9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. வணக்கம் அன்புத் தோழி!

    பொன்விழாப் பாவலர்க்குப் பூத்திட்ட நற்பாக்கள்!
    கன்னற் கரும்பாகக் கண்டேனே! - இன்னும்
    எழுதுவீர்! எம்கவி வாழ்ந்திடவே நாமும்
    தொழுவோம் அவரடியைத் தொட்டு!

    மிகமிக அருமையான வெண்பாக்கள் தோழி!

    எங்கள் ஐயாவுக்கும் வெண்பாவிற் பாடிய உங்களுக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      இளமதி வந்தினிதே ஈந்திட்ட வெண்பா
      உளமதில் நின்றே ஒளிரும்! - வளமெல்லாம்
      பெற்றொளிரும் வண்ணம் பெருமை அடைந்திடுக!
      கற்றொளிரும் வண்ணம் கணித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  2. வெண்பாவின் வேந்தர்க்கு வெண்பா பரிசளித்த
    பெண்பாலர் நீவிர் பெருமிதமே! - கண்பூக்க
    அன்பா லவர்க்கே அனுப்பிய தூதறிய
    என்பால் வரவேற் கிறேன்!
    நல்ல பதிவு சகோதரி!
    என் தளங்கண்டு கருத்துரைக்கத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வெண்பா இயற்றி விளையாடும் என்னெஞ்சைத்
      தண்பா வடித்துத் தகைசெய்தார்! - ஒண்பா
      அளிக்கும் உயர்சோசப்! அந்தமிழ்போல் வாழ்க!
      களிக்கும் தமிழில் கலந்து!

      Delete

  3. வணக்கம்! நலம்! நலமே நண்ணுக!

    வெண்பா ஐந்தும் ஐந்து கனிகளின் கூட்டாய்ச் சுவை அளித்தன. உண்டு மகிந்தேன்.

    பொன்விழா ஆண்டினைப் போற்றும் வகையாக
    இன்பலாக. கவிகள் இசைத்துள்ளீர்! - மின்னிலா
    போன்று தமிழைப் புனைந்துள்ளீா்! நன்றியினை
    ஈன்று மகிழ்ந்தேன் இனித்து!

    பூத்தாடும்! வண்ணப் புகழாடும்! மாண்புகளைக்
    காத்தாடும் உன்றன் கவிபடித்தேன்! - கூத்தாடும்
    நெஞ்சம்! குதித்தாடும் எண்ணம்! நிலமெங்கும்
    விஞ்சும் தமிழை விளைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. இலக்கியப் பெருந்தகைக்கு
    இனிய பாமாலை..
    மிகவும் அருமை சகோதரி...

    ReplyDelete
  5. பொன்விழா காணும் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்.

    உங்கள் கவிதை அருமை அம்பாளடியாள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மிக மிக அழகானா க்விதை வரிகள் சகோதரி!

    கவிஞர் அவர்களுக்கும், தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. என்னால் தற்சமயம் கவிதை படிக்க இயலாவிடினும், தங்கள் பதிவின் வழியே தலைவர், கம்பன் கழகம், பிரான்ஸ், கவிஞர் கி பாரதிதாசன் அவர்களுக்கு என்னுடைய பொன்விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
    த.ம.4

    ReplyDelete
  8. வார்த்தைகள் பூக்க வகைவகையாய் பாலர்க்கு
    கோர்த்துக் கொடுத்தாய் புகழ்மாலை - பார்க்கும்
    அவருள்ளம் பாடி அணிந்திருக்க ! கண்ணைக்
    கவர்ந்திழுக்கும் உன்றன் கவி !


    பொன்விழா நாயகரை போற்றும் கவியினிது
    என்சொல்ல வேண்டும் இனி !

    அருமையாய் உள்ளது சகோ வாழ்த்துக்கள்
    கவிஞர் ஐயாவுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    தம 6

    ReplyDelete
  9. அருமையான வெண்பா!! வாழ்த்துகள் தோழி!
    அய்யாவிற்கும் வாழ்த்துகள்(நம்மால் முடிஞ்சது அவ்ளோ தான்:))

    ReplyDelete
  10. அருமையான வாழ்த்துப் பா...

    பொன்விழா காணும் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  11. வல்ல கவிஞருக்கு நல்ல கவிபடைத்தீர்
    சொல்லிய வார்த்தை சுவை!

    அருமையான வெண்பாக்கள். தொடர வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete

  12. வணக்கம் !
    எண்ணக் கருத்தை எடுத்தே உரைத்தேனே!
    வண்ணம் குறையாது வாழ்விலே! -மண்ணையும்
    மக்களையும் நேசிக்கும் மாமனிதர் நற்புகழை
    எக்கண்ணும் ஏற்கும் இனிது!

    வாழ்த்துச் சொன்ன அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள் !

    ReplyDelete
  13. வல்ல பாவலருக்கு
    நல்ல பாவினிலே
    பொன்விழா வாழ்த்து
    மின்ன முழங்கினீர்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........