9/24/2015

பொங்கி எழு தமிழா !




பொங்கி எழு தமிழா !
                               
வருகின்ற துயரனைத்தும் விலகி ஓட
    வறுமையிலும் ஒற்றுமையைப் பேணல்  வேண்டும் !
தருமநெறி  காக்கின்ற செயலைச் செய்து
     தமிழர்நாம்  தமிழராக வாழ்தல்  வேண்டும்!
பெருமையுடன் தாய்மொழியைப் பேணல்  வேண்டும்
     பெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்
இருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்
     எம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் !

கருமமதைக்   கண்ணாகக்  கொள்ள   வேண்டும்!
     களவின்றிப் பொய்யின்றி வாழ்தல்   வேண்டும் !
உருகாதோர்  மனமுருகச் செய்ய வேண்டும்
     உரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் !
அரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்
     அறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் !
விரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி
      வீறுகொண்டே  எவருமிங்கு  வைக்க வேண்டும் !

நடையாலும் உடையாலும் தமிழர் பண்பை
      நாட்டமுடன்  காத்துநிதம் செல்ல வேண்டும் !
மடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க
     மனமொத்துப்   பணியாற்றிச் செல்ல வேண்டும் !
அடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்
      அடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்
தடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்
       தரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே !

                                                                   
                                                      
இப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’   மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.


வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை. 


இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் 

வெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி

வராது என்றும் உறுதி அளிக்கின்றேன் !

இப்படிக்கு 

உண்மையுள்ள 

அம்பாளடியாள் 

நன்றி .

                                                        



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2015

மரண ஓலம் கேட்கிறதே !!


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன?.. இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன?..
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....


                                              (மரண ஓலம் கேட்கிறதே....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2015

ஒன்றில் நான்கு!



                                                                 
வண்ணக் கவிகள் வழங்கு!

ஒன்றில் நான்கு!


பஃறொடை வெண்பா!

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத்  தமிழணங்கே! ஈடில்லாப் பேரழகே !
துன்பம் துடைத்துத் துணிவூட்டி- என்றென்றும்
வண்ணக் கவிகள் வழங்கு !

நேரிசை வெண்பா   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
இன்பத் தமிழணங்கே !ஈடிலாப் பேரழகே !
வண்ணக் கவிகள் வழங்கு !

சிந்தியல் நேரிசை வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
கண்ணே! கனிமொழியே! கற்கண்டே !-வெண்ணிலவே!
வண்ணக் கவிகள் வழங்கு !

குறள் வெண்பா!   

எண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் !
வண்ணக் கவிகள் வழங்கு !

இலக்கணக் குறிப்பு !  
பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க 
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை  வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !

                                                                             

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/02/2015

பாவலர் பட்டம் !

                                                                               
                                                           

                                        
                                               
நன்றியென்று நானுரைக்க நாள்முழுதும்  போதாதே !
என்றுமிதை நான்மறவேன் என்குருவே !-கன்னல்
கவிபுனையும் ஆற்றலினைக்  கற்றிடச் செய்து 
புவிபோற்றச் சேர்த்தாய் புகழ் !

எண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்  
             இனிக்கும் நெஞ்சம் !
மண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்
             மகிழ்து  ஏற்றேன் !
கண்ணான என்குருவே காரணம்நீ  இன்றிதனைக்
            கைகள் ஏந்த!
விண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன்  பாதத்தில்
            விரைந்தே  வாழ்த்து !




அன்பு உள்ளங்களே !
வான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார் 
நான்மகிழத் தந்திட்டார் நற்பட்டம்  !-மீன்போல்
எனதுள்ளம் நீந்துதே! இன்றிதனைக் கண்டு 
மனதாரச் சொல்லுங்கள் வாழ்த்து !

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து, 
செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் 
பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்  

இணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

அன்பு உள்ளங்களே! இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம்  பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் !இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..

                                  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி !
                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/31/2015

காத்தருள வா தாயே !

                                                           
கருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்    
வரும்துயரும்  ஓடாதோ வாழ்வில் !-இருள்போம்!
உலகத்தின் சக்தியே  உன்னால்தான்  இங்கே
கலகமும் அற்றுப்போம் காண்!


முத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்
இத்தரையில் யாருள்ளார்  இங்குச்சொல்? !-சித்தம்
கலங்குதடி தாயேயெம்   கண்ணீரைப் பார்த்தும்
உலகத்தின் துன்பத்தை ஓட்டு !

ஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே
நீங்காத துன்பமெல்லாம்  நீங்குமடி !-பாங்காய்
அடியெடுத்து வா..தாயே ! அன்றாடம் ஏங்கி
மடியுதே எம்மின் மனம் !

நாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து
ஓடியே  இன்றிங்கே  ஓடானோம் !-கூடி
வருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்!
அருமருந்தே வந்திங்(கு) அருள் !

பொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே !
இல்லார்க்கும் இவ்வுலகில் இன்பம்நீ!-வல்ல
துணையின்றி வாழ்வேது ?  தூயவளே போதும்
அணைபோட்டுக் காத்தே  அருள் !

தாயுன்றன் நல்லருளால்   தாயகத்தை வென்றிடலாம்
பேய்களுமே ஓடிவிடும் பேச்சிழந்து  !-நாய்போல்
அலைகின்ற  இந்நிலைபோம்!   அன்னியரின் ஆட்சி
கலைத்தெம்மைக் காத்தே அருள் !


                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2015

ஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு !



 
நட்போடு சேர்ந்திங்கு நாள்நகரும் போதுதான்
உட்பகையும் தன்னாலே ஓடிவிடும்  !-எட்டி
உதைத்தாலும் மன்னித்து உதவிடுக ! வாழ்வில்
இதைஏற்று வாழ்வீர் இனி !
                                                          
பட்டமரம் இன்பத்தைப் பாரினிலே கண்டதில்லை !
எட்டிநின்றால் வாழ்நாளும் எட்டிபோம் !நட்பும்
இருந்தால்தான் இன்பமிங்கே  !இல்லையெனில் என்றும்
மருந்தேதான் வாழ்வை மற!

கெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்
நட்பேதான்  வந்துதவும் நாட்டமுடன் !-சட்டம்
பலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்
உலகத்தில் நட்பை உணர்த்து !

நட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை !
திட்டித்தான் தீர்த்தாலும் தேனென்பார் !-குட்டிக்
கதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும்  நட்பைச்
சிதைத்துப்பார்! உண்டோ சிறப்பு ?                                         

கண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி
எண்ணாத்தீர்  தப்பாக  எந்நாளும் !-மண்ணில்
பிணமாக நாம்வாழ்ந்தால்   பின்வம்சம் தோற்கும்!
இணைப்பீரே  நட்பை இனி !

பூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு !
வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை !-நோக்கும்
இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2015

பதினான்கு மண்டிலம்

                                                           


                                           கண்கவரும் வெண்ணிலவோ!..
1
கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் !-மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!
தொண்டொளிரும்  ஒண்ணிறை யே !
2
வெண்ணிலவோ!  பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்!-விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவ ரும்!   
3
பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!- பண்மணக்கும் !
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே
கண்கவரும்!  வெண்ணில வோ ! 
4
நுண்மதியோ! தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன்
மண்மணக்கும் விண்மணக்கும் பண்மணக்கும் !-பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே கண்கவரும்!  வெண்ணிலவோ ! பெண்ணொளி யோ!
5
தண்ணிழலோ!  வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும்
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் !- புண்துடைக்கும்! தொண்டொளிரும்  ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! !பெண்ணொளியோ! நுண்மதி யோ!
6
வண்டமிழோ!  கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்!
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்!- தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ!
நுண்மதியோ! தண்ணிழ லோ! 
7
கண்டவுடன் மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்!
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும்!- ஒண்ணிறையே! கண்கவரும்  வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!
தண்ணிழலோ! வண்டமி ழோ!
8
மண்மணக்கும் விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே!- கண்கவரும் வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!
வண்டமிழோ! கண்டவு டன்! 
9
விண்மணக்கும்! பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்!- வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!
கண்டவுடன்! மண்மணக் கும்!
10
பண்மணக்கும்! பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ!- பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக் கும்! 
11
பண்பினிக்கும் ! புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ!- நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்!
விண்மணக்கும்!  பண்மணக் கும் !
12
புண்துடைக்கும்! தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ!- தண்ணிழலோ! வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்!
பண்மணக்கும் ! பண்பினிக் கும் ! 
13
 தொண்டொளிரும் ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ!- வண்டமிழோ! கண்டவுடன்! மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் !
பண்பினிக்கும் !  புண்துடைக் கும்!
14
ஒண்ணிறையே! கண்கவரும்! வெண்ணிலவோ! பெண்ணொளியோ! நுண்மதியோ! தண்ணிழலோ! வண்டமிழோ!- கண்டவுடன்!
மண்மணக்கும்! விண்மணக்கும்! பண்மணக்கும் ! பண்பினிக்கும் !
புண்துடைக்கும்! தொண்டொளி ரும்!

 இலக்கணக் குறிப்பு


பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! மேலும் அறிய இங்கே செல்லவும் http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2015

பதினான்கு மண்டிலம் !

                                         
                                                 என்னுயிரே! பொன்மனமே!

(1)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!-என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்   இன்று !

(2)
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்(கு) உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  !-இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று) என்னுயி ரே!

(3)
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம்  !-அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மன மே!

(4)
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம்!  அன்னையுன்றன்  !-புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) ! என்னுயிரே !
பொன்மனமே  இன்னருள் செய் !

(5)
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்
இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல் !-ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)! என்னுயிரே பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக் கு !

(6)
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம் !
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  !-இன்பமயம்
மின்னிடும்இன்(று) !என்னுயிரே! பொன்மனமே !இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னரு ளால் !

(7)
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  !- மின்னிடும்இன்(று)!
என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மை பல !

(8)
என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) !-என்னுயிரே !
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்
நன்மைபல நின்றொளி ரும் !

(9)
இன்னலும்போம் !  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)  என்னுயிரே !-பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத் தில் !

(10)
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று)! என்னுயிரே !பொன்மனமே !-இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் !
என்னகத்தின்  இன்னலும் போம்  !

(11)
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய்!- இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்! என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன் றன்  !

(12)
ஒன்றதனால் இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே !
பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு!-உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறு வல் !

(13)
இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்!- நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றைத னால் !

(14)
மின்னிடும்இன்(று)  என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல !-நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம் அன்னையுன்றன்  !புன்முறுவல்
ஒன்றைதனால் இன்பம யம் !


இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/17/2015

வெண்பாக் கொத்து !

                                                               
                                                   
                                                   அன்னைநீ எனக்கு !


வெண்பாக் கொத்து !


குறள் வெண்பா 

அன்னைநீ  தெய்வம்  ! அருந்தமிழே! அன்புருவே!
இன்னருள்செய் நாளும் எனக்கு !

நேரிசைச்  சிந்தியல் வெண்பா 

அன்னைநீ பொன்மொழியாம்! அற்புதமாம் இவ்வுலகில்!
உன்னோடு சேர்ந்திருந்தால் உள்ளத்தில்  !-இன்பம்தான்
என்றுமில்லைத் துன்பம்  எனக்கு !


இன்னிசைச்   சிந்தியல் வெண்பா 

அன்னைநீ யேதான்என் ஆதியும் அந்தமும் !
என்னுயிராய் நிற்பவளே என்றுமெனை ஆதரிப்பாய் !
இன்றதுவே போதும் எனக்கு !


நேரிசை வெண்பா 

அன்னைநீ தான்என்றன்  ஆற்றலும் மூச்சாவாய் !
இன்னிசையாய் நின்றொளிரும்  இன்தேனே  !-உன்னருளால்
பொன்னழகு பெற்றிடலாம்  போதுமிந்த வையகத்தில்
என்னயினி  இன்னும் எனக்கு !


இன்னிசை வெண்பா 

அன்னைநீ காவியமாய் அன்புநிறை ஓவியமாய்
என்னுள்ளே தானிருப்பாய் எப்போதும் !உன்னழகைப்
பொன்னழகைக்  கண்ணெனவே போற்றுகின்ற பாட்டருள்வாய்
என்னுயிரே நாளும் எனக்கு!

பஃறொடை வெண்பா

அன்னைநீ முத்தல்லோ! அன்பேந்தி   முன்பிறந்த
பொன்மொழியைப் போற்றியிங்குப்  பாடிடவா ?-என்னாவி
உன்னோடு சங்கமிக்க ஊன்மறக்கும்! தேன்கசக்கும்!
என்னுயிர்க்கு நீதானே இன்பமிங்கே! -கன்னல்பூஞ்
சோலையுனைக் கண்டாலே சொக்கிநிற்கும் என்னுள்ளம்
காலையிளங் கீற்றாய்க்  களிப்பெய்தும்  !-ஆலையிட்ட
செங்கரும்பாய் ஆனேனே  செந்தமிழே நீவேண்டும்!
பொங்குதமிழ்ப்  பாட்டெழுதிப் போகத்தான் -மங்கையிவள்
காத்திருந்தாள்! பூத்திருந்தாள்! காலமெல்லாம் இங்குன்னைப்
பார்த்திருந்தாள்! பாப்புனைய பாருலகில் -கோர்த்துமலர்
தந்திடுவாய் என்றனுயிர்த்  தாகத்தை நான்தணிக்க
இந்நாளாம் பொன்நாள் எனக்கு !

                                                                 


இலக்கண விளக்கம் :

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.


மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னைநீ ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

இவ்வகையான வெண்பாக் கொத்தினைத் தாங்களும்  முறைப்படி பவில்வதற்கு இங்கே சொடுக்கவும் (இது எங்கள் ஆசான் கி .பாரதிதாசன் ஐயாவின் வலைப்பூ )http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post_4.html





தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2015

மும்மண்டில வெண்பா !

                                                 
நான் ஏன் வந்தேன் !

மண்ணில்நான் ஏன்வந்தேன் கண்ணேநீ  பார்என்றேன்
வண்டமிழாள் தேன்தந்தாள் எண்ணமெல்லாம் !-வண்ணமய
மீன்நீந்தக்   கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில்
தேன்சுவையுள் பெண்ணழகு மான் !

ஏன்வந்தேன்   கண்ணேநீ  பார்என்றேன் வண்டமிழாள்
தேன்தந்தாள் எண்ணமெல்லாம் வண்ணமய !-மீன்நீந்தக் 
கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள்
பெண்ணழகு மான்மண்ணில் நான் !

கண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள் தேன்தந்தாள்
எண்ணமெல்லாம் வண்ணமய மீன்நீந்தக்  !-கண்டிடுவாய்
வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள் பெண்ணழகு
மான்மண்ணில் நான்!ஏன்வந் தேன் !



இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம்     சீர்களை 
முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

இந்த வெண்பாவினை முறைப்படி கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும் !

http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post.html
                                                     

                                           

                                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/02/2015

வெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் !

                                           
                                                   


தூதுபோ பைங்கிளியே  தூயதமிழ் கற்பதனால்
ஏதுதுயர் நம்நாட்டில்  இங்குச்சொல் !-போதும்
பிறமொழியால்  கண்டபயன் ! பீடுடன்  வாழ
அறநெறியே காக்கும்  அரண் !

                                               

அன்னிய நாட்டில் அடைக்கலம் பூண்டபின்
நன்மையே சேருமென்று நாடாதே !இன்னல்
வருமெந்த நாளும்  வளமார் தமிழா !
உருகாமல்  வாழ்வை உணர் !

தஞ்சாவூர்ப்  பொம்மை! தலையாட்டத் தானோசொல்
விஞ்ஞானம் கற்றாய்? விடிவில்லை !- விஞ்சும்
துயர்மட்டும் மேல்நாட்டில்! தூங்கிக் கழித்தால்
உயர்வேது வாழ்வை உணர் !

செம்மொழியால் வந்துற்ற சீர்என்ன எண்ணிப்பார் !
அம்மணமாய் நிற்கத்தான்  ஆணவத்தால் !-தம்மை
மறந்திங்குச் செல்கின்றீர்  மாண்டாலே போதும் !
பறந்தும்போம் வாழ்வின் பயன்!

மேல்நாட்டு மக்களுடன் மேதினியில் வாழ்ந்திடலாம் !
ஆல்போல் உறவுகளும் அங்கெதற்கு?!- தோல்வி 
வருகின்ற போதெல்லாம் வெம்பியழு  வாழ்வில்
தருமநெறி  காக்கும் தலை !

சொன்னாலும் கேளாமல் சொந்தங்கள் பாராமல் 
தன்மானம் குன்றத்தான் தாவுகின்றாய் !-நன்மை 
ஒருபோதும் கிட்டாது! ஓய்வின்றித் துன்பம் 
பெருகத்தான் செய்தாய்  பிழை!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/31/2015

திருப்புகழைப் பாடு மனமே !

                                   
                                           

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் !
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்!-முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர் !

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும் !
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும் !-தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !

செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து !-கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு !
திருப்புகழால் தீரும் துயர் !

கந்தனையும் கண்ணாரக்  கண்டிடலாம்  வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி !- வந்து
திருப்புகழைப் பாடுங்கள்  தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !

பன்னிருகை வேலவனே  பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை  இட்டதனால்  !-அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத்  தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு !

பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு  !
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு  !-நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும்  வழி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/29/2015

கனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் !

                                   




கனவைத்தான் காண்என்றார் அப்துல் கலாமும் !
மனமே இதுபோதும்   மண்ணில் ! - தனமும்   
உயர்கல்விச் சீரும் உனைச்சேரும்! நாளும் 
அயர்வின்றி நற்பணிகள் ஆற்று! 

மண்ணுலகைப் பொன்னுலகாய்  மாற்ற ஆசை !
          மனிதநேயம் கற்பித்து வாழ  ஆசை !
பெண்ணினத்தின் பெருமைதனைப் புகட்ட ஆசை !
          பெரும்துன்பம் தரும்வெறியை விரட்ட ஆசை !
இன்னலுறும் மக்களுக்காய் உழைக்க  ஆசை !
          இருக்கின்ற பொருள்தந்து காக்க ஆசை !
வன்முறையை  அன்பேந்தி அகற்ற  ஆசை !
          வரும்துன்பம் போக்கும்நூல் வடிக்க ஆசை !

இன்றமிழை  உலகெங்கும்  பரப்ப ஆசை !
        இயன்றவரைப் பிறமொழியைப் பயில ஆசை !
நன்மைதரும் இயற்கையினைக்  காக்க ஆசை
        நாடெங்கும்  மரம்வளர்த்துப் பார்க்க ஆசை !
அன்பினாலே அகிலத்தை ஆள   ஆசை !
        அடிமையெனும் சொல்லகற்றி மீள  ஆசை !
தன்மானத் தமிழரினம் காக்க ஆசை !
        தமிழீழம் பெற்றுலகில் பார்க்க ஆசை !

பெண்ணினத்தின் பாதுகாப்பை உயர்த்த ஆசை !
          பேச்சுரிமைச் சட்டத்தைப் பேண  ஆசை !
மண்ணிலுள்ள உயிரினத்தைக் காக்க ஆசை !
           மதவெறியைச்  சுயநலத்தைப் போக்க ஆசை !
 எண்ணம்போல் விலைவாசி  குறைக்க   ஆசை !
           இறப்பளிக்கும் கலப்படத்தை ஒழிக்க ஆசை !
கண்ணிழந்த சமூகத்தைத் திருத்த  ஆசை !
         கடவுளுண்டு என்றுமிங்கே  உணர்த்த ஆசை !

கல்விதானம் செய்துநாட்டைக்  காக்க ஆசை
       கவிஞரெனும் பட்டத்தை ஏற்க ஆசை !
இல்லாதார் படும்துயரைப் போக்க ஆசை
        இயன்றவரை விவசாயம் செய்ய  ஆசை !
நல்லோரை அரசியலில் இருத்த ஆசை !
        நஞ்சாகும்  இலஞ்சத்தை ஒழிக்க ஆசை !
உல்லாசப் பறவைகளைக் காண   ஆசை
       உழைப்பாளி  உயர்வுதனைப் பேண ஆசை !

உதவுகின்ற கரங்களோடு  இணைய  ஆசை
        ஊரெங்கும் ஊனமுற்றோர்க் குதவ ஆசை !
விதவைக்கும் மறுவாழ்க்கை  அளிக்க ஆசை !
        விரும்பாத சடங்குகளை விலக்க ஆசை !
பதவிவெறி பாலியல்நோய் தடுக்க ஆசை !
         பாரெங்கும் யுத்தத்தை ஒழிக்க   ஆசை !
முதலமைச்சர் எனச்சிலநாள் இருக்க ஆசை !
         முடிந்தவரை நினைத்தபலன் அளிக்க ஆசை !
       
மண்மீது புனிதர்களைக் காண ஆசை !
          மறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை !
புண்பட்ட உள்ளங்களைத் தேற்ற ஆசை !
          புன்னகையைத் தந்துணர்வை  மாற்ற ஆசை !
விண்ணாளும் தெய்வத்தைப் போற்ற ஆசை !
          விடியலையே வேண்டிவிளக் கேற்ற ஆசை !
என்னாசை அத்தனையும் இங்கே தீர
        என்னவழி என்றிங்கே இயம்பு தாயே ?..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/22/2015

ஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா !


                                     

ஆழ்கடல் தனிலே அந்த
    அவலையின் குரலைக் கேட்டேன் !
ஊழ்வினைப் பயனாய் எண்ணி 
    உலகமே வெறுக்கக் கண்டேன் !
வாழ்வினை அளிக்க வல்ல
     வசந்தமும் விலகிச் செல்ல
மூழ்கிடும்  திருநா டெம்மின்
     முகவரி என்றார் அம்மா !

பொன்னென விளைந்த தேசம்
    பொலிவினை இழக்க நாளும் 
இன்னலைத் தொடுத்தார் அங்கே 
     இதயமும் மச்சுப் போக !
அன்னவர் செயலைக் கண்டே  
     அடிமைகள் விழித்த தாலே 
வன்முறை பொலிந்தே  இன்றும் 
     வாழ்வினைப்  பொசுக்கு தம்மா !

கற்றவர் நிறைந்த பாரில்  
    காத்திட ஒருவர் இன்றி 
குற்றமே பொலிந்து நம்மின் 
    குரல்வளை நசுக்க லாமோ ?.
வற்றலாய்த்  தொங்கும் மக்கள் 
    வாழ்வினைக் கண்டும் எம்மைப் 
பெற்றவள் விட்ட கண்ணீர் 
     பெருங்கடல் ஆன தம்மா !

செம்மொழித்  தமிழைக் கற்றுச் 
     செழிப்புடன் வாழ்ந்த மக்கள் 
அம்மண மாக வீழ்ந்தார் 
     ஆருயிர் துடிக்க மண்ணில் !
எண்ணிலா உயிரின் ஓலம் 
      இன்றுமே கேக்கு தென்றால் 
புண்ணிலே வேலைப் பாச்சும் 
      புத்திதான் மாறு மோசொல் ?..

பன்மலர்ச் சோலை நீயும் 
      பாரினில் நீதி காக்க 
வன்முறை அழித்துச் சென்றாய் 
      வாழ்வினில் என்ன கண்டாய் !
உன்னையே அழித்து மக்கள் 
      ஊனினை வளர்க்க நாளும் 
இன்னலே விளைந்த திங்கே  
     இயற்கையே காணும் அம்மா !

பட்டது சொன்னால் போதும்   
    பாருடன் உள்ளம் மோதும் ! 
கெட்டவர் குடியை வெல்லக்  
     கேடுகள் விளையும் மெல்ல !
சட்டென மறையத் துன்பம் 
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
கட்டளை இட்டுச் சும்மா  
    காத்திடு இயற்கை அம்மா ! 

                                                                


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/30/2015

வாழிய வாழிய பல்லாண்டு !

                                               


வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை  
எண்ணம்போல் பாடவந்தோம்  இன்றிங்கே  !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே !  உன்னால்                            
நிறைகுடம்  ஆனதெம்  வாழ்வு !

செந்தமிழ் கற்றுநாம்  சீருடன் வாழ்ந்திடவே   
வந்தனை செய்கின்ற  வள்ளலே !-கந்தன் 
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு 
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !

பொன்விழா காணுபுகழ்   பாரதி தாசனே !
உன்னுயிரை  ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக் 
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும்  புகழ்!

நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன்  !
சொல்லறம் காத்திடும் தூயவன் !-  வல்ல 
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !

நாடிக் கொடுத்திடும்  நன்மையை எண்ணியே  
தேடிநாம் வந்தோம்  செளுங்கவிகள்  !-பாடிப் 
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும் 
உரம்நீயே  எங்கள் உயிர்க்கு!

                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/22/2015

இன்னும் தயக்கம் எதற்கு !

                                                       

பெத்தமனம் பித்தென்பார் பிள்ளைமனம் கல்லென்பார் 
எத்தனைதான் சொன்னாலும் ஏறலியே !நித்தம் 
மலைபோல  யுத்தத்தால் மாமனத்தை வாட்டும்
நிலைபோக வேண்டும் நிலத்து !


ஏற்ற இறக்கம் பாராமல்
   என்றும் தயவாய் வாழ்ந்தன்பைத்
தேற்றும் பழக்கம் இல்லாதார்
    தேடிக் கெடுப்பார் நட்பைத்தான் !
வேற்றுக் கிரகம் சென்றாலும்
    வேத னைமிக  வந்தேகும்
மாற்றம் இதனில் உண்டோசொல்
    மானம் பெரிதாம்  என்போரே ?...

பாசம் மனத்தில் உண்டானால்  
  படரும் கொடிபோல் நம்வாழ்வு !
வேசம் மிகுந்த  நட்போடு 
   வேண்டாம் இனியும் கொண்டாட்டம் !
நாசம் இழைப்பர் வேண்டாதார்
    நாளும்  இதையே  காண்கின்றோம்!
வாசம் மிகுந்த பூப்போல
    வாழும் உறவே கேட்டுக்கொள் !

உள்ளம் மகிழ்வில் திண்டாட
    ஊனும் உணர்வைக்  கொண்டாட
வெள்ளம் எனத்தான் பாயாதோ
    வேசம் இழந்த சந்தோசம் !
அள்ளக் குறையா அன்பைத்தான்
    ஆளும் மனிதன் வாழ்கின்றான்!
வள்ளல் இவனை  எப்போதும்
    வாழ்த்த மறந்து போகாதீர் !

கள்ளத் தனத்தால் வாழ்நாளைக்
   காயப் படுத்தும் தீயோரைத்
தள்ளி எவரும்   வைத்தால்தான்
   தம்முள் அமைதி உண்டாகும் !
எள்ளி நகைப்போர் நட்பாலே
   என்றும் அமைதி கிட்டாதே !
முள்ளில் விழுந்த சேலைபோல்
    முற்றுப் பெறுமே இவ்வாழ்க்கை !

அன்பைப் பொழிந்து எந்நாளும்
    ஆன்மா மகிழச் செய்திட்டால்
துன்பம் எவர்க்கும் வாராதே
    துப்புத் துலக்கிப் பாருங்கள் !
இன்பம் அதுவே தான்மிஞ்சும்
    என்றும் எதிலும்  தப்பாமல்
நன்மை இதையே நாம்நாட  
   நாடும் செழிக்கும் தன்னாலே !

கன்னல் மொழியின் ஆற்றல்நம்
   கண்போல் இருக்க ஏன்.. துன்பம் ?.
இன்னல் துடைக்கும்  நற்செய்தி
    என்றும் அறியத் தந்துய்வோம் !
அன்னை எமக்குக் கற்பித்த
    அன்பே உலகில் பொன்..என்றே 
தன்னை மறந்து வாழ்வோரும்  
     தம்மால்   திருந்தி வாழட்டும் !

                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2015

பாடு மனமே பாடு !

                             


எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
   போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
     என்றும் மனச்சுமையைப் போக்கும் !
அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் 
     அமுதச் சுவையழகைத் தேக்கும் !

பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்
   ஆடிக் கழித்திடுவாள் தினமே !
நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால்
    நல்ல மருந்திதுதான் மனமே !

காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை
    ஆளும் எமதுயிரை  இதமாய் !
பாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்
     பாசம் வளர்த்திடுமே  பதமாய் !

ஓலைக் குடிசையிலே  ஒடுங்கி வாழ்கையிலும்
     ஊக்கம் அளித்த....தமிழ்ப்  பாடல் !
வேலை தரும்சுமையை  விரட்டி அடித்திடுமே 
    விந்தை விழைந்த.. தமிழ்க் கூடல் !

காடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும் 
    காந்தம் எனஇழுத்து ஓடும் !
பாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே
    பாரில் இல்லையொரு ஈடும் !

சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச் 
     சுற்றி அலைந்தகதை போதும் !
வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
      வந்து உதிக்கஇன்பம் மோதும் !

பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் 
   பாடி வைத்தகவி கோடி !
அற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்
   ஆன்மா மகிழ்ந்திருக்கும்  பாடி ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/08/2015

என்றும் இந்தக் குணமிருந்தால் நீயும் மகாத்மாவே !

                                                                   
வலிமையுள்ள மனிதனாக
வாழ்ந்து காட்ட வேண்டும் !
எளிமையான வாழ்வுக்கே
இடமளிக்க வேண்டும்!

தனிமையிலும் இனிமை காண
தன்னடக்கம் வேண்டும் !
தரணியெல்லாம் போற்றும் வகை
தயவு நெஞ்சில் வேண்டும்!

கலியுகத்தின் போக்கை மாற்ற
கருணை தம்முள் வேண்டும் !
கடவுள் என்றும் கொண்டாட
கடமை உணர்தல் வேண்டும் !

பழியுணர்வை போக்க வல்ல
பாசம் இங்கே வேண்டும் !
பகைவரையும் மன்னிக்கும்
பக்குவமும் வேண்டும் !

மனித குலம் உயிரினத்தை
மதித்து வாழ வேண்டும்!
மரணம் வரும் என்ற போதும்
மனதில் உறுதி வேண்டும் !

எவர் கொடுமை செய்தாலும்
எதிர்த்து நிற்க வேண்டும் !
எதிரிக்கும் வாழ்வளிக்கும்
இரக்க குணம் வேண்டும் !

கருவினிலே சுயநலத்தைக்
கலைத்து விட வேண்டும் !
கடவுள் பக்தி நேசமுடன்
கருத்துரைக்க வேண்டும் !

பொதுநலமாய் சிந்திக்கும்
பொறுப்பு மிக வேண்டும் !
பொன்போன்ற மனம் வாழ
பொறுமை காத்தல் வேண்டும் !

                                                                        
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/01/2015

வித்தியாவின் படுகொலைக்கு தகுந்த நீதி கிட்ட வேண்டும் !

                                                             


கண்ணீரில் சிக்குண்டு கல்நெஞ்சும் ஏங்குதடி !
பெண்ணே உனைப்பிரிந்து பேச்சிளந்தோம் !-மண்ணில் 
அடைகாத்து வைத்திருப்போம் உன்நினைவை !அன்பே 
விடைபெற்றுச் சென்றாய்  விரைந்து ! 

பெண்ணேநாம்  ஏன்பிறந்தோம் பேசாமல் மாண்டிடலாம் !
கண்கெட்ட பூமியிலே  காவலேது !-புண்பட்ட 
நெஞ்சத்தின் ஓலத்தைக் கேளம்மா! நீயுமிங்கே 
வஞ்சகரால் வீழ்ந்ததுதான் வாழ்வு ! 

ஓயாமல் இத்துன்பம் ஓடிவந்து கொல்லுதடி 
தாயேநீ போனவழி தாங்காமல்  !சேயை
வெறிநாய்கள் சேர்ந்தெங்கும் வீணாக்கும் காட்சி       
அறிவாய்நீ அன்றாடம் தான்!

பாலகரும் கன்னியரும் பாவிகளின் காமத்தால் 
காலமெல்லாம் சாகத்தான் காண்கின்றோம் !-கோல 
மயிலேநீ கொண்டதுயர் மாளாது !எண்ணி 
உயிரும் உருகும் உடைந்து !
                                                                        


புண்பட்டுப் போகுதடா புத்திகெட்ட மானிடனே !
பெண்பட்ட பாடறிந்தும் பேசாயோ !-கண்ணின் 
மணிகளைத்தாம்  நாமிழந்தோம் மண்மீது இன்னும்  
துணிவிழக்கச் செய்வதேன் சொல் ?...

பொல்லாக் கொடியவனே !பொய்யால் நிறைந்தவனே !  
கொல்லத்தான்  பெண்ணினமா கூறடா !-வல்ல  
துணையின்றி  வாடுகின்றோம் இன்னும் தொடரும் 
இணையில்லாத்  துன்பம் எமக்கு !

பெற்றமனம் வாடத்தான்  பெண்ணினத்தைக் கொன்றிங்கே 
அற்பசுகம் தேடாதீர் ஆணவமாய்  !-பற்றி 
எரியும்நல் உள்ளத்தின் சாபத்தீ  கொல்லும்!
கரியாகும் இவ்வுலகு காண்! 

அன்னைதான் ஈன்றெடுத்தாள் ஆணுன்னை  வாழவைத்தாள் 
இன்னும்ஏன் சந்தேகம் இவ்வுலகில் !-உன்னை  
உயிரென ஓம்பும் உயர்பெண்ணை ஏனோ 
பயமுற வைத்தீர் பதைத்து !

பத்துப்பேர்  சேர்ந்திங்கே பாவத்தில் பங்கேற்றால் 
எத்தனைதுன் பம்அவள்  பட்டிருப்பாள்  !-செத்துப் 
பிழைக்குதடா பாவிகளே! பிஞ்சவளைக் கொன்றும்  
இழைத்தீர் கொடுமை இணைந்து !

தீமூட்டிக் கொல்லத்தான் தீராத வேட்கையடா!
நீர்மல்க  நிற்கின்றோம் நிர்க்கெதியாய்!- வீதி 
வழியோரம் வந்துப்பார் வீணரே! உம்மைப் 
பழிவாங்கும் எம்மின் படை !

பெண்ஒன்றைக் காணவில்லை போய்த்தேடும் முன்பேஅக்    
கண்மணியாள் மாண்டிருப்பாள் காமுகரால்!- மண்ணில் 
இதுபோல எத்தனையோ எம்வாழ்வில் கண்டோம்!
எதுவேண்டும் இன்னும்  இயம்பு ?..

கொல்லாமல் விட்டதே நல்லாட்சி தான்என்றால் 
எல்லாமே இங்குப்பொய் என்றறிவோம் !-வல்ல 
அரசாட்சி  உண்டானால்  அன்றேதம் ஆவி 
பரலோகம் போகும் பறந்து !

                                                                          
                                                     

பெண்ணுக்குக் காவல்யார் பேசுங்கள் மூடரே!
மண்மீது  பெண்கண்டார் மாத்துயரம்   !-எண்ணி 
இருக்கின்றோம் இன்றிந்த ஏக்கம்தான் தீர 
வரும்என்றே  பெண்களுக்கும் வாழ்வு !

                                                             
                                                 
                                                                     ஐயகோ ....
சீர்கெட்ட இவ்வுலகைச் சீர்திருத்த யார்வருவார் !
நீர்மட்டம் ஒங்குதிங்கே  நித்தமும்தான் !-தீர்வின்றி
எம்வாழ்வில் வந்தேகும் இன்னலுக்கோர் நல்வழியைப்  
பெம்மானே தா ..தா ..பிறந்து !
                                                                      
                                                                        


புங்குடுதீவைப் பிறப்பிடமாக் கொண்ட எங்கள்  அருமைச் சகோதரி மாணவி     
வித்தியாவின் படுகொலை குறித்தும் இன்னும் காணாமல் போகும் எத்தனையோ வித்தியாக்கள் குறித்தும்  நீதித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்¨! அதுவரை பெண்ணினத்தின் விடிவுக்காய் உலகம் முழுவதும் உள்ள எம் மக்கள் ஓயாது குரல்கொடுக்க வேண்டும் !பெண்களை கண்களாக மதிக்காது போனாலும் பெண்களை பெண்களாக வாழ விடுங்கள் நாம் போதைப் பொருட்கள் அல்ல !           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.