காலம் கடந்து பெண்ணிங்கே
காற்றில் மிதந்து செல்கின்றாள் !
ஏலம் விடுவோர் பின்வாங்க
என்றும் புதுமை காட்டித்தான் !
கோல விழியாள் தான்கொண்ட
கொள்கை எதுவும் மாறாமல்
பாலம் அமைத்துச் செல்கின்றாள்
பார்ப்போர் உள்ளமும் கொண்டாட!
பெண்ணை அடிமை என்றோரும்
பெருமை கொள்ளும் பொற்காலம்
மண்ணில் தவழக் காண்கின்றோம்
மாற்றம் இதுவே போதாதா?..
கண்ணை மதிக்கத் தான்வேண்டும்
காலம் கடந்த பின்னாலும்
எண்ணக் கருத்தில் மாற்றத்தை
என்றும் விரும்பார் மாறுகவே !
சட்டம் வகுத்தார் பெண்ணுக்குச்
சார்பாய் எதுவும் இல்லாமல் !
திட்டம் இதனைத் தான்வென்று
தீபோல் எழுந்து நிற்கின்றாள்
பட்டப் படிப்பால் எப்போதும்
பாரை வியக்க வைக்கும்பெண் !
முட்டப் பகைமை கொள்ளாதீர்
மூடர் எனவும் நில்லாதீர் !
ஆட்டம் இழக்கச் செய்திடுவாள்
ஆளும் திறமை தான்கொண்டு !
பாட்டன் அவர்தம் முப்பாட்டன்
பாரில் எவரும் காணாப்பெண் !
கூட்டம் நடத்தி மானத்தைக்
கூவி இனிமேல் விற்போர்க்கும்
சாட்டை அடிதான் தப்பாது !
சற்றே இதனைச் சிந்திப்பீர் !
நாட்ட முடனே பொய்யின்றி
நாளும் உழைக்கும் பெண்ணுக்குச்
சூட்டப் பெயர்கள் தேடாதீர்
சூடு சுரணை அற்றோரே !
வாட்டும் துயர்கள் போக்காமல்
வாழ்வில் கொடுமை செய்வோர்க்கும்
வேட்டும் ஒருநாள் வைப்பாள்பார்
வெல்லும் பெண்மை இவ்வுலகை !..











.jpg)

















