8/30/2014

கவிதைப் போட்டி -2014 (2வது பட இணைப்புக்கான கவிதை )


                                                             (  பட இணைப்பு -2)

                                                    தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!      

தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!

மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!

எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம்  உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?

கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம்  கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?

சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!

விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?

                                                             (  தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)

                                                 
  
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர்  ரூபன் ,யாழ்பாவாணன் 
ஐயா இணைந்து   நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என் 
                                               இனிய நல் வாழ்த்துக்கள்                                                   
                             http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/29/2014

கவிதைப் போட்டி -2014 (அம்பாளடியாளின் கவிதைகள் )

                                                       (  பட இணைப்பு -1)


தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் ஐயா இணைத்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2014க்குரிய கவிதை இதோ ...


                               திருடா திருடா    

தேன் சுரக்கும் பார்வை என்றன்  பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன்  முன்றலில்

மான்  விழியின்  ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான்  விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?

பால் மணக்கும் பாவை இவள்  முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?

வேல் முருகன் மால் மருகன் நீயடா!  உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத்  தென்பெங்கே?

திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப்   பாட வைக்கும்  காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!

கண்ணெதிரே  காண்பதெல்லாம் கனவா!  நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன்  உயிரே !

                                                                                                                
இப் போட்டியை நிகழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் இப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் !

                                      வாழ்க தமிழ் !வளர்க நின் பணி !
                      http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/26/2014

அருளும் நீயே பொருளும் நீயே






அருளும் நீயே பொருளும் நீயே
        ஆதி அந்தம் அனைத்தும் நீயே !
வெருளும் மனத்தின் சக்தி  நீயே
   வேண்டும் வரத்தை அளிக்கும் தாயே!
உருளும்   உலகில் உனையே நினைத்தேன்
    ஊனுட லிலும் அதையே தரித்தேன்
இருளைப் போக்க  வருவாய் தாயே
    என்றும் நல்லருள் தருவாய் தாயே ...

துணிவைத்    தந்து காக்கும் சக்தியே 
   துணையாய் என்றும் விளங்கும் சக்தியே 
பணிவை  எம்முள் வளர்க்கும் சக்தியே 
   பாசம்   நிறைய வைத்த சக்தியே 
அணியும் உடையும் நீதானே என்றும்
   அன்பாய் மானம் காப்பவளே! துயர்
தணியும் வரையும் வந்த ருள்வாய்
     தூய  சக்தியே துணை நீயே !

முக்கனிச் சாற்றை ஏந்தி வந்தோம்
    மூத்தவள் உனக்கே படைத்து நின்றோம்
எக்கனிச் சாற்றையும் மிஞ்சிடும் சுவையே
    ஏழை எம் மனத்தினில்  குடிபுகுவாய்
துக்கனி வாரணி நீயம்மா எமக்கு !
    தோணியும் ஏணியும் நீயம்மா !
பக்க விளைவினைத் தடுத்தருள்வாய் -செல்லும்
    பாதையில் ஒளியாய் நின்றருள்வாய்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே
   உயிர் களைக்காக்கும் மகாசக்தியே
நாம் சக்தி  பெற்றிட வந்தருள்வாய்
   நல்லதைக் கெட்டதைச் சொல்லிடுவாய்
காம்புகள் பூக்களைத் தாங்கிடலாம்
   கதிரவன் துணையென நின்றிடலாம்
வேம்புகள் நச்சினைப் போக்கிடலாம்
    வேதமே உனையிவை வென்றிடுமோ !
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/23/2014

பேராசை துறத்தலே மிக நன்று !



நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்!
நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டும்!
அல்லல்களைப் போக்கும்  சக்தி எம்மிடத்திலே
அடங்கி ஒடுங்கிக் கிடப்பதையே  உணர வேண்டும்!

வில்லங்கத்தை எவருமிங்கே விலக்க வேண்டும்
வீதியிலே இறங்கும் போதும் அமைதி வேண்டும்!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்!
மேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!

பொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்ததுமில்லை!
போதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்ததுமில்லை !
மெய்யாலே  மேன்மை குன்றிப் போனதுமில்லை!
மிருதுவான நற்குண மிருந்தால் தொல்லையுமில்லை !

கொய்யாதே பிறர்    வாழ்வு கூந்தலுமில்லை!
கோவத்தால் ஆனதிங்கே    ஒன்றுமேயில்லை !
தொய்யாத பண்புள்ளவர் தோத்ததுமில்லை!
தோல்வி என்ற வாசகத்தைப் பார்த்ததுமில்லை !

எண்ணாதே எவருமிங்கே சளைத்தவரில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்ததுமில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை
மானத்தை எந்நாளும் விட்டு வைத்ததேயில்லை !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/22/2014

வெண்கொற்றக் குடையின் கீழே



வெண்கொற்றக் குடையின் கீழே
    வீற்றி  ருக்கும் பெருமானே
பெண்பட்ட பாட்டை அறிந்தும்
    பேசா திங்கே இருப்பாயோ !
புண்பட்ட மனத்தின் வலியைப்
     புறம் தள்ளி வணங்குகின்றோம் 
கண்பட்டுப் போன குடியைக்
     காத்தருள வர வேண்டும்...

மான் என்றே துரத்திப் பிடிப்பார்
  மயில் என்றே ஆட்டிவிப்பார் !
ஏன் என்று வினவா திருந்தால் 
  எந் நாளும் துயரைக் கொடுப்பார் !
நான் என்ற அகந்தை யுடையோர் 
  நலன் குன்றிப் போக அருள்வீர்
வான் சிந்தும் மழையின் ஆற்றல்
  வற்றாது காக்கும் இறைவா !..

பெண்ணுக்குச் சம உரிமைதனை 
  போற்றும்  வகையில் தந்தவனே!
விண்ணுக்கும் வேந்தே ஒளியே
  வெண்தாமரை மலரே கனியே !
மண்ணுக்குள் விழைந்த பொருளே
   மாவிளக்கே எங்கள் தோரணமே
கண்ணுக்குள் எம்மை வைத்துக்
  காத்தருள    வர வேண்டும் !..........

                                           
   
 


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2014

தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்



தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்
 துய்ய நின் பாதத்தைத் தொழுது ஜெயிப்போம் !
சூது  கவ்வும் இடத்திலெல்லாம் தோன்றும் சக்தியே
  சித்த மெல்லாம் உன் நாமம் பத்தி எரிகவே !
சாது எங்கள்  மனத்தினிலே வீரம் பொங்கவே
  சக்தி கொடு எந்நாளும்  வெற்றி கிட்டவே!
காது குளிர அழைக்கின்றோம்  தேவி துர்க்கையே
   கருணையோடு களமிறங்கி காத்தருள்கவே !

பஞ்சமியில் படை திரட்டி வந்த துஷ்டரை
    பரலோகம் அனுப்ப வல்ல சக்தி நீயடி !
தஞ்சமென்று நின் பாதம் தொழுது நிற்கின்றோம்
    தாயே          வா தர்மத்தைக் காத்து அருளிட !
வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
   வாழ்   வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/13/2014

இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு


இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு
இதயம் இங்கே வலிக்குதடா ........
உரங்கள் மேலும் போட்டுப் போட்டு விதியும்
உரசிப் பார்த்து மகுழுதடா ...

வரங்கள் அருளும் சாமிக்கும் தான்
வாழ்க்கை இங்கே கசக்குதடா ....
சுரங்கள் தப்பிப் போன கீதமே எம்
சொந்த மண்ணில் ஒலிக்குதடா  .....

நிலை(மை) மாறும் மாறும் மாறும் என்ற
நினைப்பும் செத்துப் போனதடா......
தலை தாழும் நிலையில் வாழும் ஆசைகள்
தானாய் ஓடி மறையுதடா .....

தமிழா தமிழா தமிழா எங்கள்
தாயின் மடியைப் பார்த்தாயா !!..
ஒருதாய் பெற்ற பிள்ளைகள் எங்கள்
உணர்வை ஒன்று சேர்ப்பாயா ...???

மரங்கள் பேசி மகிழும் மண்ணின்
மகிமை உணர்த்த உறவுகள் நாம்
தரங்கள் பார்த்துப் பிரியும் போது
தாக்கம் இனியும் பெருகுமடா .......

அடிமை விலங்கை உடைத்தெறியும்
ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
விடை நீ கூறு எம் விழியைப் பாரு
வீதியில் போகட்டும் வேற்றுமை தான் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2014

அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு



அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு
அம்மா துடிக்கின்றாள்
அவள் அடி மடி மீது கையை வைத்தவன்
இடியாய் இடிக்கின்றான்

கொலைவெறி கொண்ட நாகமும் நரியும்
கூட்டாய்ச் சதி செய்ய
எதிரியின் கைகளில் மலர்களைத் தந்து
எங்கே நான் செல்ல ?......

விடியலைத் தேடும் பறவைகள் இவர்களின்
முடிவை யார் அறிவார் ?..!!
கருணையின் கடலே கற்பகத் தீவே
காப்பாய் மிக நன்றே .....

பொழுதுகள் புலருது பூக்களும் கருகுது
பூமியில் தினந்தோறும்
அழுபவர் குரல்களை நசுக்கிடும் கொடியவர்
அழிவுற வழி செய்வாய் ....

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...

சூரனை வதைத்த நாயகனே
சுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/01/2014

மரண ஓலம் கேட்கிறதே


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த உலகினில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....

                                              (மரண ஓலம் கேட்கிறதே....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/29/2014

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்


மண்ணின் மணமது குன்றாமல்
மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப்   பாடும்  எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி  வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத்    தவிக்குது மனம் இன்றே!

உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத  வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி   பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள்      இருந்தும் பாரம்மா
திவ்விய  ஒளியே கேளம்மா!

நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும்     துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல்    அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே  மாறாகும்
கலைநயம்  மிக்க எம்நாடே  இங்கு
காண்பவை யாவும்  சேறாகும் !!

பனைமரக்  காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம்    கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின்  அடையாளம்!
மனைகளில்  இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/19/2014

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !


தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
      காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !

மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே 
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!

கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !

வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ 
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!
 
படம் :இணையத்தில் பெற்றுக்கொண்டது .நன்றி    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/15/2014

எண்ணமெல்லாம் நிறைந்த சிவனே போற்றி போற்றி



இயல்பு   நிலை மாறாமல்
    ஈசன்   அடியைப் பற்ற வேண்டும்
முயலும் வரை  முயன்று நானும்
   மும்    மூர்த்தி  புகழ் பாட வேண்டும்
கயல்   விழிகள்  ஏங்காமல் இங்கு
   காத்  தருள்வாய்  எம் பிரானே
வயல்  வெளியில்  வரப்பினைப் போல்
  வார்த்தை   என்றும் உயர்வு பெற  !

எண்ணத்தில் உன்னை வைத்து
  ஏற்றமுற  வடித்த நற் பா -தேன்
கிண்ணமெனத் தோன்றிடவே எம்
   சிந்தையிலே வந்த மர்வாய்
வண்ணத்தில்  சிறந்த வண்ணம்
    வாழ்வ    னைத்தும் வந்துதிக்க
விண்ணவரும் போற்றும் வகை
    வார்த்தைகளைத் தந் தருள்வாய்

காரைக்கால்  அம்மையைப் போல்
   களிப்புடனே நாம் வாழ
தேரைக்கும்  வாழ்வளிக்கும் நின்
   திருவடியே சொர்க்க மென்பேன்.!.
நீரைப்போல் நிலத்தைப் போல்
   நீங்காத     வரமளிப்பாய்  இறைவா -ஜென்மக்
கூரைக்குள் அவதரித்த எமை என்றும்
   வேரைப்  போல் காத்தருள்வாய்...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/05/2014

எண்ணற்ற துயரம் வந்து என் நெஞ்சை அடைக்கிறதே

 

எண்ணற்ற துயரம் வந்து
என் நெஞ்சை கொல்கிறதே!
புண் பட்ட உள்ளத்திலே
பூகம்பம் எழுகிறதே!

இதை அடக்க வழியைத் தான் தேடுகிறேன்- நான்
இருந்தும் ஊமையாய் வாடுகின்றேன்!
கனவு சிதைவதைக் காணுகின்றேன் எதிர்
கால முடிவைத் தான் தேடுகிறேன்!

பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
பேசிப் பழக உறவுகள் வேண்டும்
நிலைமை இங்கு வேறானதே என்
நினைப்பும் இதனால் நீறானதே!

கலகம் நிறைந்த பூமியிலே
காணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா!

இறந்தவர் தொகையை எண்ணி எண்ணி
இருப்பதை விடவும் மரணம் மேல்
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
சிந்தையில் எட்டுதா பாரிங்கே!

ஒருதலைப் பட்சத் தீர்வு  இதனால்
ஒழிந்திடும் அழகிய தீவு!
உயிர்களைக் காப்பது இனி யாரு ?
எல்லாம் உணர்ந்தவரே  பதில் கூறு ?

                                             (     எண்ணற்ற துயரம் வந்து..)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/02/2014

என் தேகம் பட்டுப் போனாலும்...



என் தேகம் பட்டுப் போனாலும்
இந்த  சந்தேகம் விட்டுப் போகாது!

அதைச் சொல்லு சொல்லு சொல்லு மன்னா
எனை அள்ளு அள்ளு அள்ளு கண்ணா
உயிர்த் தீயில் தீயில் நீயே தானே
உருவாகி நின்றாய் தேனே தேனே...

என் தேகம் பட்டுப் போனாலும்
அந்த  சந்தேகம் விட்டுப் போகாது ...

பஞ்சணை என்று நெஞ்சினிலே
தூங்கத் துடிக்கின்றாய்
பகலும் இரவும் என் விழியைப்
பார்த்தே ரசிக்கின்றாய்!

கொஞ்சிடும் போது இதழ்களை வருடிக்
கோலம் போடுகின்றாய்!
விஞ்சிடும் போது விரல்களைப் பிடித்தே
விருப்பைத் தொடருகின்றாய்!

இது ஏனோ ஏனோ!
பிடிவாதம் தானோ!
விடை கூறு கண்ணா?
விழி தேடும் மன்னா!

இது காதல் தானடி பெண்ணே என் மீது
கருணை காட்டடி கண்ணே!

சிற்றிடை மீது பற்றிய தீயைத்
தீண்டித் தணிகலாம் வா....
ஒத்தையில் வந்தால் முத்தமாய்த் தந்து
உயிரைக் குடிக்கலாம் வா .........

பெண்

இது ஆசை ஆசை பொல்லாதது
அந்தம் ஏதும் இல்லாதது
இழந் தென்றல் உன்னால் சூடானது ...
இனி எங்கும் முன்னே நில்லாதிது

ஆண்

உன் தேகம் பொன்னானது
என் மோகம் என்னாவது ?
சந்தேகம் உண்டானது இதில்
சந்தோசம் சதிராடுதே!.....

                   (என் தேகம் பட்டுப் போனாலும் ...)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/25/2014

சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறது



காத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!

நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!

ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!

வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!

கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!

நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!

கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/23/2014

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு...

 

வன்னி மண்ணைத் தொட்டுத் தொட்டு
வந்து போகுதே எண்ணம்
கன்னி மயில் ஆட்டம் ஆடி
கண்கள் ரெண்டிலும்!

உன்னிடத்தில் மோகம்
உள்ள அந்தத் தாகம்
சொல்லில் அடங்காது
சொன்னால்  புரியாது!

பூங்குருவிக் கூட்டம்
பாடும் அந்தப் பாட்டும்
தேனெடுக்கும் வண்டு
தேடி வரும் தோட்டம்!

ஆலமரம் புளியமரம்
அழகழகாய்ப் பூக்கும் மரம்
வேலவனின் ஆலயமும்
வேண்டி நிற்கும் பக்தர்களும்

கால பயம் வந்ததனால்
கண்ணை விட்டு மறைந்திடுமோ?
ஊரழகைத்  தேரழகை
உயிர் தரித்த மண்ணழகை

சொன்னால் புரியாது
சொல்லில் அடங்காது
இன்னலிது கேளு
எந்தன் உயிர்த் தீவே!

உன் மடியே சொக்கமடி
உணர்ந்தவர்க்குத் இன்பமடி
அள்ளி அணைக்காயோ?
அன்பை உதிர்க்காயோ?

என்றன்  உயிர்த் தீவே!
என்று அணைப்பாயோ!

                              ( வன்னி மண்ணைத் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2014

பாவச் செயலை இளைத்தவர் தமக்கொரு பரிசும் இது தானே


சத்தியத்தைப் புறக்கணிக்கும் மானிட வாழ்வு
சாக்கடையில் தான் மிதக்கும் மூடரே  கேளீர்!
வித்தைகளை யாம் படித்து வெற்றி கொள்ளலாம்
வென்ற வெற்றி தோல்விதனைத் தழுவிச் செல்லலாம் !

மட்டமான நினைப்புளால்  மரணம் கிட்டலாம்!
மாறு வேடம் போட்ட உண்மை மனத்தைக் கொல்லலாம்!
திட்டமிடும் சதிச் செயலால் சக்தி இழக்கலாம் உயர்
தீமைகளே வாழ்நாளை அலங்கரிக்கலாம்!

உத்தமரை வதைத்தவர்க்கு வாழ்வு சிறக்குமா!
ஒரு பொழுது எனினும் இங்கே அமைதி நிலைக்குமா!
கொத்த வரும் பாம்பிற்கும்  தீங்கு நினையாதார்
கொள்கைகளை உடைத்தெறிந்த சாபம் பொறுக்குமோ!

பத்துமாதம் சுமந்து அன்னை பெத்தெடுக்கிறாள்
பகலிரவாய்க் காத்தும்  எம்மை வளர்த்து விடுகிறாள்
எத்தனையோ கனவு சுமந்து ஏங்கித் தவிக்கிறாள்
எதிரிகளின் கண் படாமல் மறைத்தும் வைக்கிறாள்

பெத்தவளின் மனம் துடிக்கக் காவு கொள்வீரோ!
போதையினால் அறிவிழந்த மூடர் தாம் இங்கே
வெற்றியென நினைத்ததெல்லாம் வெற்றியுமல்ல
வேண்டி நிற்கும் ஆசைகளும் அழியுமே மெல்ல!

இன்றுணர மறுக்க வைக்கும் இளமையும் சாகும்!
அன்று துயர் கொன்று தமை ஆட்டியும் படைக்கும்!
என்றொருவர் அழிவை எண்ணிக்  குழி பறித்தீரோ
அன்று முதல் காத்திருப்பீர்  அக் குழி வரவேற்கும்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/11/2014

செல்வம் இருக்கும் இடத்தில் சிறந்த பண்பும் வேண்டும்



நீர்க்குமிழி போல மனம் உடைந்து போகுதே!
நெஞ்சுரத்தை இழந்து தினம் தஞ்சம் கோருதே!
போர்க்கொடியை உயர்த்துவதால் வந்த தொல்லையே
பொறுமை என்ற வாசகத்தை எவரும் அறியவில்லையே !

மனம் முழுக்க வக்கிரத்தைப் புதைத்து வைத்தாரே!
மாறு வேடம் போட்டு நாளும் சேட்டை செய்தாரே!
குணம் அறிந்தும் ஒதுங்கிடத்தான் வழியுமில்லையே!
கொள்கையிலும் இழிவான கொள்கையுடையோரே!

ஏழை என்று இளக்காரம் கொள்ளவும் வேண்டாம்!
எளியோரைப் பழி வாங்கித் திரியவும் வேண்டாம்!
நாளை இந்த உலகினிலே எதுவும் நடக்கலாம்
நலிந்தோரின் வாழ்வு சிறக்கப் புதையல் கிடைக்கலாம்!

அற்பருக்கு வந்த வாழ்வு அகத்தைக் கிழிக்கலாம்!
அடுத்தவரின் சாபம் வந்து முகத்தை மறைக்கலாம்!
சொற்ப காலம் வாழும் வாழ்வில் சொந்தம் எதுவடா
சோதனையும் வேதனையும் கொடுக்கும் மானிடா!

நட்பு ஒன்றே உலகினிலே உயர்ந்த செல்வமாம் அதை
நாடி நின்றோர் கோடி நன்மை பெற்று வாழ்கவே!
உட்புறத்தைத் தூய்மையாக்கி உலகம் உய்யவே
உண்மை பேசி நன்மை யாவும் பெற்று வாழ்கவே!

(படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/09/2014

சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே



சொந்த பந்தம் அத்தனையும் உன்னை நம்புதே!
சொக்குப் பொடி போடும் இந்தக் கண்ணை நம்புதே!
என்றன்  உயிர் என்னிடத்தில் சண்டையிடுதே!
எங்கு சென்ற போதினிலும் முந்திக்கொள்ழுதே!

கண்ணழகைக் காட்டிக் காட்டி
காதல் வலை விரித்தாயே!
பெண்ணழகைப் பார்த்துப் பார்த்து
போதையிலே சிரித்தேனே!

காதல் இன்று என்ன ஆச்சு? -வெறும்
கானல் நீராய்ப் போயே போச்சு!
ஆசை அது என்ன ஆச்சு?
அத்தனையும் பொய்யாய் போச்சு!

ஊரை விட்டுப் போனாலும்
உன் நினைப்புப் போகலியே
பாறையில நீர் கசிய
பக்குவத்தை விதைத்தவளே!

ஆலமரமாய் இருந்தேனே
அன்பால் துரும்பானேனே!
யார் அழுதால் உனக்கு என்ன?
அழுதவரை மறந்து விடு!

குற்றமது பார்த்துப் பார்த்து என்னைக்
குப்பையிலே போட்டவளே
சத்தியமாய் உன் நினைப்பில்
சாகும் வரை  நானிருப்பேன் ....

                                                    (   சொந்த பந்தம்... )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/07/2014

உடல் அசையும் ஓசை இங்கே



உடல் அசையும் ஓசை இங்கே
உணர்வுகளின் பாசை எங்கே!
மலர்களிலும் நீ தான் அழகடி என்
மனம் கவர்ந்து செல்லும் பைங்கிளி..

கடலலையில் மோகம் கொண்டேன்  இங்கு
கரையென நான் நாளும் நின்றேன்
தொட விரும்பித் தொட்டுச் செல்லும் உனை நான்
தொந்தரவு செய்யேன் இனியும்

வர விரும்பி வருவாயோ புது
வசந்த காலம் தருவாயோ?
திருமண நாள் காத்திருக்குது இந்தத்
திங்களைத் தான் எதிர் பார்த்திருக்குது ...

பெண்

சொக்க வைக்கும் சுந்தரனே
சொன்ன சேய்தி அறிவேனே ...
அக்கம் பக்கம் பார்த்து இனியும்
அன்பை அள்ளித் தருவேனே ....

முத்து உடல் தொட்டணைக்க புது
மோகம் வந்ததா?
இந்தச் சித்திரத்தைக் கவர்ந்து செல்லத்
தாகம் வந்ததா ?

காத்திருக்கேன் காத்திருக்கேன் என்
கனவும்  நீ தானே ...
எதிர் பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
ஏக்கம் ஏன்  செந்தேனே?

ஆண்

பூவு ஒன்று பேசியதே !...
புன்னகையை வீசியதே ....
தேன் அழைக்குது தேன் அழைக்குது அன்பே வா
தென்றலென முன்றலென முன்பே வா .....

கண் சிமிட்டும் நேரமெல்லாம் இனிக்
காதல் அரங்கேறும்!
கைவளையல் ஓசையோடு
மோதல் அரங்கேறும்!

பெண்

போதும் போதும் போதும் மச்சானே
பெண்ணிவளை வெக்கம் கவ்வ வைக்காதே!
உச்ச நாணம் உயிரைக் கொல்லுதே!
உன் பெயரை உரக்கச் சொல்லுதே!

ஆண்

அச்சம் ஏனடி?
அமைதி கொள்ளடி
மொட்டு விட்ட மலரே நீ புது
மோகம்   கொள்ளடி

பத்து விரல் தொட்டணைத்துப்
பாடம் சொல்லவா?
பாவை உன்றன்  விழி கசிய
பார்வை சிந்தவா?

பெண்
பரிகாசமா?
இது நியாயமா?
என் தேகம் தொடலாமா?

ஆண்

சந்தேகம் வரலாமா?

                             (  உடல் அசையும் ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.