3/31/2011

இது யார் செய்த பாவமோ!....

நீல மேகம் குடை பிடிக்க
நிலா வந்து ஒளி கொடுக்க
நாமும் உந்தன் மடிமீது
நனைகின்றோம் தினம் விழிநீரில்!

தூக்கத்தை துக்கம் முழுங்கியது
தூசி தட்டியே பல இரவுகள்
தூங்காமல் இங்கு விடிகிறது!
ஏக்கத்தில் எம் மனம் தவிக்கிறது!

எதிர்பார்த்த சுதந்திரமோ இங்கு
எதிரி கையில் இருக்கிறது!
காக்கும் தெய்வம் உறங்குவதால்
காவலின்றி மனம் புலம்புகிறது!!

தீக்குளித்தே நெஞ்சுக்குள்ளே
தினம் தீயணைப்பு நிகழ்கிறது! 
போர்க்களத்தில் எம் வாழ்க்கைப் 
போராட்டம் தொடர்கிறதே!

இதை ஊக்குவிக்கும் பல மிருகங்களும்  
எம் உணர்வுகளை உணர மறுக்கிறதே!
முட்டாள்கள் தினத்தன்று இவர்களுக்கும் 
முடி சூட்ட யார் வருவாரோ! 

பல அற்பர்களின் ஆசைக்கெல்லாம் 
அடங்கிப் போகும் எங்கள் வாழ்க்கைச் 
சக்கரத்தைச் சுழற்றிச் சுழற்றி 
சதிசெய்யும் விதியே எமை விட்டுப் போகாயோ !

கர்ப்பம் தரிக்கும் வயதின் எல்லை
காணாத சிறிய முல்லை மொட்டு
கயமை கொண்ட வண்டினத்தால்
கருவுற்றுக் கருகிப் போகுதே காவலற்று!

சற்றும் இரக்கம் காட்டாது
சாக்கடையில் வீழ்த்தி எம்மை
அச்சுறுத்திப் பெற்ற இன்பம்
அழிக்காதோ இவர்கள் வாழ்வை!

இந்த முட்டாள்கள் கொள்ளும் வெறி 
முன்னேறும் பாதை எங்கும் 
 பற்றாதோ  தீயாய்   இங்கே
எம் பத்தினிகள்  விட்ட சாபம் ஏற்று!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/25/2011

உன்கனவு நினைவாகும் காலமிது!......

பாரதியே உம்மை நாம்  வணங்குகிறோம் !
பகலிரவு உன் பேச்சில் மயங்குகிறோம்!
நீதி சொன்ன மன்னன் இங்கு நீயல்லவோ!
நிமிர்ந்து நிற்கும் பெண்ணினத்தின் தாயல்லவோ!
சூளையில் இட்ட செங்கல் மனையானது !
மனையாளின்  மனமறிய மனம்  என்றும்  கல்லானது!

பாரதி உன் மனமோ இதனால் புண்ணானது!
மறத்தமிழன்  பாட்டு  எமக்குத் துணையானது!
சாதிவெறி கொண்டவர்க்குக் காலனாய்  நின்றாய்! 
சங்கடத்தில் நின்றவர்க்கு சக்தியாய்  நின்றாய்!
வீரமற்ர மனிதர்கள் முன் வேங்கையாய் நின்றாய்!
வியர்வை சிந்தும் உழவருக்குத் தோழனாய் நின்றாய்.!

சாத்திரங்கள் பெண்ணினத்தின் வாழ்வை இருட்ட
சந்திரனாய் சூரியனாய் வந்த  பாரதியே!
பாட்டிசைக்கும்  வல்லமையால் பாரதத்தை வென்றாய்!
பாவையரின் சுதந்திரப் போர் வீரனாய் நின்றாய்!
ஏட்டினிலே  எமை வாழ வைத்த தெய்வம் நீ!
எங்கிருந்த போதினிலும்  உன்னை மறவோம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2011

வாழ்க்கையில் வெற்றிகொள்ள

உடலைக் கோவிலாக்கு
உன் உள்ளத்தைத் தெய்வமாக்கு
சத்தியத்தின் வழியில் நீ நீயாகவே இரு
உன் எதிரில் வரும்
வஞ்சனைத் தீயையும்,வதந்தியையும் அன்பெனும் நீரூற்றால்
அணைத்துச் செல்
முடியவில்லை எனில் அடித்துச் செல்
வெற்றி என்றும் உனதாகும். 
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

தத்தித் தத்தி நடந்து வாறா

தத்தித் தத்தி நடந்து வாறா
எங்கள் தங்கப்  பாப்பா
அவ பத்து விரலையும் 
மூடிகொண்டே ஓடிப் பாப்பா.....

கலர் கலராய்ப் பொட்டுச் 
சட்டை போட்டால்  
 நல்லாய்ப் புதினம் பார்ப்பாள்
பட்டுப் பூச்சி போலவந்தும் 
தொட்டுப் பார்ப்பாள் .............

வட்ட நிலா போல வந்து
எட்டிப் பார்ப்பாள்- கட்டி 
நாங்கள் அணைப்பதர்க்குள் 
கலைந்து  செல்வாள் .......

கெட்டிக்காறக்  குட்டி இவள்
பாட்டும் பாடுவாள்-  தன்
பாட்டி சொன்ன கதைகளையும் 
வடிவாய்க் கேட்டுச் சொல்லுவாள்!.....   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2011

பத்துத் தலை இராவணனின்

பத்துத் தலை இராவணனின்
பரம்பரை அழியவில்லை
மொத்தத்தில மக்களது
துக்கம் இன்னும் குறையவில்லை

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா 

குத்தங் குறை சொன்ன மக்கள் 
குழப்பங்கள் குறையவில்லை 
மொத்தத்தில சீதை அம்பாள் 
விட்ட கண்ணீர் ஓயவில்லை 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

அர்த்தமற்ற வாழ்க்கையிதில்
அனர்த்தங்கள் குவிந்திருக்கு  
சத்தியத்தைக் காப்பதற்கு 
சங்கடந்தான் நிறைந்திருக்குது 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

புத்திகெட்ட மானிடர்க்கு
புகலிடம் எங்கிருக்கு
சத்தியத்தைக் காத்து இங்கே
சங்கடத்தைப் போக்கிடுவாய்......

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

விதவையும் ஒரு பெண்ணே!.....


மனசுக்குள்ள பாரம்
மதி மயங்கும் நேரம்
உறவுகள் றொம்ப  தூரம் 
உருக்குலையுது  சதுரம்!

இது இறைவன் தந்த வரம் 
இல்லை இங்கு இன்ப சுரம் !
நாம் பட்டுப் போன மரம் 
இதனால் பேச முடியவில்லை வீரம்!

பெண்ணுக்கேது  சுதந்திரம் 
அவ பொறுமை காக்கும் இயந்திரம்! 
வந்த துயர் என்றும் நிரந்தரம் !
வாழ்நாளில் இறங்காது இந்தப் பாரம்!

பெண்மை போற்றும் சரித்திரம் 
உட்பூசல் நிறைந்த தந்திரம் 
 இயம்புகின்றார் பலசாஸ்த்திரம்
இட்ட கட்டளைக்கு அடங்குது எம் சரீரம்!

கத்தரிக்க நினைக்குது பல கரம்! 
காட்ட முடியவில்லை அதிகாரம் 
எங்கும் வேதம் ஓதிடும் மந்திரம்
அது விளங்கிக் கொள்ள  முடியாத பெரும்  சூத்திரம்!

 ஏனோ எழுதினார் எமக்கென தனியான பத்திரம் !
இதுதான்  தாங்க முடியாத பெரும் துயரம்!
இதனால் நாங்கள் கொள்ளவில்லை  ஆத்திரம்
இருந்தும் நம்மைக் காக்க எடுக்க வேண்டும் புதிய பாத்திரம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

கோமாதா பூஜை செய்வோம்.....

புல்லைத் தின்னும்
பசுவின் பாலை
பிள்ளை குடித்து வளருதடா!

இதில் உள்ள சத்து 
உடலைக் காத்து 
உயிரை வாழ வைக்குதடா! 

அன்னை போல 
எம்மைக் காக்கும் 
ஆவின் குணத்தை அறிந்தவர்கள் 

இன்றும் இதனை 
வணங்கி  இங்கே  
இதற்கும் பூஜை வைத்தனரே!

அன்னையர் தினம் போல்
இன்றயநாளை அனைவரும்
மகிழ்ந்து கொண்டாடி

இதன் ஆசிகள் பெற்று
ஆயுட் பலமும்
அமைதியுமுற்று வாழ்ந்தாரே!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/01/2011

அணையைத் தாண்டுது துயரம்

அணையைத் தாண்டுது                                                                                                   துயரம் இங்கே அம்மா வருவாளோ.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயோ நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயோ...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/27/2011

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

காற்றுக்கு வேலிபோட எண்ணும்
பிறர்  கூற்றுக்கு  இசைந்தாடத்
தென்னங் கீற்று அல்லடா நாம்
தமிழ்தேசத்தின் விடுதலை ஊற்று!

தோற்றுவிடுமோ எம்மினம்! 
தொலைந்துவிடுமோ எம்தமிழ்!

சேற்றுவயல் நாற்று நட்டு 
செந்தமிழில் பாட்டிசைத்து
ஊற்றெடுத்த தமிழ் உணர்வுக்கு 
ஒருபோதும் பஞ்சமில்லை! 

வேற்றுமொழி நாட்டினிலும் 
விரும்பித் தமிழ் கற்பவர்கள் 
காட்டுகிறார்  தன்திறனைக்
கணணியெல்லாம் கண்டுகளி!

நூற்றுக்கும் பலநூறு ஆண்டுகள் 
பழையமொழி இம்மொழி தோற்றிடின்
தொலைந்துவிடுமே துலங்குகின்ற
நற்கலைகளெல்லாம் உலகினிலே!

முத்தமிழுக்கு இணையான இனிய
முதுமொழியும் தாம் கண்டதுண்டோ!
எப்பரம்பரை ஆண்டதிந்தத் தமழ்மொழியென
அறிந்தும் அகந்தையால் விரட்டிநீரோ!

சற்ப்பத்தைக் கழுத்திலே சரமாக 
மாட்டியவன் அப்பனாக இருந்தாலும்
அவனுக்கும் பிரணவத்தின் பொருளுரைக்க  
ஆசானாக அமர்ந்து கொண்டானே அன்று 

அந்தக் கூர்வடிவேலனையும் ஆளும் 
எம் தமிழோ  அழிவுற்றுப்  போகும்!
பித்தம் தலைக்கேறிப்  பிதற்றுவார்
பிதற்றலையும் மிரட்டலையும் 

புறம் தள்ளி முன்னேறிச்  சென்று
அற்புதமாய் இதன் வளர்ச்சி
அகிலமெல்லாம் பரவுதுபார் 
அதிவேகமாய் இன்றும்!                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

திருச் சிற்றம்பலம்

ஆழ்கடலும் ஆழியும் ஏழிசைக்கு  இசைந்தாடும் 
ஏழிசையும்  என்னப்பன் முருகனின் அசைவிர்ற்கு
இசைபோடும் பார்புகழும் கந்தனின் பாதம் தொழுதேற்றின்
வான்மழை போல் நின்னாவில் வந்துதிக்கும் கானமழை 
கந்தனின் நல்லருளால்  கல்லும் கவிபாடும் 
சொல்லும் அதன் பொருளும்  பெருஞ்   
சோதியின் முன்னின் றொளிரும்   பொன்னெனவே 
பொருள் விளக்கும் கந்தன் திருப் பாதம் போற்றி போற்றி
  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/25/2011

திருச்சிற்றம்பலம்

ஈராறு கரமும் இடர் தீர்க்கும் மனமும்
இணையில்லா அழகின் திருவுருவே
ஈசன் மைந்தா எமையாளும்  முருகா
உனையன்றி வேறு துணையேதும் உண்டோ 
இம்மானிடர்க்கு  விளையாடும்
வண்ணமயில் வாகனனே நீ எம்
துணையாக வேண்டி நின் பதம் 
தொழுதேற்றினோம் வரவேண்டும்
வரம் வேண்டும் தமிழ் தந்த குமரா
முருகா சண்முகா  அவ்வைக்கருளிய
சரவண பவகுகா சஞ்சலம் தவிர்க்கவா
சிவ சக்தி பாலகா சர்வ லோக நாயகா
அவலங்கள் தீர்க்கவா ஆதிசக்தி வேலவா 
தமிழன்னைக் கருளவா தாயகத்தை மீட்க்கவா
மொழி தந்த வேலவா முன்னின்று காக்கவா 
அழியாத கீர்த்தி புகழ் அனைவர்க்கும் தந்தருளும்
முருகா உன் பொற்பதம் போற்றி போற்றி.......   
     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/24/2011

வீட்டு மிருகங்கள்

குட்டி முயல் கூட்டுக்குள்
கொறித்துத் தின்னுது கரட்டைப் பார்!                      கொண்டைச் சேவல் கோழியுடன்
விதைகளைக் கொத்தித் தின்னும் குஞ்சுகள் பார்!

ஆட்டுக் குட்டியும் மாட்டுக் கன்றும் குழைகளை
அழகாய் மென்று தின்பதைப் பார்!
வாத்துக் கூட்டம் தண்ணிக்குள்ளே 
வடிவாய் மிதந்து செல்வதைப் பார்!

பூனைக் குட்டிகள் கூரைமேல் 
எலிக் குஞ்சைப் பிடிக்கத் தாவுது பார்! 
கொளுத்த பூனை அடுப்படியில் 
கொதித்த பாலையும் குடிக்குது பார்!

நாய்கள் போட்ட குட்டிகளுக்கு 
நல்லான் உணவு கொடுப்பதைப் பார்!
அவை வாங்கித் திண்ட சோற்றுக்கு 
வளமாய்க் காவல் காப்பதைப் பார்! 

பெட்டை நாயும் கடுவன் குட்டியும் 
புல்லைப் பித்தம் தெளியத் தின்னுது பார்! 
வண்ணக் கிளிகள் குஞ்சுகளுடனே 
வடிவாய்த் தொங்கும் கூட்டைப் பார்! 

அவை எண்ணம் போல மாம்பழத்தை 
இனிதே கொத்தித் தின்பதைப் பார்! 
வீட்டு மிருகம் இவைகள்தான் நாம் 
விரும்பி வளர்க்கும் செல்வங்கள் பார்!  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/15/2011

பெண்ணே பேசு...

பள்ளிப் பருவத்திலே
புத்தகங்கள் சுமந்தாள்
பருவ  வயதினிலே 
கற்பனைகள் சுமந்தாள் 

கன்னியான  போது
கனவுகள் சுமந்தாள் 
கல்யாணம் ஆனதும் 
கருவினைச் சுமந்தாள் 

தாயுமான  போது தன் 
கடமையினைச் சுமந்தாள் 
தலை விதி மாறியதனால் 
தனக்குள் வேதனை சுமந்தாள் 

பெண்ணெனப் பிறந்ததனால் 
பழியினைச் சுமந்தாள் 
பெண் பேசாது இருந்ததனால் 
தனக்குத் தானே சுமையானாள்!    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உன்னைப் போல தெய்வம் ஏது....


அக்கினியைச் சுற்றிவந்து
அடுப்படியில் கிடப்பவளே!
குற்றங்  குறைகள் சொன்னாலும் 
குழப்பம் இன்றி உழைப்பவளே!

பத்தினியே உன் வாழ்வு 
பகலிரவு பார்த்ததுண்டா?
பாசத்தைக் கொடுத்தாலும் 
பண்பற்றவர்கள் அதை ஏற்றதுண்டா?

முற்றத்தில்  கோலம் போடும் 
உன் "இதயம் "முள்மீது  சேலை போல 
அன்றாடம் கிழிக்க  தைத்தும் 
அழகாகத் தோன்றும் தாயே!

எம் பண்பாடு உன்னைப்போல் 
பெண்தெய்வத்தை வஞ்சித்தாலும் 
பண்போடு வாழ்ந்து காட்டும் 
இந்தப் பாசத்தை உலகம் போற்றும்! 

கருவுற்றுத்  தாயாய் நின்று 
கடமைக்குக் கட்டுப்பட்டு 
சிசுவுக்குப் பாலைத் தந்து 
சீராக வளர்க்கும் தாயே!

பொறுமைக்கு உன்னைப் போல 
பூமித்தாய்  உள்ளவரை 
உலகத்தின் நலன்கள் எல்லாம் 
உன்னால்தான்   பெருகுதென்பேன்!

மனம் போன போக்கில் என்றும் 
மற்றவர் பேசும் பேச்சில்
இனங்காணாது போன உன்  பண்பை 
இடரின்றிச்  செயலால் காட்டி 

வலுவுற்ற பெண்ணாய் நின்று 
வாழ்க்கையை வெல்லும் தாயே! 
உனக்கொரு கோவில் இல்லை 
இருந்தும் உன்னைப்போல் தெய்வம் இல்லை! 

உயிருக்குள் உயிரைச் சுமந்து 
உயிர்களைப் படைக்கும் தாயே! 
ஓடோடி வந்து எங்கள் 
உயிர்களைக் காக்கும் தாயே!! 

உன்னைப்போல் தெய்வம் ஒன்றை 
உலகில் யாம் கண்டதில்லை! 
கண்கண்ட தெய்வம் நீயோ 
தினம் கண்ணீரில் நீந்தும் பொம்மை!

புண்பட்டது என் நெஞ்சம் அம்மா!
இந்தப் பொல்லாத உலகம் கண்டு
கண் கெட்டபின்   நமஸ்க்காரத்தை
அந்தக் கதிரவனுக்கும் சொன்னாரம்மா!

காலத்தின் தீர்ப்புக்காக் காலமெல்லாம்
காத்திருந்து சருகாய்  போகும் 
தாயே!  உன் அன்புக் கரத்தால்
உண்டால் விசமும்   அமிர்தமாகும்!

              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/13/2011

இதை நீ அறிவாயோ.......


மலர் விழி மூட மறுக்கிறதே
என் மனமுனைத் தேடி அலைகிறதே
தினம் ஒரு கவிதை வடிக்கிறதே
ன்னைத் தீண்டிட இன்பம் துடிக்கிறதே!

பொழுதுகள் விடியத்  தாமதம் ஏன்?
என் புன்னகை எங்கோ தொலைகிறதே
விடியலைத் தேடி விழிக்கையிலே
இதயம் பட பட என இங்கு அடிக்கிறதே!

அலைகடல்போல் மனம் மோதையிலே
அடிக்கடி துயரம் பெருகிறதே!
விதி அது உன்னைச் சேராமல்  தடுக்கிறதே! 
வாழ்க்கை விடுகதையாகத் தொடர்கிறதே! 

கனவிலும் நினைவிலும் உன் முகத்தைக்
கண்கள் கண்டிடப்  பலமுறை   உழல்கிறதே!
தொலைவினில் உன் முகம் தெரிகிறதே 
பேச்சுத் தொடுத்திட வார்த்தைகள் குறைகிறதே! 

என் மூச்சுக் காற்றே நீயெங்கே!-மனம் 
உன் நிலையதை  அறியத் துடிக்கிறதே!
காணாத பொழுதெல்லாம் 
காதல் கண்வழி நீராய்க்  கரைகிறதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/06/2011

துன்பம்....

நோயினால் வரும் துன்பம்
மருந்தினால் தீரும்
வருவாயில்லாத துன்பன்
வேலை செய்தால் தீரும்
பிள்ளைகளால் வரும் துன்பம்
புரிந்துணர்வால் தீரும்
உறவுகளின் பிரிவினால் வரும் துன்பம்
காலப் போக்கில் தீரும்
ஊரார் பேச்சினால் வரும் துன்பம்
உதறித் தள்ளினால் மட்டுமே தீரும்!
நல்லவனால் மட்டுமே துன்பப்பட  முடியும்
கூடவே திடமான சகிப்புத் தன்மையும் இருக்குமாயின்
வாழ்வில் வரக்கூடிய அத்தனை துன்பமும்
வலுவிழந்து போகும்!
துன்பம் வாழ்க்கைத் தத்துவத்தை
முழுமையாகக் கற்றுத்தரவல்ல
மிகச் சிறந்த ஆசான்!
இது சாபமல்ல
வரம்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/04/2011

கல்லறைக்குப் போகாதே!.........


கனவுகள் தாங்கும் பைகளுக்கிடையில்
கந்தகத் தூளை விதைக்காதே நீ
காதல் என்னும் மந்திரம் ஓதிக்  
காட்டுத் தீயை மூட்டாதே!

உறவுகள் போடும் பாலம் தாண்டி
உயிர்களை நீயும் அழைக்காதே!
உண்மைக் காதலர்  வேஷம் போடும்
உணர்வை இங்கே வளர்க்காதே!

காதல் என்னும் நோயைக் கொல்லும்
கவிஞர்கள் பாட்டும் தோத்தாச்சு!
கல்லறை போகும் காதலர் நெஞ்சும் 
கணக்கு இன்றி  ஆயாச்சு!

இன்னமும் உந்தன் எல்லைக்குள்ளே 
இருப்பவர் நெஞ்சும்  கல்லாச்சு 
மன்மதனே உன் பானம் இன்று 
மனிதனைக் கொல்லும் வில்லாச்சு!

சீச்சீ..... சீச்சீ.....உன்றன்  உறவால்
மனிதன் சிறப்புக் கெட்டுப் போயாச்சு
போ...போ.....போ...போ.....
போ...போ.....போ...போ.....

புன்னகைப் பூக்களைப் பறிக்காதே!
பூமியில் உயிர்களை வதைக்காதே!
சந்நிதி போகும் பக்தர்கள் நெஞ்சை
சாக்கடைக்கு அழைக்காதே!

சரித்திரம் படைக்கும் நாயகர் நெஞ்சில்
சஞ்சலத்தை  விதைக்காதே!
அன்னம் தண்ணி மறந்து இங்கே
அவதியுற  நீ வைக்காதே!

ஆசை ஊட்டும் வார்த்தை பேசி
அறிவை   மழுங்கச்  செய்யாதே!
அல்லல் படுத்தும் இன்பம் தந்து
அமைதியை என்றும் குலைக்காதே!

நின்மதி இங்கே  நிரந்தரம் அற்று
நினைவை இழக்கச் செய்யாதே!
நீர்க்குமிழ் போல்  மகிழ்ச்சியைத் தந்து 
நித்தம் துயரில் ஆழ்த்தாதே!

உண்மைக் காதல் ஒன்றை மட்டும் 
உயிர்கள் பெற்றால் போதுமடா!

பொன்னொடு ,பொருளைத்  தன்வசமாக்கப் 
போலிக் காதல் புரிபவதென்ன!
மன்மதனே உன் லீலை விரும்பி 
வண்டைப் போல அலைபவதென்ன!

இன்னமும் எதற்கு இவர்களை வளர்த்தாய்
இருக்கும் துன்பம் போதாதோ ?
இயற்க்கை கொடுக்கும் மகிழ்ச்சியைக் கூட 
நீ இடையில்  பறிப்பது  முறைதானா?

காதலரே கொஞ்சம் கவனம் தேவை 
கண்ணை மூடிச் செல்லாதே!
காலன் வருவான் காதல் என்பான் 
உன் கருத்தை உடனே தெளிக்காதே!

எண்ணம்போல முடிவெடுத்தால் 
இயற்க்கைகூடத் தடுக்காதே பின் 
கண்ணில் நீரை வரவழைத்து 
கல்லறைப் பூக்களைக் கேட்காதீர்! 
கடவுளை மேலும் பழிக்காதீர்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/03/2011

வருக!... வருக!.....

                                          
நீ வந்து குடியேறி
என் நினைவெங்கோ  போனதடி
இரவுக்கும் பகலுக்கும்
இடமாற்றம் தெரியலடி!
இதயத்தின் துடிப்பெல்லாம்
இரட்டிப்பாய் ஆனதடி!
தொண்டைக்குள் கெண்டை மீன்
துள்ளி விளையாட  
அண்டைய பகுதியெல்லாம்
அவதியுற்றுப்  போனதடி! 
                                          
வலை போட்டு  நான் பிடித்த
வார்த்தை மீன் நழுவுதடி! 
அகராதி தேடி மனம்
அவதியுற்றுப் போனதடி!
எப்படியோ கருவுற்றால்
இடை இடையே கருச் சிதையுதடி! 
வெள்ளைத்தாள்  நினைவில் வந்து
வெறுப்பூட்டிச் செல்லுதடி!
 விரயத்தை  மனதில் கொண்டால் 
படைப்பு வீணாகிப் போகும் என்று
நான் போட்ட கணக்கு இப்போ
நல்லாத்தான் வேலை செய்யுதடி! 
                                         
கவிதைக்கும்  சந்தம் வேண்டும் 
கருத்துக்கள்  நிறைய வேண்டும்
உருவத்தால் சிறுத்திருந்தாலும்
உட் பொருள் அதிகம்  வேண்டும்
அம்மாடி உன்னைப் படைக்க
அருந்தவம் இருக்க வேண்டும்!
ஆசை நான் வைத்து விட்டேன்
அவஸ்தையும்   பட்டுவிட்டேன்!
ஆனாலும் உன்னைத்தானே
 என் ஆருயிர் என்று சொல்வேன்!

                                          
அடி  கன்னித் தமிழே!
என் அன்னை மொழியே!
உன்னைக் காக்கும் தமிழர் நெஞ்சில்
எண்ணம்போல் உருவெடுப்பாய்! 
இதயத்தை  மகிழ வைப்பாய்! 
எங்கள்  தமிழ் மொழியின் பெருமை 
என்றென்றும் வளம்  குன்றாது பெருக
கவிதை மகளே! உன்  வரவுகள்  
என்றும்  பெருகட்டும்! 
வானம் உள்ளவரை தமிழ்
வாடைக் காற்று எங்கும் வீசட்டும்!
                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

2/02/2011

அக்கா அக்கா மயிலக்கா....

                                                  அக்கா அக்கா மயிலக்கா  
                                                  ஆட்டம் ஒன்று போடக்கா 
                                                  கூட்டம் சேரும் பாரக்கா!.......
                                                  கூடி  மகிழ்வார் பாரக்கா
                                                  நாட்டியத் தாரகை நீயக்கா
                                                  நடனம் ஆடும் மயிலக்கா!.....
                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/31/2011

எங்களை விட்டு விடுங்கள்......

                                                 எமக்கும் மேல் ஓர் அறிவை
                                                 இனாமாகப்   பெற்றவர்கள்!
                                                 தனக்கென  ஒருபெயரைத்
                                                 தானாக   வைப்பவர்கள்!

                                                 ஆடைகள்   அணிந்திருக்கும்
                                                 அர்த்தமற்ற மனிதர்கள்!
                                                 நாளும் இங்கே சண்டை போட்டு
                                                 நாட்டைக் குலைப்பவர்கள்!

                                                 வாய்நிறையப் பொய் பேசி
                                                 வழக்கில் என்றும் வெல்பவர்கள்!
                                                 காசு,பொருள் தேடிக்
                                                 காலத்தைக் கழிப்பவர்கள்!

                                                 அடுத்தவர் சந்தோசத்தை
                                                 அடிக்கடி கெடுப்பவர்கள்!
                                                 அற்பசுகம் தேடியே
                                                 அலையாய்  அலைபவர்கள்!

                                                  தப்பென்று தெரிந்தும்
                                                  தவறுகள் செய்பவர்கள்!
                                                  கற்புடைய  மனிதர்களை
                                                  களங்கப்பட வைப்பவர்கள்!

                                                  நல்லவர்போல் நடந்து
                                                  நட்பைக்  கெடுப்பவர்கள்!
                                                  குள்ளநரி வேலை செய்து
                                                  குடும்பத்தைப் பிரிப்பவர்கள்!

                                                  அல்லலுற வைத்து இங்கே
                                                  ஆனந்தம்  கொள்பவர்கள்!
                                                  வள்ளல்போல் நடித்து
                                                  வாய்க்கரிசி போடுபவர்கள்!

                                                  பொல்லாத  கோவத்தையும்
                                                  புன்னகையால் மறைப்பவர்கள்!
                                                  சந்தர்ப்பம்  பார்த்திருந்து
                                                  சகலதையும் முடிப்பவர்கள்!

                                                   தனக்கென ஒரு நீதி
                                                   தாராளமாக உரைப்பவர்கள்!
                                                   அடுத்தவர் கதை பேசியே
                                                   ஆயுளை முடிப்பவர்கள்!

                                                   பொய்யிலே உறைந்து
                                                   பொறாமையால் மனம் புழுங்கி
                                                   இல்லாத கதை பேசி
                                                   இழிச்செயல் புரிபவர்கள்!

                                                   அறிவை வளர்க்கப் பள்ளி சென்றும்
                                                   உலகை அழிக்க  குண்டு வைப்பவர்கள்!
                                                   இவர்களுக்கு இணை நாம் என்று
                                                   இனி  எப்போதும் கூறாதே!

                                                    தன்னைத் தானே அழிக்கும்
                                                    உன் இனத்தின் கதையைக்
                                                    கேட்க்கப் பிடிக்கவில்லை!
                                                    உங்களைப்  பார்க்கப் பிடிக்கவில்லை!
                                                    இதற்குமேல் எதையும்
                                                    பேசப் பிடிக்கவில்லை!                                                                                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.