12/17/2014

முருகா முத்தமிழ்க் குமரா !


மண்ணும் வியக்க நின்றவனே  
மதுரத்  தமிழின் நாயகனே !
எண்ணும் பொழுதினில் வந்திங்கே
ஏற்றம் தந்து அருளாயோ !

கண்ணும் உன்றன் கழல்தேடிக்
காத்துக் கிடக்குது காவலனே!
விண்ணும் அதிர வந்தேதான்
விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய் 

பண்ணில் நிறைந்த படரொளியே
பாடும்  குயிலெனைப் பாடவைப்பாய்
கண்ணில் உன்றன் நினைவேந்திக் 
கவிதை மழைநீ பொழிய வைப்பாய் 

நண்ணும் துயரை நறுக்கியொரு
நாட்டம் அருள்வாய் நாளுமிங்கே
கண்ணும் கருத்தும் ஆனவனே
கருணைக் கடலே தேனமுதே !

செக்கச் சிவந்த மேனிதனில்
சேர்த்து முடிப்பேன் சந்தனத்தை
சொக்க  வைக்கும் சுந்தரனே
சோலை வனத்தின் நாயகனே!

பக்கம் வந்தால் போதுமிங்கே
பாமழை பொழியும் தன்னாலே
மிக்க நலன் தரும் பார்வையினால்
மீட்டுக யாழென என் மனதை ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. விண்ணும் அதிர வந்தேதான்
    விரும்பும் வரத்தைத் தந்தருள்வாய்

    பண்ணில் நிறைந்த படரொளியே
    பாடும் குயிலெனைப் பாடவைப்பாய்
    கண்ணில் உன்றன் நினைவேந்திக்
    கவிதை மழைநீ பொழிய வைப்பாய் //

    கவிதை அருமை சகோதரி!

    ஏற்கனவே அப்படித்தான் பொழிந்து கொண்டிருக்கின்றீர்கள். தமிழ் கடவுள் இன்னும் உங்களைப் பொழிய வைப்பான்....நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    வண்ணத்தமிழ் கொண்டு மலையுறை வேலனின் புகழ்பாடிய விதம் சிறப்பாக உள்ளது.
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமை அருமை முருகன் துதி
    தம. 2

    ReplyDelete
  4. பக்கம் வந்தால் ----பா மழை பொழியும் தன்னாலே.

    பா மாலை --பா சரம் -பா ரசம் --பரவசம்
    பழனிமலை பாலகனால்.
    அமுதமழை -அருள் மழை-
    அழகர் கோவில் ஆண்டவனால்,
    தித்திக்கும் தேனமுதம் ,
    திகட்டா அகமகிழ் அமிர்தம்
    திருத்தணி திருமேனி .
    வீரம் -விவேகம் -அப்பனுக்கே தந்த
    சுப்பன் சுவாமிமலை,
    சுந்தரத் தமிழில் சுப்பிரமணியன்
    பண் பாடும் திறன் தரவே,பெறவே
    நாளும் ஆறுமுகம் அவன் புகழ் பாடு.
    th

    ReplyDelete
  5. பாமாலை அருமை
    நன்றி சகோதரியாரே
    தம3

    ReplyDelete
  6. சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...

    ReplyDelete
  7. சொக்க வைக்கும் வரிகளும் அருமை அம்மா...

    ReplyDelete
  8. https://www.youtube.com/watch?v=FMQV_4bg6Pw

    தங்கள் பாடலை இங்கு கேட்டு மகிழுங்கள்.

    பாடல் எங்கிலும் முருகன் என்ற சொல் இலாது கண்டு, நானே
    முருகா, குமரா,கந்தா, வேலா என்று சேர்த்துக்கொண்டேன் ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும்.

    பிழை எனின் பொறுக்கவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  9. ஆகா எப்படி இப்படி தமிழ் அருவி மாதிரி கொட்டுகிறது ?
    அற்புதமான பாடல்

    ReplyDelete
  10. உங்கள் மனதை மட்டுமல்ல எங்கள் மனதையும் மீட்ட அழைக்கிறோம்.

    ReplyDelete
  11. முருகன் என்றாலே பாடல்கள் பொங்கி வரும் ! அருவியாய் கொட்டுகின்ற சந்தங்களை ரசித்தேன் ! வாழ்த்துக்கள் ! பதிவு எழுதத் தொடங்கும் போது, நான் பதிவு செய்த முருகன் பாடலையும் பாடிப் பாருங்களேன் !
    http://psdprasad-tamil.blogspot.com/2006/12/sing-along-1.html

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........