10/04/2016

எழுந்து வா தாயே!



ஏற்றம் இன்றி இழைத்தோம் அம்மா
எல்லாம் எம்தலை  எழுத்து - அதை
மாற்ற முயன்று மடிந்தவர் தாமே
மாவீரர் என்னும் விழுது!

எல்லைக் கோட்டை எவரும் தாண்ட
இயலா திருந்த பொழுது - ஏன்
அல்லக் கைகள் அணைத்துக் கொண்டார்
அழிகுடி யினரைத் தொழுது!

காட்டிக் கொடுத்துக்  கழுத்தை அறுத்தார்
கயவர் எம்மோ டிருந்து - உயிர்
போட்டி போட்டுப் பிரியக் கண்டோம்
போதும் இங்கேது மருந்து!

நாட்டை விட்டு நாடு கடந்தோம்
நம்மின் உயிரைக் காக்க -தீ
சூட்டைப் பரப்பிச்  சுட்டெ ரித்ததே
சூழ்நிலைக் கைதியை நோக்கு!

அன்னை மொழியை அறவே மறந்தார்
அடிமை வாரிசு இங்கே -எம்
இன்னல் தீரவும் இலக்கை எட்டவும்
இனியொரு வழிதான் எங்கே?

கண்ணீர் பெருகக்  கடலும் தானே
கரையைத் தாண்டு தம்மா - நீ
எண்ண மறந்து இருப்பா யோசொல்
இனியும் இங்கே சும்மா!

அம்மா என்று அழைத்தால் போதும்
அடியவர் குறைகள் தீரும் - இதை
இம்மா நிலத்தில் இருக்கும் உயிர்கள்
என்றும் அறியத் தாரும்!

பொன்னே! மணியே! போதும் இந்தப்
புவியில் பட்ட பாடு -இனி
இன்னல் இன்றி எவரும் இங்கே
இன்புற மார்க்கம் தேடு!

அன்பும் அறமும் அன்னை உன்னால்
அவனியில் தழைக்க  வேண்டும்  -உயர்
நன்மை பொங்க  நாளும் இதனால்
நட்பை மதிக்கத் தூண்டும்!

கன்னல்  மொழியால் காலம் தோறும்
கண்ணீர்க் காவியம் தொடுத்தோம் -நீ
இன்னல் துடைக்க எழுந்து வந்தால்
இன்றோ டிதனை  முடிப்போம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. எழுந்து வா தாயே!

    எழுச்சிமிக்க கவிதை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. #காட்டிக் கொடுத்துக் கழுத்தை அறுத்தார்
    கயவர் எம்மோ டிருந்து#
    எதிரி வேற எங்கேயோ இல்லை !

    ReplyDelete
  3. கவிதை சூப்பர் என்றால் படம் என்ன அழகு...

    ReplyDelete
  4. படம், கவிதை இரண்டுமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........