5/29/2015

மான்விழியே வா அருகே !

                          



அன்னத்தைக் கண்டதும் ஆசைதான் பொங்காதோ ?..
இன்னலே கூடிடும் என்றாலும் !-உன்னை 
அடைவதே  இன்றென்றன்  ஆசையடி! இன்தேன் 
அடையத் தருவாய் அணைத்து !

காதல்தான் வந்திங்கே கண்முன்னே நின்றாட 
மோதல்தான் ஏனடி மோகனமே !-ஆதலால் 
ஆடவன் எண்ணம்போல் அன்பைநீ கொட்டிப்பார் !
தேடலில் கிட்டுமே தேன் !

வண்டுக்குப் பூவோடு வந்ததிந்தச் சொந்தம்தான் 
கண்டுள்ளம் பொங்கட்டும் காவிரிபோல் !-பெண்ணே 
விழியாலே உண்டு விரைந்தோடிச் சென்றால் 
அழியாதே நான்கொண்ட அன்பு !

திண்டாட வைத்ததனால் தீமூட்டிச் செல்லாதே !
பண்பாடு மிக்கநற் பைங்கிளியே !-மண்ணில் 
உனக்கெனவே நான்பிறந்தேன் ஊர்போற்றும் வாழ்வே !
மனக்குழப்பம் விட்டிங்கே வா !

உன்னோடு நானிருக்க உள்ளத்தில் தேன்சுரக்கும் !
என்னை அறியாயோ என்னுயிரே !-முன்பே 
அணைபோட்டு வைத்தும் அடங்காது காதல் !
கணையாழிக் கண்களைக் காண் !

அச்சத்தை விட்டுநல் ஆனந்தம் கொள்வோமே !
இச்சை பெருக இணைவோமே !-பச்சை 
மலையழகும் கூத்தாடும் மானழகும் காண 
சிலையழகே இன்னும் சிரி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/25/2015

தமிழ்! எங்கள் உயிரின் இருப்பு !

                                               

பொன்போன்ற செந்தமிழைப் போற்றுவதே என்கடன்
வன்முறையால் இவ்வெண்ணம் வற்றாதே!- அன்றில்
பறவையான்  பாடாது போனாலும் என்னுள்
உறவாடும் நீயே உயிர்!

சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும்
எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!- நல்ல
கனியுண்ட நாவும்தான் காத்திருக்கும் பாரில்
இனிய தமிழுக்கே(து) ஈடு !

எண்ணம் அலைபாயும் இன்பத்தேன் நீயென்று
வண்ணம் நிறைந்திட  வா..தமிழே !-வெண்பா
வகையறிந்து நான்பாட வேண்டுமிங்கே நாளும்
பகைவிரட்(டு) என்னுள் படர்ந்து !

சொல்லாட்சி மேலோங்கச்  சொந்தங்கள் கூடிவரும்
நல்லாட்சி நீதருவாய்  நாளுமிங்கே !-அல்லல்
இனியேது ?..வாழ்வருளும் ! இன்பத்தேன் பாயும் !
தனித்தமிழால் ஓங்கும் தரம்!

வண்டமிழால்  நாம்வாழும் வாழ்வினிக்கும் செந்தேனை
உண்டதோர் ஆனந்தம் ஊடுருவும் !-அண்டம்
கடந்தெங்குச்  சென்றாலும் கற்றவர்க்(கு) இன்பம்
தொடர்ந்திங்கு நல்கும் சுகம் !

எண்ணற்ற நற்பலனை எந்நாளும் பெற்றிடலாம்
வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
முதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! என்னுள்
புதுமொழி பூப்பாள் பொலிந்து !

                                               
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/30/2015

மே தினமே வா அருகே !

                                             


நாட்டு மக்கள் நலமாய் வாழ
                         நடத்தும் யுத்தத்தில்
கூட்டுச் சேர்ந்து உதவ வேண்டும்
                         குழப்பம் தானின்றி !
காட்டில்  குள்ள நரிக ளோடும் 
                          கடந்த காலத்தில்  
போட்ட யுத்தம் அடைந்த வெற்றி
                        பொலியச்  செய்..நாளே !

கால மெல்லாம் உழைக்கும் மக்கள்
                          கவலை கொள்கின்றார் !
ஆல கால விசத்தைப் போன்றோர்
                           அடக்கி ஆள்கின்றார் !
ஓல மிட்டும்  எமது வம்சம்
                            ஒடுங்கிப் போகாமல்
பாலம் போல இருந்து காப்பாய்
                             படரும்  பொன்நாளே !

பாரில் மக்கள் அடையும் துக்கம்
                          பலதைக் காண்கின்றோம் !
நேரில் நின்று எதிர்த்துக் கேட்டும்
                         நெருப்பைத் தான்தின்றோம்!
தேரில் செல்லும்  பலரும் இங்கே
                          தெளிவாய்க்  கற்றுள்ளார் ! 
ஊரில் உள்ள உழைக்கும் மக்கள்
                           உணர்வைத் தான்கொல்ல !

பஞ்சம் மட்டும் மடிந்தால் போதும்
                                பலத்த சந்தோசம்
நெஞ்சில் வந்து உறையும் மக்கள்
                                நெடுநாள் ஆசைபோல்!
கொஞ்சம் இந்தக் கவலை தீர
                                கொடுத்து வை..நாளே !
அஞ்சும் மக்கள் அவலம் தீர்க்க
                               அருண்ட பொன்நாளே !

குட்டக் குட்ட குனிந்த மக்கள்
                             குலத்தை அந்நாளில்
எட்டுத் திக்கும் நிமிர்ந்து பார்க்க
                              எழுச்சி தந்தாயே !
பொட்டும் பூவும் சுமந்த பெண்போல்
                             பொழுதே நீ..வந்தால்
வெட்டும் கொத்தும் மடிந்து மண்ணில்
                             வெளிச்சம் தோன்றாதோ !

அன்று மக்கள் அவலம் தீர்த்த
                              அழகு நன்நாளே !
இன்று உள்ள நிலைமை கண்டும்
                              இளகு பொன்நாளே !
தொன்று தொட்டு நரக வாழ்வைத்
                              தொடரச்   செய்வோரை
என்றும் போற்றும் இனிய மேய்போல் 
                               எதிர்த்தும் வெல்வோமே !


      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/31/2015

சொந்த மண்ணில் வாழ்வதுபோல் ஒரு சுகம் வருமா !

                                                       


பெற்ற பேறும்  அனைத்தும் இங்கே
                        பெருமை சேர்த்தாலும்
கற்ற கல்வி மனத்தில் தோன்ற
                          களிப்பே   என்றாலும்
உற்ற நல்ல துணைகள் இன்றி
                          உணர்வும்  உய்யாதே
வற்றிப் போன குளத்தில்  மீன்கள்
                          வாழ முடியாதே !

குற்ற மற்ற இனத்தைக் கொன்று
                         குவித்த பாவிக்கும்
சுற்ற முண்டு சுகமும் உண்டு
                          சுழலும் பூமியிலே !
கற்ற வித்தை பகைவர் முன்னே 
                         கலைந்து போனதால்
பெற்ற பேறும் பெருமை யாவும்
                          பெயர்ந்து போயினவே !

சட்டி பானை கழுவி நாளும்
                          சலித்துப் போகின்றோம் !
கெட்டி யான உணவும் இன்றிக்
                            கிழவர் ஆகின்றோம் !
கட்டிக் கொண்ட மனையாள் வந்து
                            கணக்குக் காட்டினால்
வட்டிக் கும்தான் பணத்தை வாங்கி
                            வருத்தம் கொள்கின்றோம் !

நாடு மாறி வருந்தும் மக்கள்
                       நடப்பைக் கேளுங்கள் !
சூடு பட்ட எமது வாழ்வின்
                       சுகத்தைப் பாருங்கள்!
ஓடு கின்றோம் உழைப்பை நாடி
                        ஒழுங்கு சீரற்று !
வாடு கின்றோம் வருந்தி நாளும்
                        வழுக்கை யும்உற்று !

ஊறு காயும் பழைய சோறும்
                           உண்ட காலத்தில் 
வேறு எந்தத் துயரும் இன்றி
                          வெளிச்சம் கண்டோமே !
நாறு கின்றோம் அகதி என்ற
                             நரக வாழ்வெய்தி
வேறு என்ன சுகத்தைக் கண்டோம்
                             வெறுப்பும் மேலோங்க !

அங்க மெல்லாம் துடிக்கு திங்கே
                            அகதி என்செய்வோம் !
தங்க வந்த இடத்தில் நாளும்
                             தவிப்பில் மூள்கின்றோம் !
எங்கள் பூமி எமக்குத் தந்த
                              எதுவும் சொர்க்கம்தான் !
அங்கே உள்ள கொடுமை மாண்டால்
                               அழுகை நிற்கும்தான் !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2015

போருக்கோர் முற்றுப் புள்ளி போட்டு விடு இக்கணமே !

                                                           
   

நஞ்சை எவர்தான் வார்த்தாரோ
    நாச தருணம் பார்த்தங்கே!
நெஞ்சைப் பிளக்கும் அச்..சாவும்
    நேர்ந்த தெதற்குச் சொல்தாயே  ?
வஞ்ச கருக்கோர் பாடத்தை
     வாழ்வில் உணர்த்த மாட்டாயோ 
கொஞ்சும் மழலைச் செல்வங்கள்
      கொண்ட துயரம் கண்டிங்கே !

போரும் முடிஞ்சு போயாச்சாம்
    பொல்லா தவர்தான் சொல்கின்றார் !
நேரும் கொடுமை கண்டாயோ 
     நேற்று வரை நீ  எம்வாழ்வில்!
கோரும் உரிமை  கிட்டாமல்
     கோலம் கலைந்து நிற்கின்றோம் !
சோரும் மனத்தில் மென்மேலும்
      சோகம் விளைத்தார்  ஏன் ..தாயே ?..

அல்லும் பகலும் அச்சத்தால்
     ஆன்மா உறைந்த போதெல்லாம்
கொல்லும் வரையெம் உற்றாரைக் 
      கொன்று குவித்தார் போதாதா !
வெல்லும் வகையில் வீரத்தை
      வேங்கை உணர்த்தி வந்தாலும்
நல்ல தெதையும் நாடாதார்
        நாசம் புரிந்து விட்டாரே !

பொல்லா தவரின் ஆசைபோல்
    போரில் இணக்கம் கண்டாச்சு !
எல்லாம் முடிந்த பின்னாலும்
     எம்மை வதைப்ப தேன்தாயே ?..
நல்லோர் உலகில் வாழத்தான்
      நல்ல தருணம் கிட்டாதா ?...
அல்லல் மிகுந்த வாழ்நாளை
      அன்பால் விலகச் செய்தாயே !

சுற்றம் இழந்து நாம்வாழச் 
    சூழ்ச்சி இனியும் மேற்கொள்வார்
கற்ற தெதையும் வாழ்நாளில்
     கருத்தில் கொண்டு பயணிப்போம் !
பெற்ற துயரம் இங்கேதான்  
      பெருகா வண்ணம் அருள்செய்வாய் 
உற்ற துணையாய் எமைக்காக்க 
      உள்ளம்  உருக அழைக்கின்றோம் !

                                                              


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2015

தனிமை என்ற கொடுமை அது ஒன்றே போதும் !


                             


பொட்டு  இழந்த பெண்முன்னே
    போகச் சகுனம் பார்ப்போரே
தொட்டுத் தமது  நெஞ்சத்தில்
    தோன்றும் கருத்தைச் சொல்லுங்கள்!
பட்டும் படாமல் நாமிங்கே
     பாடம் நடத்திச் செல்கின்றோம்
கட்டும் பலரின் தாலிக்கும்
     காடே  உறையா வாழ்வுண்டோ ?...

கண்ணை இமைபோல் காத்தாலும் 
    காலன் முடிப்பான் வாழ்நாளை !
பெண்ணிற் கிதனால் துன்பம்தான் 
     பேசத் தெரிந்த பொம்மைகளே !
உண்மை உணர்ந்து பேசுங்கள் 
     உள்ளம் அதனைக் கேட்டிங்கே 
வெண்மை தூய்மை நிறமன்றோ  
     வேறு உளதோ சொல்லுங்கள் ?..

 கட்டில் சுகமும் இல்லாமல்
    காவல் அதுவும் இல்லாமல்
முட்டி வலிக்க எந்நாளும்
     முத்துக் குளிக்கச் செல்கின்றாள்!
தொட்டில் அவளும் இட்டாள்பார்
     தோல்வி இனியும் வாராமல்
கொட்டிக் கொடுக்கத் தான்வேண்டும்
     கொள்கை எதுவும் மாறாமல் !

தாலி இழந்தாற் போலிங்கே 
   தன்மை எதுவும் மாறாது !
காலி வயிறும் கேட்காது 
    காசும் பணமும் பூக்காது !
வேலி பலதைத் தாண்டித்தான் 
    வேறு வழிகள் இல்லாமல் 
கூலி இவளும்  செல்கின்றாள் 
   குஞ்சைத் தனியாய்க் காக்கின்றாள் !

அம்மா இவளின் ஆற்றல்முன்
    ஆறும் கடலும் தோற்றுப்போம் !
இம்மா நிலத்தின் தெய்வத்தை 
     என்றும் குறைவாய்  எண்ணாதீர் !
சும்மா நடந்து சென்றாலே 
      சூடு தணியும் மண்மீது !
எம்மாம் பெரிய வானுக்கும் 
       என்றும் குளிர்ச்சி  அம்மாதான் ! 

பெண்ணின் மனத்தைப் பூவென்றோம் 
    பேதை அவளைத் தான்கொன்றோம் 
மண்ணில் இதைத்தான் இப்போது  
     மாற்ற முனைந்தோம் தப்பேது ?...
கண்ணைத் திறந்து பாருங்கள் 
      கண்ணீர்க் கதையைக் கேளுங்கள் 
எண்ணெய் இழந்த தீபத்தை 
       என்றும் எரியச் செய்யுங்கள் !

தாலிக் கொடியும் பொட்டும்நாம் 
     தந்து மகிழ்ந்தோம் பெண்ணுக்கு
வேலி இதுதான் என்றெண்ணி 
     வேறு  உளதோ காரணங்கள் ?..
போலிச் சடங்கும்  ஒன்றாலே 
      போதும் விழைந்த சாபங்கள் !
காலில் விழுந்தும் கேட்கின்றோம் 
      காக்க விரைந்து வாருங்கள் !  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/12/2015

முடங்கிக் கிடந்தாள் அது அந்தக் காலம் !




காலம் கடந்து பெண்ணிங்கே 
  காற்றில் மிதந்து செல்கின்றாள் !
ஏலம்  விடுவோர் பின்வாங்க  
    என்றும் புதுமை காட்டித்தான் !
கோல விழியாள்  தான்கொண்ட 
    கொள்கை எதுவும் மாறாமல் 
பாலம் அமைத்துச் செல்கின்றாள்  
    பார்ப்போர் உள்ளமும்  கொண்டாட!

பெண்ணை அடிமை என்றோரும் 
     பெருமை கொள்ளும் பொற்காலம்
மண்ணில் தவழக் காண்கின்றோம்
     மாற்றம் இதுவே  போதாதா?.. 
கண்ணை மதிக்கத் தான்வேண்டும் 
     காலம் கடந்த பின்னாலும் 
எண்ணக் கருத்தில் மாற்றத்தை 
     என்றும் விரும்பார்  மாறுகவே !

சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச் 
   சார்பாய் எதுவும் இல்லாமல் !
திட்டம் இதனைத் தான்வென்று 
    தீபோல் எழுந்து நிற்கின்றாள் 
பட்டப் படிப்பால் எப்போதும் 
     பாரை வியக்க வைக்கும்பெண் !
முட்டப் பகைமை கொள்ளாதீர் 
     மூடர் எனவும்  நில்லாதீர் !

ஆட்டம் இழக்கச் செய்திடுவாள்    
     ஆளும் திறமை தான்கொண்டு !
பாட்டன் அவர்தம் முப்பாட்டன் 
      பாரில் எவரும் காணாப்பெண் ! 
கூட்டம் நடத்தி மானத்தைக் 
     கூவி இனிமேல் விற்போர்க்கும்  
சாட்டை அடிதான் தப்பாது !
      சற்றே இதனைச் சிந்திப்பீர் !

நாட்ட முடனே பொய்யின்றி 
   நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
சூட்டப் பெயர்கள் தேடாதீர்
    சூடு சுரணை அற்றோரே !
வாட்டும் துயர்கள் போக்காமல்
    வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும் 
வேட்டும்  ஒருநாள் வைப்பாள்பார்
   வெல்லும் பெண்மை இவ்வுலகை !..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/06/2015

காக்கும் சக்தியே எமைக் காண ஓடிவா ...

                                                                           

பொன்னை அளித்தோம் ஏனிங்கே 
    பொல்லா தவரின் ஆசைக்குத்
தன்னைக் கொடுத்தும் தாழ்கின்றாள்
     தாய்மை நிறைந்த பெண்என்றும்! 
நன்மை எதையும் காணோமே
     நாளும் கொடுமை மேலோங்க
உன்னைத் துதித்தோம் பாரம்மா!
     ஊழை அகற்ற வா......அம்மா !

அல்லும் பகலும் துன்பத்தால்
     ஆன்மா துடிக்க லாமோசொல் ?!
கல்லும் கரையும் இந்நேரம்
      காக்க விரைந்து வா ,,தாயே !
நல்லோர் மனம்போல் வாழத்தான் 
     நன்மை அருளும் தெய்வம்நீ 
வல்ல துணையாய் எந்நாளும் 
      வந்திங் கினிமை அருள்வாயே !

கற்றார் எவரும் தம்போக்கில் 
   காலம் கடத்திச் செல்கின்றார் !
உற்றார் உறவினர் கூடத்தாம்  
   சுற்றம் மறந்து வாழ்கின்றார் !
நற்ற வமே..!நீ தானே...எந்  
     நாளும் பொழுதும் காப்பாயே !
அற்ப சுகத்தை உலகெண்ணி  
     அழிதல் அழகோ சொல்..தாயே !

அஞ்சிப் பிழைக்கும் வாழ்நாள்கள்  
     அன்பில் தவழ என்றென்றும்  
நெஞ்சில் துணிவைத் தந்திங்கே 
     நேர்மை வழியைக் காட்டம்மா ! 
பஞ்சம் மறையும் அப்போதே
     பாசம் மிகுந்த தாயுன்னால் 
கொஞ்சும் சலங்கை கூத்தாடும்  
      கோல விழிகள்  பூத்தாடும் !!!!

பெண்ணின் மனத்தைப் பொன்போல 
    போற்ற எவரும் செய்..தாயே !
கண்ணின் மணியே கற்பகமே 
     காவல் எமக்கு நீ..தானே !
எண்ணும் பொழுதே இன்பத்தை 
     என்றும் அருளும் அன்னைபோல் 
மண்ணில் எவரும் உண்டோ ..சொல்! 
      மாத வமே!..வா   எம்..தாயே ! 
      

      
 (படம் இணையத்தில் இருந்து
பெறப்பட்டது .நன்றி )                    

                                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/13/2015

வா தாயே !


அன்னைத்  தமிழேநல் ஆரமுதே  எந்நாளும் 
உன்னைத் தொழுதேன்  உயிராக !-என்னைத் 
துயர்கள்தீண்  டாதினியும்  தூயவளே காப்பாய்!
அயர்வென்றும்  சாராவண் ணம்! 

அன்னைத் தமிழே ஆன்மாவே
   ஆசை பெருக நின்றேனே 
என்னைப் புவிமேல் தாங்காயோ 
     என்றும் உணர்வு குன்றாமல்!
கன்னல் மொழியைக் கற்றால்தான்
    காலம் இனிக்கும் எந்நாளும்!
இன்னல் இனியும் வேண்டாமே
     இன்பத் தமிழே வா.. தாயே !

வஞ்சிக் கொடியென் ஏக்கத்தை
    வந்து தணிக்க மாட்டாயோ !
கொஞ்சிக் குலாவும் பொற்காலம்
    கொண்டு  வரவும் மாட்டாயோ!
நெஞ்சில் இடரை  நான்தாங்கி
    நேற்று வரையும் வெந்தேனே !
பஞ்சில் நெருப்பைப் போல்பற்றி
    பாசம் விளைத்து வா..தாயே !

பாடும் பறவை நீயின்றி
    பாதை தவறிப் போகாதோ !
நாடும் செழிக்க வா...தாயே
    நல்ல பொருளைத் தா..தாயே!
வாடும் மனத்தின் வாட்டத்தை 
    வந்து தணிப்பாய் எப்போதும்  
தேடும் சுகமும் நீயன்றோ !
      தேடி எனைநீ வா தாயே !
                                                 
                                                                 
    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/23/2015

அன்னையின் நல்லாசி அனைவர்க்கும் கிட்டட்டும் !

                                           

மண்ணிலே பிறந்து விட்டோம் 
   மரங்களாய் வளர்ந்தும் விட்டோம் !
எண்ணிய தெதுவும் இங்கே 
   எளிதிலே கிடைப்ப தெங்கே !
கண்ணியம் இழந்த வாழ்வைக் 
   கனவிலும் நினையாப் பண்பு 
உண்மையில் உயர்வைத் தந்து 
   உருப்பட வழிகள் செய்யும் !

தன்னிலை மறந்து வாழும் 
    தரித்திர குணத்தை நீக்கி 
நன்னிலை அடைந்தால் மக்கள்  
    நலமுடன்  திகழ்வார் நாளும் !
அன்னையின் அருளைப் பெற்று 
    அழகுடன் திகழத் தானே 
நன்னெறி வளர்த்தார்  இங்கே 
    நழுவிடல்  முறையோ சொல்வீர் !

காத்திட வருவாள் அன்னை 
   கருணையின் உருவம் தாங்கி !
நேத்திகள் பலவும் செய்தோர் 
    நெகிழ்கிறார் அறிவீர் இன்றும் !
கூத்துகள் களைகட் டத்தான் 
    குவிகிறார் தினமும் பக்தர் !
பாத்திதை உணர்தல் நன்றே 
    பலவகைத் துயரும் நீங்க !  

                                                  


                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/22/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து வளர்கவே !

                                 

என்னுயிர்த் தமிழே தாயே !
    இணையிலா அழகே !தேனே !
பொன்னுயிர் பெற்று வாழ்ந்த 
    புலவராய் என்னை ஆக்கு !
பன்மணி பூண்ட பெண்ணே !
   பன்மலர்ச் சோலை நீயே !
மின்மணிப் பாக்கள் என்னுள் 
   விளைந்திட வேண்டு கின்றேன் !

செந்தமிழ்ச் சோலை பூத்துச் 
    செழிப்புடன் ஆடக் கண்டேன் !
நந்தமிழ் மேன்மை காத்து 
    நலமெலாம் புரியக் கண்டேன் !
தந்தன தாளம் போட்டுத் 
    தண்டமிழ் மணக்கக் கண்டேன் !
சந்தன மலர்கள் தூவித் 
   தாழ்ந்துநான் வணங்கு கின்றேன் !

சிறப்புற வந்த மாவைச் 
   சேனாதி ராசர் வாழ்க !
திறமுறப் பணிகள் ஆற்றும் 
   சி .சிரீ தரனார் வாழ்க !
மறமுற உணர்வை நல்கும் 
   மாசிலா வீரர் வாழ்க !
அறமொழி தமிழைக் கற்றே 
   அழகுடன் வாழ்வோர் வாழ்க !

                   
                                                                                                                                                                    வண்ணக் கனவு மெய்யாகி 
    வானில் பறக்கக் கண்டோமே !
எண்ணம் முழுதும் இன்பத்தை 
    ஏந்திக் களித்து நின்றோமே !
உண்ண உணவும் தந்தீரே !
    ஊக்கம் அளித்தும் வந்தீரே !
கண்ணாய் விளங்கும் செஞ்சோலை 
   காலம் முழுதும் வாழியவே !

பள்ளிச் சிறுவர் தாம்பெற்ற 
    பாட மதிப்பெண் கண்டங்கே 
அள்ளிக் கொடுத்து லட்சத்தை 
    ஆக்கம் செழிக்கச் செய்தீரே !
துள்ளிக் குதித்தும் வந்திங்கே 
     தொண்டு சிறக்கப் பாடுகின்றோம்
நள்ளி ரவிலே தோன்றுகின்ற 
    நடசத் திரம்போல் வாழியவே !

எங்கள் தலைவன் அந்நாளில் 
   எம்முள் விதைத்த நற்பணியைச் 
சங்கத் தமிழின் மீதாணை 
   சாற்றித் தொடர்ந்தீர் இந்நாளில் !
வங்கக் கடலும் வாழ்த்தத்தான் 
    வந்தங் குதிக்கும் பொற்காலம் !
மங்கா தொளிர எந்நாளும் 
    அன்பில் திளைத்து வாழியவே !

காலம் முழுதும் செஞ்சோலை 
    காக்க விரைந்து வந்தோரே !
ஆலம் விழுதாய் வேரூன்றி 
     ஆற்றும் பணியால் ஓங்குகவே !
சீலம் நிறைந்த நம்நாட்டைச் 
   சீராய் வளர்த்தல் நம்கடனே !
மாலன் திருத்தாள் எழில்எண்ணி 
   மகிழ்ந்து நன்றி உரைக்கின்றேன் !     

                                                                          
                                                             நன்றி வணக்கம்...
                                                                                                                                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/16/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து மலர்கவே

               
                          

எந்தமிழ் ஈழத்தார் ஏந்தி வளர்க்கின்ற 
செந்தமிழ்ச் சோலை செழிப்புறுக !-சிந்தையிலே 
மண்ணின் மணம்கமழ்க !மார்பில் மறங்கமழ்க !
தொண்டில் சுடர்க தொடர்ந்து !

ஈழம் என்றால் வீரமென 
    இந்த உலகம் உணர்ந்ததுவே !
வேழம் போன்றே அஞ்சாத 
   வேங்கை நம்மின் அடையாளம் !
ஆழம் அகலம் நன்காய்ந்தே 
   அமைப்போம் பாலம் இனி ..நம்முன் 
ஊழும் என்ன எதிர்கின்ற 
   உலகும் என்ன ?..இணைந்திடுவோம் !

சங்கே கொண்டு முழங்கிடுவோம் 
  தலைவன் நெறியை உரைத்திடுவோம் !
எங்கே இருந்த பொழுதினிலும் 
   இன்பத் தமிழை வளர்த்திடுவோம் !
அங்கே நம்மின் சொந்தங்கள் 
   அடைந்த துயரைத் துடைத்திடுவோம் !
இங்கே இயங்கும் செந்தமிழின் 
    சோலை செழிக்க உழைத்திடுவோம் !

தேனின் இனிய செந்தமிழைத்  
  திசைகள் எட்டும் தாங்கட்டும்!
வானின் விளிம்பைத் தொட்டுவரும் 
   வன்மை நெஞ்சுள் ஓங்கட்டும் !
ஊனில் உயிரில் இனப்பற்றே 
    ஊறி நன்றே  தேங்கட்டும் ! 
கானின் மணமாய் நம்வாழ்வு 
    கமழ இணைந்து செயற்படுவோம் !

நம்மால் இயன்ற உதவிகளை 
    நாட்டுக்கு அளித்தல் முதற்கடமை !
செம்பால் நிகர்த்த செந்தமிழின் 
    செம்மை காத்தல் நம்முடமை !
அம்பாய் விரைந்து பணியாற்றும் 
     ஆற்றல் தரித்தால் வரும்பெருமை !
அம்பாள் அடியாள் அனைவரையும் 
     அன்பால் வணங்கி வாழ்த்துகிறேன் !

                                

                                              வாழ்க தமிழ் !வளர்க தம் பணி !
                                                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/10/2015

குருவின் ஆசியுடன் பெருகட்டும் இனியநற் பாக்கள்..



முத்தான சந்தங்கள் முன்னின் றொலிக்கவே
வித்தையைக் கற்று வியப்புறலாம்! - நித்தமும்
பாமாலை சூடுகிறார் பாரதி தாசனார்!
பூமாலை போன்றே புனைந்து! 

எண்ணச் சிறகில் எனைத்தாங்கி
   எங்கோ அழைத்துப்  போகின்றார்! 
வண்ண  வண்ணக்  கனவுடனே  
    வானில் பறக்கச் செய்கின்றார்! 
உண்ண உறங்கப்  பொழுதில்லை!   
    ஊக்கம் மிகவே உழைக்கின்றோம் !
விண்ணைத் தொட்டுக் குதித்தாட 
    விளைத்தார் புலமை என்குருவே! 

அள்ளித் தருவார் அரும்பாக்கள் 
    ஆழம் மிகுந்த கருத்தோடு!  
துள்ளித் துள்ளி மனம்பாடும் 
    தூய தமிழின் சுவைசூடும்! 
பள்ளிச் சிறுவர் எனநாங்கள்  
   பாக்கள் பயின்று வருகின்றோம் !
தள்ளி இருந்த யாப்பமுதைத்
     தந்து மகிழ்ந்தார் என்குருவே! 

கண்கள் காணும் காட்சிகளைக்
   கவிதை யாக்கும் கவியரசர் ! 
புண்கள் போக்கும் வகைதனிலே 
   பூக்கும் பாக்கள் புத்தமுதே! 
விண்ணின் வந்து  விழுந்திடினும் 
    வீரம் பொங்கக்  கவிபுனைவார் !
மண்ணைப் போற்றும்  மறவரென 
    மானம் காக்கும் என்குருவே! 

ஏங்கித் தவிக்கும் மனநிலையை 
   என்றும் அகற்றும் தமிழ்தருவார்! 
வீங்கிப் பெருத்து விழிபிதிங்கி
    வெம்பும் நிலையை மாற்றிடுவார்! 
மூங்கில் இசைபோல் என்னுடைய 
     மூளை குள்ளே புகுந்திடுவார்! 
தேங்கிக் கிடக்கும் உணர்வுகளைத்   
     தேனாய் மாற்றும் என்குருவே! 

பாடும் பணியே பணியெனநான் 
   பாடப் பெருகும் புதுச்சுகமே 
தேடும் எவையும் அழிந்திடலாம் 
    தேயா திருக்கும் மொழிப்பற்றே! 
வாடும் மனத்தின் வருத்தத்தை 
    வடித்தே  நீக்கும் வண்டமிழே! 
கூடும் இழந்த பறவையெனைக்   
     குளிரச் செய்யும் என்குருவே!

எண்ணக் கருத்தைச் செவிமடுத்தே 
   ஏற்றம் பெறுவீர்! மின்னுகின்ற 
வண்ணக் கவிதை வடித்திடவே  
    வருவீர்  இனிய உறவுகளே!
கண்ணைக் கவரும் வலைத்தளத்தில் 
    காலம் முழுதும் பயின்றிடலாம்!
நண்ணும் நலங்கள் தந்திடவே     
    நன்றே உழைக்கும் என்குருவே!

                                                                            
http://bharathidasanfrance.blogspot.ch/ என்றன் குருவின்  வலைத்தளம் கண்டு நாளும் வளம் பெறுவீர் !வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/06/2015

அரசுகளின் கவனத்திற்கு

                                         

அழிவதை நினைவில் தேக்கி 
   அலைந்திடும் உலகின் போக்கை
விழிகளில் உணரு கின்றோம் 
   விடைதனைத் தருவார் யாரோ?
மொழிந்ததை ஆய்ந்து நன்றே 
   முன்வரும் துயரை நீக்கு!   
தொழிலுறும் துாய்மை யாலே  
    தொடர்வினை அகலும் இங்கே !

பயிர்வளம் கருக நாளும்  
   படர்துயா் வந்தே சேரும்!
உயிர்வளம் தழைப்ப தெங்கே?
   உடனிதை  உணர்தல் நன்றே!
மயிரிழை போன்றே வாழ்வு!  
    மனமுதை உணா்தல் வேண்டும்! 
துயில்கிறார்  கவலை யின்றி
    துயரிதைத் தடுக்க வாரீர்!

கயவரை அடக்க எண்ணி 
  கழிச்செயல் புாிதல் ஏனோ? 
உயரிய நெறியை விட்டே
  உயிர்களைப் பறித்தல் ஏனோ? 
தயவுடன் அறியத் தந்தோம் 
   தருமத்தைக் காவல் செய்வீா்!
முயற்சியே இன்றி நாட்டை 
    முடக்குதல் கொடுமை அன்றோ?

குடிமனை எரியக் கண்டு 
    குமுறுது மனமும் இன்று !
மடிபவர் மனிதர் என்று 
   மனங்களும் உணர்தல் நன்று!
விடிவினை எதிர்கொள் ளத்தான் 
   விரைந்தொரு முடிவைத் தேடி 
அடிமையெம் அகத்தின் ஓசை 
    அயர்விலா தொலிக்கு திங்கே !

டைமைகள் இழந்த மக்கள் 
   உாிமையைப் பெறவே வேண்டும்!  
கடமையை உணர்ந்தே நாடு  
   கடன்தனைப் புாிதல் வேண்டும்!
மடமைகள் அறிவை மாய்க்க 
    மனிதனை மனிதன் மேய்ப்பான் 
இடரெலாம் நீங்கும் வண்ணம் 
     இனிதுறும் வழிகள் செய்வீர்! 
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/31/2014

புத்தாண்டே வருக வருக !


                   


புத்தாண்டே  புன்னகை பூத்தாட வந்துதிப்பாய் 
சத்தான ஆண்டாய்த்  தழைத்திடுவாய்  !-வித்தைகள் 
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே   நல்கு !

வேரோடு  மடிந்து வீழ்ந்தோம் 
   வேதனை தினமும் பட்டோம் ! 
போராடும் மறவர் எங்கள்
    போர்க்காலம் முடிந்து போக 
சீரோடு செழிப்பும் சேர்த்து  
    சீராட்ட மலர்ந்த ஆண்டே 
தேரோட வழிகள் செய்வாய் 
    தேசத்தின் நலனைக் காத்தே  !

பொல்லாத விதியை மாற்றிப்   

   பொன்னான  மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி  
    ஈழத்தில் விடிவைக் காட்டி  
நல்லோரும்  பதவி ஏற்க 
   நாடெங்கும்  மகிழ்ச்சி பொங்க  
அல்லலை அறுக்க வந்த 
    ஆண்டாக மலர்க நன்றே  !

காலத்தை வகுத்த தேவன் 

  கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும் 
   ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க  
   ஞாயிறாய் வளர்ந்து நின்று 
சீலத்தை மதிக்கும் மக்கள் 
    சீர்பெற்றும்  மகிழச் செய்வாய் !

புத்தாண்டு பிறக்கும் போது 

   பூமிக்கே மகிழ்வு கிட்ட 
சித்தத்தால் மலர்கள் தூவும் 
  சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ 
    எல்லோரும் சமமாய் வாழ 
வித்தைகள் புரியும் ஆண்டே 
   வில்லேந்தும் பகையை ஒட்டு !

வாவென்று நெஞ்சம் பாடி 

   வண்ணமலர் தூவி ஆடும் 
போவென்று துன்பம் தன்னை 
   போக்கியே ஆள  வேண்டும்! 
நாவார எளிய  மக்கள் 
   நாள்தோறும் நினைத்துப் பாடும் 
தேவாரம் எனநீ நின்றால்  
    தேவர்க்கும் மகிழ்வு தானே !



வணக்கம் !


அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .

                                                                          



                                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12/29/2014

புதியதோர் உலகம் செய்வோம் !...

                           
                                    

கடந்த 27.12.2014 பாரிஸ் கம்பன் கழக கவியரங்க நிகழ்வில் இடம்பெற்ற 
"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிற்கு அமைய எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் அவர்களின் அழைப்பை ஏற்று நான் எழுதிய விருத்தப் பாமாலை இது .இதனை அன்றைய தினம் அரங்கில் என் சார்பில் பாடி மகிழ்வித்த கவிஞருக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி ,பாரதிதாசனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் ...

                                          
                                                                         

நெஞ்சை அழுத்தும் உணர்வுகளை 
     நேரில் சொல்லத் துணிவுமில்லை! 
அஞ்சிப்  பிழைக்கும் அகதிகள்போல் 
     அல்லல் லுற்றோர் எவருமில்லை !
தஞ்சம் எனநாம் வருகையிலே 
     தானாய் எதுவும் புரிவதில்லை ! 
கெஞ்சும் நிலையில் வருந்துயரால் 
     கேள்விக் குறிகள் குவிந்தனவே !

சொந்த மண்ணில் சுதந்திரமாய்ச்  
   சோர்வு இன்றி மனம்போலப்  
பந்த  பாசப்  பயிர்வழத்து  
   பாரில் வாழும்  வழிவகுப்போம்
எந்தப் போரும் முடிவுற்றே 
  ஏற்றம் தந்தால் அதுபோதும் !
வெந்து போகும் மனநிலையை 
  வேரோ டெங்கும்  அழித்திடுவோம் ! 

குண்டு மழையைப் பொழிகின்றார் !
   குற்றம் இழைத்தும் மடிகின்றார் !
கண்டு களித்த பயனென்ன?..
    காற்றும் எமக்குப் பகையாக !
தொண்டு புரியும் மனம்வேண்டும் 
    தோல்வி இனியும் தழுவாமல் 
கொண்டு வருவோம் புதுச்சட்டம் 
   கொல்லும் துயரைத் தடுத்திடுவோம் ! 

எங்கும் எதிலும் மறுமலர்ச்சி 
   ஏணிப் படியாய் விளங்கட்டும் 
மங்கும் உலகின்  வளர்ச்சிக்காய்  
  மனங்கள் சேர்ந்தே உழைக்கட்டும் !
பொங்கும் கடலும் புவியாவும் 
  பொங்கா திருக்க வழிசெய்வோம் !
சங்கும் முழங்க பறைதட்ட 
  சான்றோர் புகழை எடுத்துரைப்போம் !

வீதி தோறும் விழிப்புணர்வை 
  வெல்லும் வண்ணம் விளைத்திடுவோம் ! 
நீதி எங்கும் நிலைத்திடவே 
   நேர்மை யோடும் உழைத்திடுவோம் 
சாதி பேதம் தவிர்ப்பதற்காய் 
    சாவைக் கூடத் தழுவிடுவோம் !
சேதி சொன்ன மறுகணமே 
    சேவை ஆற்றத் துணிந்திடுவோம் !

முற்றும் முழுதாய் நலம்விரும்பி 
   மூளும் எங்கள் பணியிதனால் 
பெற்றுத் தருவோம் சுதந்திரத்தைப்   
   பெருமை பொங்கும் உலகமைத்து !
சுற்றம் மகிழ கடனாற்றிச்  
   சுடரும் உறவை ஏற்றிடுவோம் !
கற்ற தமிழை உலகெங்கும் 
   கமழச் செய்து மகிழ்ந்திடுவோம் !

                                                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.