10/06/2014

81வது பிறந்த நாள் இன்று !



அன்பைப் பொழியும் மனத்தாலே 
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும் 
இனிய நல் வாழ்த்து உரைபீரே !

தந்தை என்றோர் தெய்வத்தைத் 
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம் 
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...

பொங்கும் தமிழின் ஆர்வலரை 
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை 
எங்கள் உயிரை உணர்வலையை 
என்றும் இறைவன் காக்கட்டும் !

விண்ணும் மதியும் வாழ்த்திடவே 
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும் 
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே 
கருணை வெள்ளம் காக்கட்டும் !

எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி 
எல்லா நலனும் தங்கட்டும்  
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை 
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் 
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல் 
பூப்போல் இங்கு சிரித்திடவே ....





                                    இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
                                                                     
                 

                                                   இவை அனைத்தும் என் 
                      வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/02/2014

சரஸ்வதி தாயே போற்றி போற்றி ..


அன்னை சரஸ்வதி தாயே போற்றி 
அறிவின் நுதலே  அழகே போற்றி 
பொன்னில் வடித்த சிலையே போற்றி 
பொறுமை காக்கும் கலையே போற்றி 

இன்னமுத மொழியே போற்றி 
இருளைப் போக்கும் ஒளியே போற்றி 
விண்ணவரும் தொழும் தேவி போற்றி 
வெண்டாமரை தாங்கும் மலரே போற்றி

பண்ணில் நிறைந்த பதமே போற்றி
பயிலும் நாவின் அசைவே போற்றி 
கண்ணின் மணியே கருத்தே போற்றி 
கருணைக் கடலே அமுதே போற்றி 

கற்றவரும் தொழும் தேவி போற்றி 
கல்லாதவர்கும் அருள் நீ போற்றி 
உற்ற துணை நீ உணர்வே போற்றி 
உயிராம் மெய்ஞாதின் வழி நீ போற்றி 

வற்றாத கல்விக் கடலே போற்றி 
வறுமையைப் போக்கும் வாழ்வே போற்றி 
சிற்றின்பம் தவிர்க்கும் சிறப்பே போற்றி 
பேரின்பம் அருளும்  பெருமையே போற்றி 

நற் தவம் ஏற்கும் நலனே போற்றி 
நவராத்திரியின் நாயகி  போற்றி 
அற்புத நிலையே அம்மையே போற்றி 
அரும் பெரும் பாக்களின் அழகே போற்றி 

புத்தகத்துள்ளுறை மாதே போற்றி 
பூவின் மணமே புலனே போற்றி 
சித்தம் மகிழும் நினைவே போற்றி 
சிந்தும் இன்னிசை மழையே போற்றி 

வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி 
கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி 
கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......

                                                         





அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அம்பாளடியாளின் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் ..........
                                                       






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/25/2014

கம்பன் புகழைப் பாடு மனமே !


கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்  !-செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !

பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே 
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள்  ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற  
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே!இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !



அலைந்து திரிந்தே  அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள்  அன்பினை நாளுமே பெற்றகம்பர் 
வாழ்வினைக் கண்டிட  ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ   பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப 
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !

ஆய கலைகள் அறுபத்து  நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி  
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் 
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !


                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2014

சகல சௌபாக்கியங்களும் அருள்பவளே !


நாடும் மக்களும் நலன் பெறவே சுகம்
தேடும் விழிகளைக் காத்தருள்வாய்
பீடும் பெருக்கிப் புவி மேலே எந்நாளும்
கூடும் மகிழக் குடி புகுவாய் !

வாடும் உலகின் வாட்டம் தீர்பவளே!
காடும் சிறக்கக் கைகொடுப்பாய் விழி
மூடும் போதும் உன்னாமம்
சூடும் மனத்தில் சுடர்ந்திடுவாய் !

பாடும் குயிகளும்  பாடி மகிழ்ந்தட
பாட்டாய் என்றும் நீ வருவாய்
ஓடும் நதிகளும் உன்பேர் சொல்லிட
ஓங்கும் நல்வளம் தந்தருள்வாய் .!

ஆடும் அசையும் உயிர்களெல்லாம்
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே எந்நாளும்
போடும் தாளம் தப்பாமல்- புவிமேல்
புலரும் புன்மையைப் புடைத்தெறிவாய் !

ஈடு இணைகள் அற்றவளே 
இனிக்கும் தேனாய் நிற்பவளே 
மேடு பள்ளம் அறிந்திங்கே 
மேன்மையுறவும் செய்திடுவாய் !

கேடு வந்து விளையாமல் 
கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய் 
வீடும் சிறக்க வந்தவளே! 
வீசுக  தென்றலாய் எம்முள்ளே ..

                                                   
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2014

சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !



வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய்  வளம் !

சினத்தால்  அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க )  மகிழ்ந்து !-இனத்தின் 
பெருமையும் ஏற்ற புகழும்  தழைக்க
வருவதை  ஏற்கும்  விருப்பு

ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல்  நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர்  தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும்  போக்கும்  பயன்!

கடமை உணர்ந்த கவிக்குயிலே!  இன்றே 
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை 
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !

இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!

கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் 
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும்  வளம் !

(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/18/2014

விநாயகர் வெண்பா



பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய் 
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!

எண்ணும் பொழுதினில்  ஏற்றம் மிகுந்திட 
கண்ணாய் வருவாய்  கணபதியே! - விண்ணும் 
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே 
இசைவுடன் காப்பாய் இனித்து!

அறுகம்புல் மாலை அணிந்திட  என்னுள் 
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்  
உன்னால் உயா்வாழ்வும்!   ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!

கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே! 
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய் 
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே! 
ஞானம் புகட்டுவாய் நன்கு! 


                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2014

எதைத் தேடி என்ன கண்டோம் !


பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !

எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !

விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !

பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !

வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !

மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே  !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !

வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !

காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து 
வாழக் கற்றுக் கொள்வோமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2014

இது அம்பளடியாளுக்குக் கிடைத்த விருது !


ஆஹா ...என்ன ஓர் அருமையான விருது !இது எனக்கே எனக்கா !இன்றைய நாள் என் வாழ் நாளில்  மறக்க முடியாத நாளாக அமைவதற்கு இந்த விருதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது இதை  இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நான் மட்டும் எப்படி இந்த மகிழ்வினைத் தனித்து அனுபவிப்பது ?இந்த விருதினைப் பெறுவதற்கு மூல காரணமே என் வலைத்தள சொந்தங்கள் தாங்கள்  தானே ! எந்தப் பாடலை எழுதினாலும் எந்தக் கவிதையை  எழுதினாலும் அதற்கு உயிரோட்டமுள்ள நற் கருத்துக்களை இட்டுக் கௌரவித்து மேலும் ஊக்கமளிப்பவர்கள் தாங்கள் தானே ! ஆதலால் முதற்கண் என் வலைத்தள சொந்தங்களுக்கும் குறிப்பாக இந்த விருதினை எனக்கு வழங்கிக் கௌரவித்த திரு .துரை செல்வராஜூ  ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .சிறப்பான ஆன்மீகப் பகிர்வினை அள்ளி அள்ளி வழங்கும் ஐயா அவர்கள் இந்த விருதினைப் பெறுவதற்கு முன்னர் ஒரு சில நிபந்தகளையும் அறிவித்திருந்தார் !

                                 அதாவது இவ் விருதினைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலில் இவ் விருதினை வழங்கிக் கௌரவித்தவரின் தளத்திற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும் .http://thanjavur14.blogspot.ch/2014/09/blog-post84-blog-award.html மிக்க நன்றி ஐயா! தாங்களும் மென் மேலும் இது போன்ற விருதுகளைப் பெற வேண்டும் என்றே வாழ்த்துகின்றேன்.

அடுத்து பெற்றுக்கொண்ட விருதினைத் தளத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .முதல் வேலையே அது தானே விடுவோமா :))) போட்டும் விட்டேன்! கூடவே என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும் .சொன்னால் போச்சு! இதோ அந்த ஏழு விஷயங்கள் ......


  1. முழுநேர இல்லத்தரசி :)
  2. கலையார்வம் அதிகம் ஆதலால் எதையும் விட்டு வைப்பதில்லை சிலை செய்வது ,சித்திரம் வரைவது கவிதை எழுதுவது ,பாடல்கள் எழுதுவது  பட்டியல் இப்படியே நீண்டுகொண்டே போகும் :)எல்லாம் ஒரு முயற்சி தான் :)
  3. இசை என்றால் உயிர்!( ஐயா இளையராஜாவை நேரில் காண வேண்டும் என்பது என் கடசி  ஆசை !)
  4. கூடவே இன்னொரு கடசி ஆசையும் உண்டு அது பாடல்மேல் உள்ள காதலால் வந்த ஆசை ஜானகியம்மாவை நேரில் கண்டு தொழ வேண்டும்! 
  5. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது (சிறு வயது முதல் ஆதலால் இந்தியாவில் உள்ள மொத்தக் கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் !)
  6. இயற்கையை அதிகம் நேசிப்பவள் .
     7  .எதையாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிகுந்தவள் .                                                                    
இனி நான் செய்ய வேண்டியது இந்த விருதினை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்  . அந்த வகையில் நானும் ஓர் ஐந்து பேரை இங்கே தேர்வு செய்துள்ளேன் .இவர்களைப் பற்றி அதிகம் நான் எதுவும்  சொல்லத் தேவையில்லைக்   காரணம் இவர்களின் படைப்பாற்றல் அனைவரும் அறிந்ததே .
  • கவிஞர். கி  .பாரதிதாசன் ஐயா 
  • புலவர் இராமனுசம் ஐயா 
  • அன்புச் சகோதரி ராஜி 
  • தோழி அருணா 
  • சகோதரர் ஊமைக்கனவுகள் (இவரது உண்மையான பெயர் தெரியாததனால் புனைப் பெயரைப் பகிர்ந்துள்ளேன்  மன்னிக்கவும் )
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே ! வளமான ஆக்கங்கள் வான் போல பரவட்டும் ....       

அட கவிதை எழுதத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால்  சிலை எப்படிச் செய்வாக :)) 


                                                இப்படித்தான் இதோ பாருங்கள் ..
   

                                                                           நன்றி ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/12/2014

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...


அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2014

எதைக் கற்றுக் கொண்டாய் இயற்கையையும் மிஞ்சுவதற்கு !




கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
கனவில் நினைவில் நிக்குதடா!
அற்றுப் போன  நீதிக்கே
அகிலம் தவியாய்த் தவிக்குதடா!

உற்றுப் பார்த்தால் உள்ளுக்குள்
உணர்வே மெல்லச் சாகுதடா!
பற்றுப் பாசம்  எல்லாமும்
பகட்டு வேஷம் தானோடா!

அண்ணன் தம்பி உறவுக்கும்
அர்த்தம் உண்டோ இந்நாளில்?
எண்ணும் போதே வலிக்குதடா
எங்கள்  இதயம் துடிக்குதடா!

மண்ணும் பெருமை குன்றிடவே
மனிதம் மறந்து வாழ்கின்றீர்!
விண்ணும் வியக்க உயர்ந்தவரே
விடிவை இங்கும் தடுக்கின்றீர்!

அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!
அன்னை மடியைச் சிதைக்கின்றீர்!
பள்ளிப் பாடம் இதுவோடா?
பலதும் கற்ற மானிடனே!

முள்ளில் விழுந்த சேலையைப்போல்
முடிவும் விதியின் கைகளில்தான்!
துள்ளிக் குதித்தும் பயனுண்டோ
துயரம் மிகுந்த வாழ்வினிலே!

எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டீர்!
எங்கும் அமைதியைச் சீண்டி விட்டீர்!
சண்டை இட்டே  சாவதற்காய்
சரித்திரம் மேலும் படைக்கின்றீர்!

புல்லும் இங்கே முளையாது
புழுக்களும் இங்கே வாழாது!
தொல்லை மிகுமே வாழ்நாளில்
துளையுண்ட பூமியின் சாபமிதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2014

கவிதைப் போட்டி -2014 (2வது பட இணைப்புக்கான கவிதை )


                                                             (  பட இணைப்பு -2)

                                                    தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!      

தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!

மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!

எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம்  உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?

கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம்  கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?

சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!

விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?

                                                             (  தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)

                                                 
  
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர்  ரூபன் ,யாழ்பாவாணன் 
ஐயா இணைந்து   நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என் 
                                               இனிய நல் வாழ்த்துக்கள்                                                   
                             http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/29/2014

கவிதைப் போட்டி -2014 (அம்பாளடியாளின் கவிதைகள் )

                                                       (  பட இணைப்பு -1)


தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் ஐயா இணைத்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2014க்குரிய கவிதை இதோ ...


                               திருடா திருடா    

தேன் சுரக்கும் பார்வை என்றன்  பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன்  முன்றலில்

மான்  விழியின்  ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான்  விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?

பால் மணக்கும் பாவை இவள்  முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?

வேல் முருகன் மால் மருகன் நீயடா!  உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத்  தென்பெங்கே?

திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப்   பாட வைக்கும்  காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!

கண்ணெதிரே  காண்பதெல்லாம் கனவா!  நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன்  உயிரே !

                                                                                                                
இப் போட்டியை நிகழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் இப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் !

                                      வாழ்க தமிழ் !வளர்க நின் பணி !
                      http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/26/2014

அருளும் நீயே பொருளும் நீயே






அருளும் நீயே பொருளும் நீயே
        ஆதி அந்தம் அனைத்தும் நீயே !
வெருளும் மனத்தின் சக்தி  நீயே
   வேண்டும் வரத்தை அளிக்கும் தாயே!
உருளும்   உலகில் உனையே நினைத்தேன்
    ஊனுட லிலும் அதையே தரித்தேன்
இருளைப் போக்க  வருவாய் தாயே
    என்றும் நல்லருள் தருவாய் தாயே ...

துணிவைத்    தந்து காக்கும் சக்தியே 
   துணையாய் என்றும் விளங்கும் சக்தியே 
பணிவை  எம்முள் வளர்க்கும் சக்தியே 
   பாசம்   நிறைய வைத்த சக்தியே 
அணியும் உடையும் நீதானே என்றும்
   அன்பாய் மானம் காப்பவளே! துயர்
தணியும் வரையும் வந்த ருள்வாய்
     தூய  சக்தியே துணை நீயே !

முக்கனிச் சாற்றை ஏந்தி வந்தோம்
    மூத்தவள் உனக்கே படைத்து நின்றோம்
எக்கனிச் சாற்றையும் மிஞ்சிடும் சுவையே
    ஏழை எம் மனத்தினில்  குடிபுகுவாய்
துக்கனி வாரணி நீயம்மா எமக்கு !
    தோணியும் ஏணியும் நீயம்மா !
பக்க விளைவினைத் தடுத்தருள்வாய் -செல்லும்
    பாதையில் ஒளியாய் நின்றருள்வாய்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே
   உயிர் களைக்காக்கும் மகாசக்தியே
நாம் சக்தி  பெற்றிட வந்தருள்வாய்
   நல்லதைக் கெட்டதைச் சொல்லிடுவாய்
காம்புகள் பூக்களைத் தாங்கிடலாம்
   கதிரவன் துணையென நின்றிடலாம்
வேம்புகள் நச்சினைப் போக்கிடலாம்
    வேதமே உனையிவை வென்றிடுமோ !
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/23/2014

பேராசை துறத்தலே மிக நன்று !



நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்!
நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டும்!
அல்லல்களைப் போக்கும்  சக்தி எம்மிடத்திலே
அடங்கி ஒடுங்கிக் கிடப்பதையே  உணர வேண்டும்!

வில்லங்கத்தை எவருமிங்கே விலக்க வேண்டும்
வீதியிலே இறங்கும் போதும் அமைதி வேண்டும்!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்!
மேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!

பொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்ததுமில்லை!
போதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்ததுமில்லை !
மெய்யாலே  மேன்மை குன்றிப் போனதுமில்லை!
மிருதுவான நற்குண மிருந்தால் தொல்லையுமில்லை !

கொய்யாதே பிறர்    வாழ்வு கூந்தலுமில்லை!
கோவத்தால் ஆனதிங்கே    ஒன்றுமேயில்லை !
தொய்யாத பண்புள்ளவர் தோத்ததுமில்லை!
தோல்வி என்ற வாசகத்தைப் பார்த்ததுமில்லை !

எண்ணாதே எவருமிங்கே சளைத்தவரில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்ததுமில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை
மானத்தை எந்நாளும் விட்டு வைத்ததேயில்லை !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/22/2014

வெண்கொற்றக் குடையின் கீழே



வெண்கொற்றக் குடையின் கீழே
    வீற்றி  ருக்கும் பெருமானே
பெண்பட்ட பாட்டை அறிந்தும்
    பேசா திங்கே இருப்பாயோ !
புண்பட்ட மனத்தின் வலியைப்
     புறம் தள்ளி வணங்குகின்றோம் 
கண்பட்டுப் போன குடியைக்
     காத்தருள வர வேண்டும்...

மான் என்றே துரத்திப் பிடிப்பார்
  மயில் என்றே ஆட்டிவிப்பார் !
ஏன் என்று வினவா திருந்தால் 
  எந் நாளும் துயரைக் கொடுப்பார் !
நான் என்ற அகந்தை யுடையோர் 
  நலன் குன்றிப் போக அருள்வீர்
வான் சிந்தும் மழையின் ஆற்றல்
  வற்றாது காக்கும் இறைவா !..

பெண்ணுக்குச் சம உரிமைதனை 
  போற்றும்  வகையில் தந்தவனே!
விண்ணுக்கும் வேந்தே ஒளியே
  வெண்தாமரை மலரே கனியே !
மண்ணுக்குள் விழைந்த பொருளே
   மாவிளக்கே எங்கள் தோரணமே
கண்ணுக்குள் எம்மை வைத்துக்
  காத்தருள    வர வேண்டும் !..........

                                           
   
 


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2014

தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்



தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்
 துய்ய நின் பாதத்தைத் தொழுது ஜெயிப்போம் !
சூது  கவ்வும் இடத்திலெல்லாம் தோன்றும் சக்தியே
  சித்த மெல்லாம் உன் நாமம் பத்தி எரிகவே !
சாது எங்கள்  மனத்தினிலே வீரம் பொங்கவே
  சக்தி கொடு எந்நாளும்  வெற்றி கிட்டவே!
காது குளிர அழைக்கின்றோம்  தேவி துர்க்கையே
   கருணையோடு களமிறங்கி காத்தருள்கவே !

பஞ்சமியில் படை திரட்டி வந்த துஷ்டரை
    பரலோகம் அனுப்ப வல்ல சக்தி நீயடி !
தஞ்சமென்று நின் பாதம் தொழுது நிற்கின்றோம்
    தாயே          வா தர்மத்தைக் காத்து அருளிட !
வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
   வாழ்   வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/13/2014

இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு


இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு
இதயம் இங்கே வலிக்குதடா ........
உரங்கள் மேலும் போட்டுப் போட்டு விதியும்
உரசிப் பார்த்து மகுழுதடா ...

வரங்கள் அருளும் சாமிக்கும் தான்
வாழ்க்கை இங்கே கசக்குதடா ....
சுரங்கள் தப்பிப் போன கீதமே எம்
சொந்த மண்ணில் ஒலிக்குதடா  .....

நிலை(மை) மாறும் மாறும் மாறும் என்ற
நினைப்பும் செத்துப் போனதடா......
தலை தாழும் நிலையில் வாழும் ஆசைகள்
தானாய் ஓடி மறையுதடா .....

தமிழா தமிழா தமிழா எங்கள்
தாயின் மடியைப் பார்த்தாயா !!..
ஒருதாய் பெற்ற பிள்ளைகள் எங்கள்
உணர்வை ஒன்று சேர்ப்பாயா ...???

மரங்கள் பேசி மகிழும் மண்ணின்
மகிமை உணர்த்த உறவுகள் நாம்
தரங்கள் பார்த்துப் பிரியும் போது
தாக்கம் இனியும் பெருகுமடா .......

அடிமை விலங்கை உடைத்தெறியும்
ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
விடை நீ கூறு எம் விழியைப் பாரு
வீதியில் போகட்டும் வேற்றுமை தான் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2014

அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு



அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு
அம்மா துடிக்கின்றாள்
அவள் அடி மடி மீது கையை வைத்தவன்
இடியாய் இடிக்கின்றான்

கொலைவெறி கொண்ட நாகமும் நரியும்
கூட்டாய்ச் சதி செய்ய
எதிரியின் கைகளில் மலர்களைத் தந்து
எங்கே நான் செல்ல ?......

விடியலைத் தேடும் பறவைகள் இவர்களின்
முடிவை யார் அறிவார் ?..!!
கருணையின் கடலே கற்பகத் தீவே
காப்பாய் மிக நன்றே .....

பொழுதுகள் புலருது பூக்களும் கருகுது
பூமியில் தினந்தோறும்
அழுபவர் குரல்களை நசுக்கிடும் கொடியவர்
அழிவுற வழி செய்வாய் ....

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...

சூரனை வதைத்த நாயகனே
சுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/01/2014

மரண ஓலம் கேட்கிறதே


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த உலகினில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....

                                              (மரண ஓலம் கேட்கிறதே....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.