குமடி !-பாங்காய்
அடியெடுத்து வா..தாயே ! அன்றாடம் ஏங்கி
மடியுதே எம்மின் மனம் !

நாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து
ஓடியே  இன்றிங்கே  ஓடானோம் !-கூடி
வருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்!
அருமருந்தே வந்திங்(கு) அருள் !

பொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே !
இல்லார்க்கும் இவ்வுலகில் இன்பம்நீ!-வல்ல
துணையின்றி வாழ்வேது ?  தூயவளே போதும்
அணைபோட்டுக் காத்தே  அருள் !

தாயுன்றன் நல்லருளால்   தாயகத்தை வென்றிடலாம்
பேய்களுமே ஓடிவிடும் பேச்சிழந்து  !-நாய்போல்
அலைகின்ற  இந்நிலைபோம்!   அன்னியரின் ஆட்சி
கலைத்தெம்மைக் காத்தே அருள் !


                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2015

ஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு !



 
நட்போடு சேர்ந்திங்கு நாள்நகரும் போதுதான்
உட்பகையும் தன்னாலே ஓடிவிடும்  !-எட்டி
உதைத்தாலும் மன்னித்து உதவிடுக ! வாழ்வில்
இதைஏற்று வாழ்வீர் இனி !
                                                          
பட்டமரம் இன்பத்தைப் பாரினிலே கண்டதில்லை !
எட்டிநின்றால் வாழ்நாளும் எட்டிபோம் !நட்பும்
இருந்தால்தான் இன்பமிங்கே  !இல்லையெனில் என்றும்
மருந்தேதான் வாழ்வை மற!

கெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்
நட்பேதான்  வந்துதவும் நாட்டமுடன் !-சட்டம்
பலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்
உலகத்தில் நட்பை உணர்த்து !

நட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை !
திட்டித்தான் தீர்த்தாலும் தேனென்பார் !-குட்டிக்
கதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும்  நட்பைச்
சிதைத்துப்பார்! உண்டோ சிறப்பு ?                                         

கண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி
எண்ணாத்தீர்  தப்பாக  எந்நாளும் !-மண்ணில்
பிணமாக நாம்வாழ்ந்தால்   பின்வம்சம் தோற்கும்!
இணைப்பீரே  நட்பை இனி !

பூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு !
வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை !-நோக்கும்
இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2015

பதினான்கு மண்டிலம்

                                                           


                                           கண்கவரும் வெண்ணிலவோ!..
1
கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் !-மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!
தொண்டொளிரும்  ஒண்ணிறை யே !
2
வெண்ணிலவோ!  பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்!-விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவ ரும்!   
3
பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!- பண்மணக்கும் !
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே
கண்கவரும்!  வெண்ணில வோ ! 
4
நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன்
மண்மணக்கும் விண்மணக்கும் பண்மணக்கும் !-பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவரும்!  வெண்ணிலவோ ! பெண்ணொளி யோ!
5
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் !- புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! !பெண்ணொளியோ! நுண்மதி யோ!
6
வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!- தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ!
நுண்மதியோ! தண்ணிழ லோ! 
7
கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்!
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்!- ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ! வண்டமி ழோ!
8
மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே!- கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!
வண்டமிழோ! கண்டவு டன்! 
9
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்!- வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!
கண்டவுடன்! மண்மணக் கும்!
10
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ!- பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக் கும்! 
11
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ!- நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்!
விண்மணக்கும்!  பண்மணக் கும் !
12
புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!- தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக் கும் ! 
13
 தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!- வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் !
பண்பினிக்கும் !  புண்துடைக் கும்!
14
ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!- கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் !
புண்துடைக்கும்! தொண்டொளி ரும்!

 இலக்கணக் குறிப்பு


பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! மேலும் அறிய இங்கே செல்லவும் http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2015

பதினான்கு மண்டிலம் !

                                         
                                                 என்னுயிரே! பொன்மனமே!

(1)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!-என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்   இன்று !

(2)
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்(கு) உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  !-இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று) என்னுயி ரே!

(3)
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம்  !-அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மன மே!

(4)
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம்!  அன்னையுன்றன்  !-புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) ! என்னுயிரே !
பொன்மனமே  இன்னருள் செய் !

(5)
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்
இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல் !-ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)! என்னுயிரே பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக் கு !

(6)
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம் !
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  !-இன்பமயம்
மின்னிடும்இன்(று) !என்னுயிரே! பொன்மனமே !இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னரு ளால் !

(7)
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  !- மின்னிடும்இன்(று)!
என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மை பல !

(8)
என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) !-என்னுயிரே !
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்
நன்மைபல நின்றொளி ரும் !

(9)
இன்னலும்போம் !  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)  என்னுயிரே !-பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத் தில் !

(10)
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று)! என்னுயிரே !பொன்மனமே !-இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் !
என்னகத்தின்  இன்னலும் போம்  !

(11)
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய்!- இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்! என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன் றன்  !

(12)
ஒன்றதனால் இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே !
பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு!-உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறு வல் !

(13)
இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்!- நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றைத னால் !

(14)
மின்னிடும்இன்(று)  என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல !-நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம் அன்னையுன்றன்  !புன்முறுவல்
ஒன்றைதனால் இன்பம யம் !


இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/17/2015

வெண்பாக் கொத்து !

                                                               
                                                   
                                                   அன்னைநீ எனக்கு !


வெண்பாக் கொத்து !


குறள் வெண்பா 

அன்னைநீ  தெய்வம்  ! அருந்தமிழே! அன்புருவே!
இன்னருள்செய் நாளும் எனக்கு !

நேரிசைச்  சிந்தியல் வெண்பா 

அன்னைநீ பொன்மொழியாம்! அற்புதமாம் இவ்வுலகில்!
உன்னோடு சேர்ந்திருந்தால் உள்ளத்தில்  !-இன்பம்தான்
என்றுமில்லைத் துன்பம்  எனக்கு !


இன்னிசைச்   சிந்தியல் வெண்பா 

அன்னைநீ யேதான்என் ஆதியும் அந்தமும் !
என்னுயிராய் நிற்பவளே என்றுமெனை ஆதரிப்பாய் !
இன்றதுவே போதும் எனக்கு !


நேரிசை வெண்பா 

அன்னைநீ தான்என்றன்  ஆற்றலும் மூச்சாவாய் !
இன்னிசையாய் நின்றொளிரும்  இன்தேனே  !-உன்னருளால்
பொன்னழகு பெற்றிடலாம்  போதுமிந்த வையகத்தில்
என்னயினி  இன்னும் எனக்கு !


இன்னிசை வெண்பா 

அன்னைநீ காவியமாய் அன்புநிறை ஓவியமாய்
என்னுள்ளே தானிருப்பாய் எப்போதும் !உன்னழகைப்
பொன்னழகைக்  கண்ணெனவே போற்றுகின்ற பாட்டருள்வாய்
என்னுயிரே நாளும் எனக்கு!

பஃறொடை வெண்பா

அன்னைநீ முத்தல்லோ! அன்பேந்தி   முன்பிறந்த
பொன்மொழியைப் போற்றியிங்குப்  பாடிடவா ?-என்னாவி
உன்னோடு சங்கமிக்க ஊன்மறக்கும்! தேன்கசக்கும்!
என்னுயிர்க்கு நீதானே இன்பமிங்கே! -கன்னல்பூஞ்
சோலையுனைக் கண்டாலே சொக்கிநிற்கும் என்னுள்ளம்
காலையிளங் கீற்றாய்க்  களிப்பெய்தும்  !-ஆலையிட்ட
செங்கரும்பாய் ஆனேனே  செந்தமிழே நீவேண்டும்!
பொங்குதமிழ்ப்  பாட்டெழுதிப் போகத்தான் -மங்கையிவள்
காத்திருந்தாள்! பூத்திருந்தாள்! காலமெல்லாம் இங்குன்னைப்
பார்த்திருந்தாள்! பாப்புனைய பாருலகில் -கோர்த்துமலர்
தந்திடுவாய் என்றனுயிர்த்  தாகத்தை நான்தணிக்க
இந்நாளாம் பொன்நாள் எனக்கு !

                                                                 


இலக்கண விளக்கம் :

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.


மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னைநீ ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

இவ்வகையான வெண்பாக் கொத்தினைத் தாங்களும்  முறைப்படி பவில்வதற்கு இங்கே சொடுக்கவும் (இது எங்கள் ஆசான் கி .பாரதிதாசன் ஐயாவின் வலைப்பூ )http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post_4.html





தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2015

மும்மண்டில வெண்பா !

                                                 
நான் ஏன் வந்தேன் !

மண்ணில்நான் ஏன்வந்தேன் கண்ணேநீ  பார்என்றேன்
வண்டமிழாள் தேன்தந்தாள் எண்ணமெல்லாம் !-வண்ணமய
மீன்நீந்தக்   கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில்
தேன்சுவையுள் பெண்ணழகு மான் !

ஏன்வந்தேன்   கண்ணேநீ  பார்என்றேன் வண்டமிழாள்
தேன்தந்தாள் எண்ணமெல்லாம் வண்ணமய !-மீன்நீந்தக் 
கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள்
பெண்ணழகு மான்மண்ணில் நான் !

கண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள் தேன்தந்தாள்
எண்ணமெல்லாம் வண்ணமய மீன்நீந்தக்  !-கண்டிடுவாய்
வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள் பெண்ணழகு
மான்மண்ணில் நான்!ஏன்வந் தேன் !



இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம்     சீர்களை 
முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

இந்த வெண்பாவினை முறைப்படி கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும் !

http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post.html
                                                     

                                           

                                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/02/2015

வெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் !

                                           
                                                   


தூதுபோ பைங்கிளியே  தூயதமிழ் கற்பதனால்
ஏதுதுயர் நம்நாட்டில்  இங்குச்சொல் !-போதும்
பிறமொழியால்  கண்டபயன் ! பீடுடன்  வாழ
அறநெறியே காக்கும்  அரண் !

                                               

அன்னிய நாட்டில் அடைக்கலம் பூண்டபின்
நன்மையே சேருமென்று நாடாதே !இன்னல்
வருமெந்த நாளும்  வளமார் தமிழா !
உருகாமல்  வாழ்வை உணர் !

தஞ்சாவூர்ப்  பொம்மை! தலையாட்டத் தானோசொல்
விஞ்ஞானம் கற்றாய்? விடிவில்லை !- விஞ்சும்
துயர்மட்டும் மேல்நாட்டில்! தூங்கிக் கழித்தால்
உயர்வேது வாழ்வை உணர் !

செம்மொழியால் வந்துற்ற சீர்என்ன எண்ணிப்பார் !
அம்மணமாய் நிற்கத்தான்  ஆணவத்தால் !-தம்மை
மறந்திங்குச் செல்கின்றீர்  மாண்டாலே போதும் !
பறந்தும்போம் வாழ்வின் பயன்!

மேல்நாட்டு மக்களுடன் மேதினியில் வாழ்ந்திடலாம் !
ஆல்போல் உறவுகளும் அங்கெதற்கு?!- தோல்வி 
வருகின்ற போதெல்லாம் வெம்பியழு  வாழ்வில்
தருமநெறி  காக்கும் தலை !

சொன்னாலும் கேளாமல் சொந்தங்கள் பாராமல் 
தன்மானம் குன்றத்தான் தாவுகின்றாய் !-நன்மை 
ஒருபோதும் கிட்டாது! ஓய்வின்றித் துன்பம் 
பெருகத்தான் செய்தாய்  பிழை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/31/2015

திருப்புகழைப் பாடு மனமே !

                                   
                                           

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் !
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்!-முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர் !

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும் !
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும் !-தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !

செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து !-கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு !
திருப்புகழால் தீரும் துயர் !

கந்தனையும் கண்ணாரக்  கண்டிடலாம்  வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி !- வந்து
திருப்புகழைப் பாடுங்கள்  தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !

பன்னிருகை வேலவனே  பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை  இட்டதனால்  !-அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத்  தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு !

பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு  !
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு  !-நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும்  வழி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/29/2015

கனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் !

                                   




கனவைத்தான் காண்என்றார் அப்துல் கலாமும் !
மனமே இதுபோதும்   மண்ணில் ! - தனமும்   
உயர்கல்விச் சீரும் உனைச்சேரும்! நாளும் 
அயர்வின்றி நற்பணிகள் ஆற்று! 

மண்ணுலகைப் பொன்னுலகாய்  மாற்ற ஆசை !
          மனிதநேயம் கற்பித்து வாழ  ஆசை !
பெண்ணினத்தின் பெருமைதனைப் புகட்ட ஆசை !
          பெரும்துன்பம் தரும்வெறியை விரட்ட ஆசை !
இன்னலுறும் மக்களுக்காய் உழைக்க  ஆசை !
          இருக்கின்ற பொருள்தந்து காக்க ஆசை !
வன்முறையை  அன்பேந்தி அகற்ற  ஆசை !
          வரும்துன்பம் போக்கும்நூல் வடிக்க ஆசை !

இன்றமிழை  உலகெங்கும்  பரப்ப ஆசை !
        இயன்றவரைப் பிறமொழியைப் பயில ஆசை !
நன்மைதரும் இயற்கையினைக்  காக்க ஆசை
        நாடெங்கும்  மரம்வளர்த்துப் பார்க்க ஆசை !
அன்பினாலே அகிலத்தை ஆள   ஆசை !
        அடிமையெனும் சொல்லகற்றி மீள  ஆசை !
தன்மானத் தமிழரினம் காக்க ஆசை !
        தமிழீழம் பெற்றுலகில் பார்க்க ஆசை !

பெண்ணினத்தின் பாதுகாப்பை உயர்த்த ஆசை !
          பேச்சுரிமைச் சட்டத்தைப் பேண  ஆசை !
மண்ணிலுள்ள உயிரினத்தைக் காக்க ஆசை !
           மதவெறியைச்  சுயநலத்தைப் போக்க ஆசை !
 எண்ணம்போல் விலைவாசி  குறைக்க   ஆசை !
           இறப்பளிக்கும் கலப்படத்தை ஒழிக்க ஆசை !
கண்ணிழந்த சமூகத்தைத் திருத்த  ஆசை !
         கடவுளுண்டு என்றுமிங்கே  உணர்த்த ஆசை !

கல்விதானம் செய்துநாட்டைக்  காக்க ஆசை
       கவிஞரெனும் பட்டத்தை ஏற்க ஆசை !
இல்லாதார் படும்துயரைப் போக்க ஆசை
        இயன்றவரை விவசாயம் செய்ய  ஆசை !
நல்லோரை அரசியலில் இருத்த ஆசை !
        நஞ்சாகும்  இலஞ்சத்தை ஒழிக்க ஆசை !
உல்லாசப் பறவைகளைக் காண   ஆசை
       உழைப்பாளி  உயர்வுதனைப் பேண ஆசை !

உதவுகின்ற கரங்களோடு  இணைய  ஆசை
        ஊரெங்கும் ஊனமுற்றோர்க் குதவ ஆசை !
விதவைக்கும் மறுவாழ்க்கை  அளிக்க ஆசை !
        விரும்பாத சடங்குகளை விலக்க ஆசை !
பதவிவெறி பாலியல்நோய் தடுக்க ஆசை !
         பாரெங்கும் யுத்தத்தை ஒழிக்க   ஆசை !
முதலமைச்சர் எனச்சிலநாள் இருக்க ஆசை !
         முடிந்தவரை நினைத்தபலன் அளிக்க ஆசை !
       
மண்மீது புனிதர்களைக் காண ஆசை !
          மறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை !
புண்பட்ட உள்ளங்களைத் தேற்ற ஆசை !
          புன்னகையைத் தந்துணர்வை  மாற்ற ஆசை !
விண்ணாளும் தெய்வத்தைப் போற்ற ஆசை !
          விடியலையே வேண்டிவிளக் கேற்ற ஆசை !
என்னாசை அத்தனையும் இங்கே தீர
        என்னவழி என்றிங்கே இயம்பு தாயே ?..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/22/2015

ஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா !


                                     

ஆழ்கடல் தனிலே அந்த
    அவலையின் குரலைக் கேட்டேன் !
ஊழ்வினைப் பயனாய் எண்ணி 
    உலகமே வெறுக்கக் கண்டேன் !
வாழ்வினை அளிக்க வல்ல
     வசந்தமும் விலகிச் செல்ல
மூழ்கிடும்  திருநா டெம்மின்
     முகவரி என்றார் அம்மா !

பொன்னென விளைந்த தேசம்
    பொலிவினை இழக்க நாளும் 
இன்னலைத் தொடுத்தார் அங்கே 
     இதயமும் மச்சுப் போக !
அன்னவர் செயலைக் கண்டே  
     அடிமைகள் விழித்த தாலே 
வன்முறை பொலிந்தே  இன்றும் 
     வாழ்வினைப்  பொசுக்கு தம்மா !

கற்றவர் நிறைந்த பாரில்  
    காத்திட ஒருவர் இன்றி 
குற்றமே பொலிந்து நம்மின் 
    குரல்வளை நசுக்க லாமோ ?.
வற்றலாய்த்  தொங்கும் மக்கள் 
    வாழ்வினைக் கண்டும் எம்மைப் 
பெற்றவள் விட்ட கண்ணீர் 
     பெருங்கடல் ஆன தம்மா !

செம்மொழித்  தமிழைக் கற்றுச் 
     செழிப்புடன் வாழ்ந்த மக்கள் 
அம்மண மாக வீழ்ந்தார் 
     ஆருயிர் துடிக்க மண்ணில் !
எண்ணிலா உயிரின் ஓலம் 
      இன்றுமே கேக்கு தென்றால் 
புண்ணிலே வேலைப் பாச்சும் 
      புத்திதான் மாறு மோசொல் ?..

பன்மலர்ச் சோலை நீயும் 
      பாரினில் நீதி காக்க 
வன்முறை அழித்துச் சென்றாய் 
      வாழ்வினில் என்ன கண்டாய் !
உன்னையே அழித்து மக்கள் 
      ஊனினை வளர்க்க நாளும் 
இன்னலே விளைந்த திங்கே  
     இயற்கையே காணும் அம்மா !

பட்டது சொன்னால் போதும்   
    பாருடன் உள்ளம் மோதும் ! 
கெட்டவர் குடியை வெல்லக்  
     கேடுகள் விளையும் மெல்ல !
சட்டென மறையத் துன்பம் 
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
கட்டளை இட்டுச் சும்மா  
    காத்திடு இயற்கை அம்மா ! 

                                                                


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/30/2015

வாழிய வாழிய பல்லாண்டு !

                                               


வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை  
எண்ணம்போல் பாடவந்தோம்  இன்றிங்கே  !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே !  உன்னால்                            
நிறைகுடம்  ஆனதெம்  வாழ்வு !

செந்தமிழ் கற்றுநாம்  சீருடன் வாழ்ந்திடவே   
வந்தனை செய்கின்ற  வள்ளலே !-கந்தன் 
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு 
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !

பொன்விழா காணுபுகழ்   பாரதி தாசனே !
உன்னுயிரை  ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக் 
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும்  புகழ்!

நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன்  !
சொல்லறம் காத்திடும் தூயவன் !-  வல்ல 
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !

நாடிக் கொடுத்திடும்  நன்மையை எண்ணியே  
தேடிநாம் வந்தோம்  செளுங்கவிகள்  !-பாடிப் 
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும் 
உரம்நீயே  எங்கள் உயிர்க்கு!

                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.