4/17/2017

நிலாக்கால இரவுகள்



மரபுக் கவிதை எண்சீர் விருத்தம் 
---------------------------------------------------

அகராதி முதற்கொண்டு தேடிப் பார்த்தேன் 
......அடியாத்தி சொல்லத்தான் வார்த்தை இல்லை!
 பகவானின் கற்பனைக்கோர் எல்லை உண்டோ!
......பார்போற்றும் பேரழகை மண்ணில் கண்டேன்!
ஜெகன்மாதா பெற்றெடுத்த பிள்ளைச் செல்வம் 
......ஜெகத்தினையே சுற்றிவரும் காட்சி போலும் 
சுகமான சிந்தனைகள் இங்கே தோன்றும்!
......சுழல்கின்ற நிலாக்காலம் நெஞ்சுள் வாழும்!

இனிதான காலமென எண்ணும்   காலம் 
......இரவெல்லாம் நிலவோடு வாழும்  காலம்!
தனிமைக்குள் நுழைந்தின்பம் காணச் சொல்லும் 
.......தள்ளாடும் வயதினிலும் ஆசை  கொல்லும்!
கனியொத்த சுவைநல்கும் எண்ணம்  தோன்றும் 
.......கண்ணதாசன் நினைவலைகள் நெஞ்சுள் நீளும்!
பனிபோல துயரெல்லாம் மாய மாகும்!
.......படர்ந்திருக்கும் பேரழகில் பார்வை சொக்கும்!


வெண்ணிலவு சுற்றிவரும் வீதி எங்கும் 
......விளையாடித் திரிந்தோமே அந்தக் காலம்!
எண்ணற்ற நினைவுகளைச் சொல்லச் சொல்ல 
......ஏக்கம்தான் விழைகிறது  ஏழை நெஞ்சில்!
கண்காணாத் தேசத்தில் இன்றெம் மக்கள் 
......காணுகின்ற காட்சியெல்லாம் வேறொன் றாகும்!
மண்மீது இத்துயரை மாய்ப தாரோ!
......மறுபடியும் நிலவினைநாம் ரசிக்க  வேண்டும்!

(கவிக்களம் -11 கவிதைப்பூங்கா போட்டிக்கான கவிதை) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

  1. அக்காவ், நம்ம ஊடு திறந்தாச்சு. ஒழுங்கா வந்து சேரு. வெலாசம் தெரியுமில்ல

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........